Statcounter

Friday, May 22, 2026

வள்ளுவர் பார்வையில் பொருள்

 

வள்ளுவர் பார்வையில் பொருள்

முனைவர் இர. பிரபாகரன்

 

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையின்  குறிக்கோள்களாகக் கருதினார்கள் என்று ஏறத்தாழ இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் கூறுகிறது.  வள்ளுவரும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பகுதிகள் மட்டுமே  அடங்கியதாகத் திருக்குறளை இயற்றியுள்ளார். பொருள் என்ற சொல்லுக்கு அகராதி இருபத்தேழு விளக்கங்கள் அளிக்கிறது. அவற்றுள் ‘செல்வம்’ என்பதும் ஒன்று. பொருட்பாலில் ‘பொருள்’ என்ற சொல்லைச் ‘செல்வம்’ என்பதைக் குறிப்பதற்கு வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

மனித வாழ்க்கைக்குச் செல்வம் இன்றியமையாதது என்பதை வள்ளுவர் ”பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என்று குறிப்பிடுகிறார். உணவு, உடை, உறைவிடம் ஆகிய இன்றியமையாத தேவைகளுக்கு மட்டுமல்லாமல், விருந்தோம்பல், ஈகை, ஒப்புரவு போன்ற அறச்செயல்களைச் செய்வதற்கும், அருள் சேர்ந்த உள்ளத்தோடு அனைத்துயிர்களுக்கும் நன்மை செய்வதற்கும், இன்பமாக வாழ்வதற்கும் பொருள் தேவைப்படுகிறது என்பதைக் குறிப்பதற்காக அறத்துப்பாலுக்கும், இன்பத்துப்பாலுக்கும் நடுவில் பொருட்பால் வைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றனுள் ஒருவன் நடுவில் உள்ள பொருளைப் பெற்றால் அறமும் இன்பமும் அடைவான் என்ற கருத்து நாலடியாரிலும் கூறப்பட்டிருப்பது[1] குறிப்பிடத் தக்கது. 

சங்க காலத்தில் பிசிராந்தையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவர் வயதானவராக இருந்தாலும் அவருடைய தலையில் நரைமுடி இல்லாமல் இளமையான தோற்றத்தோடு இருந்தார். அவருடைய தோற்றத்தைக் கண்டு வியந்த சிலர், “ஐயா, வயதானவராக இருந்தாலும் தலையில் நரைமுடி இல்லாமல் நீங்கள் இளமையான தோற்றத்தோடு இருக்கிறீர்களே! அது எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”சிறப்பான என் மனைவியும், என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.” என்று விடை அளித்தார்[2].

பிசிராந்தையார் அளித்த விடையில், ஒருவன் மனக்கவலை இல்லாமல் நல்வாழ்வு வாழ்வதற்கு அவன் வாழும் நாட்டில், மன்னன் அறநெறி தவறாமல் நல்லாட்சி புரிவதோடு மட்டுமல்லாமல் குடிமக்களும் நல்லொழுக்கம் உடைய சான்றோர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்து அடங்கியுள்ளது.  பொருட்பாலில் வள்ளுவர் கூறும் கருத்துகள் பிசிராந்தையாரின் பாடலுக்கு விரிவான விளக்கம் அளிப்பதாகத் தோன்றுகிறது. ஒரு நாட்டு மக்கள் பொருளை ஈட்டுவதற்கும், ஈட்டிய பொருளை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் அந்த நாட்டு மன்னன் எத்தகைய குண்நலன்கள் உடையவனாக இருக்க வேண்டும் என்றும், அவன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும்  என்றும், அவன் சிறப்பாக ஆட்சி புரிவதற்கு அவனுக்கு உதவியாக இருப்பவை எவை என்றும் வள்ளுவர் பொருட்பாலில் கூறும் கருத்துகளை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். 

ஒருவன் பொருளை ஈட்டுவதற்கும், ஈட்டிய பொருளை அவன் அனுபவிப்பதற்கும்  அவன் வாழும் நாட்டின் மன்னன் முறையாக ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றுபவனாக இருக்க வேண்டும். மேலும், அந்த நாட்டில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்க வேண்டும். மன்னன் திறமை இல்லாதவனாக இருந்தாலும், அவனுடைய ஆட்சி செம்மையானதாக இல்லாவிட்டாலும், நாட்டில் குழப்பம், வறுமை, குற்றங்கள் ஆகியவை பெருகும். நாட்டில் குழப்பம் மிகுந்து அமைதி குறைந்தால், குடிமக்கள் வளமாகவும் நலமாகவும் வாழ்வது கடினம். நாட்டில் அமைதி குறைந்து, குழப்பம் அதிகரித்தால், அந்த நாட்டின்மீது பகைவர்கள் போரிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நாட்டில் போர் நடைபெற்றால் மக்களின் வாழ்க்கை பல இன்னல்களுக்கு உள்ளாகும். அந்தச் சூழ்நிலையுயில், பொருளை ஈட்டுவதும் ஈட்டிய பொருளை அனுபவிப்பதும் கடினம்.

மன்னன் முறையாக ஆட்சி செய்யாவிட்டால் நாட்டில் பொருளாதர நிலை சீர்குலைந்து வறுமை அதிகமாகும். நாட்டின் பொருளாதார நிலை சரியில்லாமல் வறுமை மிகுதியாக இருந்தால், மக்கள் பொருள்களை வாங்குவது குறையும். மக்கள் பொருள்களை வாங்குவது குறைந்தால் பொருள்களின் உற்பத்தி குறையும். பொருள்களின் உற்பத்தி குறைந்தால், பலருக்கும் வேலைவாய்ப்புகள் குறையும். பலர் வேலையில்லாமல் இருப்பதாலும், வணிகம் தேக்கம் அடைவதாலும், அரசுக்கு வரிகளிலிருந்து கிடைக்கும் வருமானம் குறையும். அரசுக்கு வருமானம் குறைந்தால் அரசு அதிக வரிவிதிக்க நேரிடும். நாட்டின் பணத்தின் மதிப்பு குறைந்து பணவீக்கம் (Inflation) அதிகமாகும். பணவீக்கம் அதிகமானால், பொருள்களின் விலை அதிகமாகும். அந்தச் சூழ்நிலையில் பொருள் ஈட்டுவது கடினம். ஈட்டிய பொருளை அனுபவிப்பதும் கடினம்.

பொருளாதர நிலை சிறப்பாக இருப்பதற்கும், மக்கள் வளமாகவும் நலமாகவும் வாழ்வதற்கும் மன்னன் திறமையுடைவனாகவும் நல்லாட்சி புரிபவனாகவும் இருப்பது இன்றியமையாதது. அதனால்தான் ”மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று சங்க காலப் புலவர் மோசிகீரனார் கூறுகிறர்[3]. அதாவது, மன்னன் ஒரு நாட்டுக்கு உயிர் போன்றவன் என்பது அவருடைய கருத்து.

நாடு என்ற அதிகாரத்தில், ஒரு நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தாலும், சிறப்பாக ஆட்சி புரியும் மன்னன் இல்லாவிட்டால், அந்த வளங்களால் பயனொன்றுமில்லை என்று,

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமைவு இல்லாத நாடு.       (குறள் 740)

என்ற குறளில் வள்ளுவர் கூறுவது  ஒரு நாட்டுக்கு மன்னன் உயிர் போன்றவன் என்ற கருத்தை  வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது. ஒரு நாட்டுக்கு மன்னன் முதன்மையானவனும் உயிர் போன்றவனும் ஆகையால், பொருட்பாலில் உள்ள முதல் 250 குறட்பாக்களில் மன்னன் எத்தகைய குணநலன்கள் உடையவனாக இருக்க வேண்டும் என்பதையும் அவன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதையும் வள்ளுவர் முதலில் விரிவாகக் கூறுகிறார்.

மன்னனுக்குரிய குணநலன்கள் எவை?

மன்னன் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி, அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சாமல், அறத்தோடும், விவேகத்தோடும்கூடிய வீரமும் துணிவும் உடையவனாக இருக்கவேண்டும்; ஊக்கத்தோடு, சோம்பலும் மறதியும் இன்றிக் காலம் தாழ்த்தாமல் பணியாற்ற வேண்டும்; கல்வியாலும், கேள்வியாலும் அறியவேண்டியவற்றை அறிந்து, தன்  அனுபவத்தையும் மனத்தில்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்; கண்ணோட்டத்தோடும், தாராளகுணத்தோடும், இரக்கத்தோடு ஈகையிலும், கொடையிலும் சிறந்து விளங்க வேண்டும்; மேலும், காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் பேசி, இடித்துரைப்போர் கூறுவனவற்றைப் பொறுமையோடு கேட்கும் பண்புடையவனாக இருக்க வேண்டும்; தன்னைவிட அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோரைத் துணையாகக்கொண்டு, சிறியாரோடு சேராமல், தன் சுற்றத்தாரோடு அன்போடு பழகி, அவர்களின் ஆதரவைப் பெறவேண்டும்; இடுக்கண்களைக் கண்டு மனம் தளராமல் விடாமுயற்சியோடு துணிந்து செயல்பட வேண்டும்.

 

மன்னன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும்?

பொருட்பாலில் மன்னனுக்குரிய குணநலன்களைக் கூறும் வள்ளுவர், மன்னன் எப்படிச் செயாலாற்ற வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறார். மன்னன் ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் அந்தச் செயலைப் பற்றி நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும்; குறிப்பாக, அந்தச் செயலைச் செய்வதற்கேற்ற வலிமை, காலம், இடம் ஆகியவற்றை ஆராய வேண்டும்; தான் முடிவெடுத்த செயலைச் செய்வதற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தச் செயலைச் செய்வதற்குத் தேவையான பொறுப்பையும் உரிமையையும் முழுமையாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்; பணியாட்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கு ஊதியமும் பரிசுகளும் அளிக்க வேண்டும்; நாட்டில் குற்றம் புரிபவர்களுக்கு அவர்களின் குற்றத்திற்கேற்ற தண்டனைகளை நடுவுநிலையோடு வழங்க வேண்டும்; எந்த வகையிலும் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கொடிய செயல்களைச் செய்யாமல், அவர்களுக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

 

மன்னர்களுள் சிறந்த மன்னன் யார்?

ஒரு மன்னன் மன்னர்களுள் சிங்கம் போன்றவன் – அதாவது மிகச் சிறந்த மன்னன் - என்று கருதப்பட வேண்டுமானால், அவன் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறும் உடையவனாக இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

 

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
                           (குறள் 381)

படை

ஒரு மன்னனிடம் படை இல்லை என்றால் அந்த மன்னனுடைய ஆட்சி நீடிக்காது. பகைவர்கள் அவனை எளிதில் வென்றுவிடுவார்கள்; கொலையும் செய்வார்கள். பகைவர்கள் அவனுடைய நாட்டைக் கைப்பற்றினால், அந்த நாட்டு மக்கள் துன்பத்திற்கு உள்ளாவார்கள். அந்த நாட்டின் பொருளும் வளமும் அந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாமல் பகைவர்களைச் சென்றடையும். படை ஒரு நாட்டுக்கு இன்றியமையாததாகையால், வள்ளுவர் எல்லா உறுப்புகளும் நிறைந்ததாய், இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றிதரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும் என்று கூறுகிறார்.

 

உறுப்பமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
                     (குறள் – 761)

காலத்துக்கேற்ப படையின் உறுப்புகள் மாறிக்கொண்டிருக்கும். வள்ளுவர் காலத்தில் காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை என்ற நான்கும் படையின் உறுப்புகளாக இருந்தன. இன்று பல நாடுகளில் காலாட்படை, விமானப்படை, கப்பற்படை என்று படையில் மூன்றுவகை உறுப்புகள் உள்ளன. அமெரிக்காவின் படையில் ஐந்து உறுப்புகள் உள்ளன. அவை: காலாட்படை(Infantry), கப்பற்படை (Navy), விமானப்படை (Air Force), கடற்படை (Marine), கடலோரக் காவற்படை (Coast Guard), விண்வெளிப்படை (Space Force). இக்குறளில் உள்ள “உறுப்பமைந்து” என்ற சொல், படையின் உறுப்புகளைக் குறிப்பிடாததால், அது எக்காலத்துக்கும் எந்நாட்டுக்கும் ஏற்றதாக உள்ளது.

குடி

குடி என்பது ஒரு நாட்டுக்  குடிமக்களைக் குறிக்கும். குடிமக்கள் இல்லாமல் ஒரு நாடு இல்லை. குடிமக்கள் நாட்டுப் பற்றுடையவர்களாக இருந்தால் அவர்கள் அந்த நாட்டின் நன்மைக்காக உழைப்பார்கள். குடிமக்கள் ஒற்றுமையாகவும், வறுமையில் உள்ளவர்களும் ஆதரவற்றவர்களும் தம்மிடம் வந்து கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களுக்குத் தயங்காமல் உதவி செய்பவர்களாகவும் இருந்தால், நாட்டில் அனைவரும் நலமாக வாழ்வது எளிது. நாடு என்ற அதிகாரத்தில், குறையாத விளைபொருளும், தக்க அறிஞர்களும், குறைவில்லாத செல்வம் உடைய செல்வந்தர்களும் உள்ள நாடே நாடாகும்  என்கிறார் வள்ளுவர்.

 

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
                         (குறள் 731)

இங்கு, தக்கார் என்ற சொல் என்பது அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம், மருத்துவம், கலை, கல்வி போன்ற பல துறைகளிலும் ஆற்றல் மிகுந்த அறிஞர்களையும், திறமையாகவும் கடுமையாகவும் உழைக்கும் தொழிலாளிகளையும் குறிப்பதாகக் கருதலாம். இது போன்ற அறிஞர்களும் தொழிலாளிகளும் ஒரு நாட்டில் இருந்தால், அந்த நாடு பல துறைகளிலும் சிறந்து விளங்கும்; நாடு முன்னேற்றம் அடையும்; நாட்டின் பொருளாதாரம் சிறந்தோங்கும்; பலருக்கும் வேலை வாய்ப்புகள் பெருகும். மக்கள் வளமாக வாழ்வார்கள்.

தாழ்விலாச் செல்வர் என்பது, தங்கள் செல்வத்தை முதலீடாக வைத்துத் தொழில் முனைவோர்களாகச் செயல்பட்டு, பல பொருள்களை உறபத்தி செய்து, வணிகம் செய்து, பலருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களைக் குறிப்பதாகக் கருதலாம். அத்தகைய தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும். உதாரணமாக, அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள், செல்வந்தர்களின் செயல்பாடுகளால் பெருமளவில் பொருளாதர முன்னேற்றம் அடைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

கூழ்

கூழ் என்ற சொல்லுக்கு மா முதலியவற்றால் குழையச் சமைத்த உணவு என்றும், பொருள் (செல்வம்) என்றும் அகராதி விளக்கம் அளிக்கிறது. இங்கு (குறள் 381ல்) கூழ் என்ற சொல்லைப் பொருள் (செல்வம்) என்ற பொருளில்தான் வள்ளுவர் பயன்படுத்துகிறார். நாட்டைப் பாதுகாப்பதற்குப் படையும் படைக்கருவிகளும் தேவை. படைவீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கும், படைக்கருவிகளை வாங்குவதற்கும் பொருள் இன்றியமையாதது.  சிறப்பான படையும் படைக்கருவிகளும் இருந்தால்தான் போரில் வெற்றிபெற முடியும். உதாரணமாக, அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகள் தங்கள் பொருள்வளத்தால் படைவலிமை மிக்க நாடுகளாக இருப்பதால், மற்ற நாடுகள் அந்த நாடுகளின்மீது போர் தொடுப்பதற்கு அஞ்சுகின்றன.  அதனால்தான், வள்ளுவர், “பொருளை ஈட்டுக! பகைவரின் செருக்கை அடக்குவதற்குப் பொருளைவிடக் கூர்மையான ஆயுதம் வேறொன்றும் இல்லை.” என்கிறார்.

 

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
                              (குறள் 759)

 

 

நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், நாட்டை ஆட்சிபுரிவதற்கும், மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் பொருள் இன்றியமையாததுதான். மன்னனுக்குப் பொருள் இன்றியமையாதது என்று கூறும் வள்ளுவர் ஒரு மன்னனுக்குரிய வருவாய் எந்தெந்த வழிகளிலிருந்து வருகிறது என்பதையும் கூறுகிறார். மக்கள் செலுத்தும் வரி, சுங்க வரி, தோல்வியுற்ற மன்னர்களிடமிருந்து கிடைக்கும் திறை (கப்பம்) ஆகிய மூன்றும் மன்னனின் பொருள் என்பது வள்ளுவரின் கருத்து. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருள்கள்மீதான வரி (Customs Duty), வணிகர்கள் விற்பனை செய்வதற்காக ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குக் கொண்டு செல்லும் பொருள்கள்மீதான வரி  ஆகிய இரணடும் சுங்க வரி என்று வள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே அழைக்கப்பட்டன.

 

வருவாய் வரும் துறைகளைக் கூறும் வள்ளுவர், மக்களிடமிருந்து பெறும் வரி, சுங்க வரி, திறை ஆகியவற்றைச் சேகரிக்கும்பொழுது, அவற்றை அறவழியில் சேகரிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். தீமை ஒன்றும் இல்லாமல் சேகரிக்கப்பட்ட பொருள் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும் என்பது வள்ளுவரின் கருத்து.

 

அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்.
                           (குறள் 754)

இங்கு, ”தீதின்றி வந்த பொருள்” என்பது ”அறவழியில் சேகரிக்கப்பட்ட பொருள்” என்பதைக் குறிக்கிறது. அறவழியில் சேகரித்த பொருள் இன்பத்தைத் தரும் என்று கூறும் வள்ளுவர், ஒரு மன்னன் மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேகரிப்பது, வேல் ஏந்தி நிற்கும் கள்வன்,”கொடு” என்று கேட்டுத் துன்புறுத்துவதைப் போன்றது என்கிறார்.


வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
                        (குறள் 552)

”கொடுங்கோலனாக, முறையற்ற ஆட்சி செய்து மன்னன் மக்களைத் துன்புறுத்தினால், அத்துன்பத்தால் மக்கள் வருந்தி அழுது  சிந்திய கண்ணீர் அவனுடைய செல்வத்தை  அழிக்கும் படை அல்லாவா” என்று கேட்கிறார் வள்ளுவர்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
                    (குறள் 555)

சுருங்கச் சொன்னால், நாட்டை ஆட்சி செய்வதற்கு மன்னனுக்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் இருந்தால்தான் பகைவர்களை வெல்ல முடியும். ஆனால், அந்தப் பொருள் அறவழியில் சேகரிக்கப்பட வேண்டும். அறமற்ற முறையில் மக்களைத் துன்புறுத்திப் பெற்ற பொருள் மன்னனின் செல்வத்தை அழிக்கும். பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்ஸ் நாட்டை  ஆட்சிசெய்த பதினாறாம் லூயி (Louis XVI, 1774 - 1792) என்ற மன்னனின் வாழ்க்கை வரலாறு,  மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேகரித்தால் அது மன்னனுக்குத்  தீங்கு விளைவிக்கும் என்று வள்ளுவர் கூறுவதற்கு எடுத்துக்காட்டு. பதினாறாம் லூயி, வருமானத்துக்கும் அதிகமாகச் செலவு செய்தான். மற்ற நாடுகளிலிருந்து கடன் வாங்கினான். நாட்டின் பொருளாதர நிலை சீர் குலைந்தது. அளவுக்கு மீறி வரிவிதித்து மக்களைத் துன்புறுத்தினான். மக்கள் கொதித்து எழுந்தனர்; ஃபிரெஞ்சுப் புரட்சி  தோன்றியது. பதினாறாம் லூயியும் அவன் மனைவியும் கொலைசெய்யப்பட்டார்கள். இங்கிலாந்தை ஆட்சி செய்த ஜான் (king John, 1199-1216) என்ற மன்னன் மிக அதிகமாக வரிவிதித்ததால் எழுந்த புரட்சியால் மேக்ன கார்ட்டா (Magna Carta) என்ற சாசனத்தில் கையெழுத்திட்டுத் தன் அதிகரத்தில் பெரும்பங்கைப் பாராளு மன்றத்துக்கு அளிக்க நேரிட்டது. சீனாவின் பேரரசன் கின் ஷி ஹுவாங் (Emperor Qin Shi Huang, 221- 210 BCE) என்பவன் சீனாவின் பெருஞ்சுவர் கட்டுவதற்கும், வேறு சில திட்டங்களுக்கும் தேவையான பொருளுக்காக மக்களுக்கு அதிகமான வரிவிதித்து, மக்களைத் துன்புறுத்தினான். அவன் இறந்த பிறகு, அவன் சந்ததியினரின் ஆட்சி நீடிக்கவில்லை. இவர்களைப் போல், அதிக வரிவிதித்து மக்களைக் கொடுமைப்படுத்திய கொடுங்கோலர்கள் பலரும் நிலைத்து ஆட்சிபுரியவில்லை என்பது வரலாறு கூறும் செய்தி.

பொருளை எப்படி நிர்வகிப்பது என்பதைப் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். மன்னன் அல்லது ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், பல வழிகளிலும் பொருளைச் சேகரிக்க வேண்டும், சேகரித்த போருளைத் திரட்ட வேண்டும், திரட்டிய பொருளைப் பாதுக்காக்க வேண்டும், பாதுகாத்தப் பொருளை மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு வகுத்து வழங்க வேண்டும் என்பது வள்ளுவரின் அறிவுரை.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
.                        (குறள் 385)

இயற்றல் என்பது பல வழிகளில் வருவாயைப் பெருக்குவதைக் குறிக்கும். உதாரணமாக, தரிசு நிலத்தை விளை நிலமாக ஆக்குவதற்கு அரசு உதவி செய்தால் அந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வரி, நாட்டின் வருவாயைப் பெருக்கும். புதுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால், வருவாயைப் பெருக்கலாம். இதுபோல் புது வருவாய் வரும் வழிகளை ஆராய்ந்து, வருமானத்தைப் பெருக்குவதைத்தான் வள்ளுவர் இயற்றல் என்று குறிப்பிடுகிறார். ஈட்டல் என்பது பல துறைகளிலிருந்து வரும் வருமானம் அனைத்தையும் சேர்த்தல். காத்தல் என்பது, ஈட்டிய பொருளைப் பாதுகாப்பதையும், சேகரித்த பொருளை வீண் செலவு செய்யாமல் பதுகாப்பதையும் குறிக்கும். வகுத்தல் என்பது, மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பொருளைப் பங்கீடு செய்வது. இந்தக் குறளில் வள்ளுவர் கூறும் கருத்துகளுக்கும் இன்று”நிதி இயல்” (Public Fnance) என்ற துறையில் உள்ள கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பது குறிப்பிடத் தக்கது.

அமைச்சு

இங்கு, அமைச்சு என்பது அமைச்சரவையைக் குறிக்கிறது. மன்னனுக்குத் துணையாக இருந்து, அவனுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறுவதும், அவன் எடுத்த முடிவுகளைத் திறமையுடன் செயல்படுத்துவதும் அமைச்சர்களின் தொழில். அமைச்சர்கள் ஒரு செயலைச் செய்யும்பொழுது, அந்தச் செயலை நன்கு திட்டமிட்டு, அதற்கான கருவிகளைச் சேகரித்து, நடைமுறைப்படுத்தும் காலத்தைக் கணித்து, செயல்வகைகளைச் சிந்தித்துச் செய்ய வேண்டும்.  கருவி என்பது பொருள், மனிதவளம் போன்ற வளங்களைக் (ressources) குறிக்கிறது.  காலம் என்பது செயல் தொடங்கி முடிக்குங் காலத்தைக் குறிக்கிறது.

 

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
      (குறள் 631)

இக்குறள் கூறும் கருத்தை மேலாண்மை அறிஞர்கள் ஆதார வளங்களைத் திட்டமிடுதல், தொழில் வளர்ச்சிக்கான கொள்கைகள் வகுத்தல் (Resource Planning & Strategic Business Process Management) என்று குறிப்பிடுவர்.

அமைச்சர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்பொழுது, மன்னனுக்குத் துணையாக இருப்பவர்களிடமும், அவனுக்குப் பகையாக இருப்பவர்களிடமும் மன்னன் சார்பாகப் பேசவேண்டியதாக இருக்கும். சில சமயங்களில் தனி ஒருவரிடமும், சில சமயங்களில் பலர் முன்னிலையில் ஓர் அவையில் பேச வேண்டியதாகவும் இருக்கும். ஆகவே, அமைச்சர்களுக்குச் சொல்லாற்றல் தேவை. தாம் சொல்பவற்றைச் சுருக்கமாகவும், தெளிவாகவும், கேட்பவர்களும் கேட்காதவர்களும் விரும்பும் வண்ணம் கேட்பவர்களின் தகுதி அறிந்து, சொல்ல வேண்டியதை அஞ்சாமல் சொல்ல வேண்டும்.

மன்னனுடைய ஆட்சி சிறப்பாக அமைவதற்கு அமைச்சர்கள் அறிவு, ஆற்றல், மனவுறுதி ஆகியவற்றோடு குற்றமற்ற செயல்களைச் செய்து அரசனுக்குப் புகழும் நன்மையும் பயக்கும் வகையில் தம் கடமைகளைச் செய்யவேண்டும் என்ற கருத்து அமைச்சியலில் உள்ள வினைத்திட்பம், வினைத் தூய்மை, வினைசெயல்வகை என்ற அதிகாரங்களில் காணப்படுகிறது.

மொகலாயப் பேரரசன் அக்பர் முறையாகக் கல்வி கற்காதவனாக இருந்தாலும், அவனுடைய ’நவரத்னா’ என்று அழைக்கப்பட்ட அமைச்சரவையில் இருந்த ஒன்பது அமைச்சர்களின் ஆலோசனகளாலும், திறமையான செயல்களாலும் அவனுடைய ஆட்சி சிறப்பானதாக இருந்தது என்பது, ஒரு மன்னனின் சிறப்பான ஆட்சிக்கு நல்ல அமைச்சர்கள் இன்றியமையாதவர்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

 

நட்பு

ஒருவனுக்கு நல்ல நண்பர்கள் இருந்தால், அவனுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அவனுடைய நண்பர்கள் ”உடுக்கை இழந்தவன் கைபோல்,” சற்றும் தயங்காமல் உதவி செய்வார்கள். அதுபோல், ஒரு நாட்டுக்கு நட்போடு உள்ள நாடுகள் இருந்தால், அந்த நாட்டின்மீது பகைவர்கள் போர் தொடுத்தால் அல்லது ஏதாவது ஒரு கேடு ஏற்பட்டால், நட்பு நாடுகள் உதவி செய்யும். ஐரோப்பாவில் உள்ள 31 நாடுகள் ஒன்று சேர்ந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO - North Atlantaic Treaty Organization)) என்ற ஓர் அமைப்பை உருவாக்கித் தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன. அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளிடையே ஒற்றுமை நிலவுகிறது. அந்த அமைப்பைச் சாராத ஒரு நாடு அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள ஒரு நட்டின்மீது போர்தொடுத்தால், அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து, அந்த நாட்டுக்குத் துணையாகப் போரிடும். வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பைப்போல், ஐரோப்பாவில் 27 நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்று ஓர் அமைப்பை உருவாக்கி, அந்த நாடுகளிடையே மக்கள் போக்குவரத்து, வணிகம், போன்றவை இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒரேவகையான நாணயங்கள் பயன்பாட்டில் இருப்பது அந்த நாடுகளிடையே வணிகத்துக்கும் மக்கள் போக்குவரத்துக்கும் பேருதவியாக உள்ளது. ஒரு நாட்டுக்கு நட்பு நாடுகள் தேவை என்று வள்ளுவர் கூறும் கருத்துக்கு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு,  ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகள் சிறந்த எட்டுத்துக்காட்டாக உள்ளன.

 

அரண்

குளத்துக்கும் ஏரிக்கும் கரை இருப்பதைபோல், ஒரு நாட்டுக்கும் எல்லை வேண்டும், அந்த எல்லையைப் பாதுகாக்கப்பதற்கு அரண்கள் தேவை. நாட்டுக்கு அரண் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பல அரிய கருத்துகளை அரண் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார், ஒரு நாட்டில் அரண்கள் இல்லையென்றால்  பகைவர்கள் அந்த நாட்டிற்குள் நுழைவது எளிது. சங்க காலத்தில், பாரி என்ற குறுநில மன்னனுக்கு, அவன் நாட்டில் இருந்த பறம்புமலை, சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒன்றுசேர்ந்து அவன் நாட்டின்மீது படையெடுத்தபொழுது, அவர்களைத் தடுப்பதற்கேற்ற சிறந்த அரணாக இருந்தது.  ஒரு நாட்டில் வலிமையான அரண் இல்லாவிட்டால், பகைவர்கள் மட்டுமல்லாமல், மற்ற நாட்டு மக்களும் அந்த நாட்டுக்குள் எளிதாக நுழைய முடியும். பகைவர்களைத் தடுப்பதற்கும், அயல் நாட்டு மக்கள் தம் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும் சீனாவில், ஏழாம் நூற்றாண்டில் பெருஞ்சுவர் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுப் பதினேழாம் நூற்றண்டில் முடிவடைந்தது. இன்று, அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக அயல்நாட்டு மக்கள் நுழைவதைத் தடுப்பதற்கு சுவர் எழுப்பப்படுகிறது.

 

பொருட்பாலின் சிறப்புகள்

திருக்குறள் ஒரு நீதிநூல். அது ஒரு நீதிநூலாக இருந்தாலும், அதில், “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு”, “செய்க பொருளை” என்று கூறிப் பொருளின் இன்றியமையாமையை வள்ளுவர் வலியுறுத்துகிறார். மேலும் பொருளைப் பற்றிப் பல அரிய கருத்துகளும் திருக்குறளில் உள்ளன. உலகிலுள்ள வேறு எந்த நீதிநூலிலும் காணமுடியாத அளவுக்குப் பொருளைப் பற்றி இத்துணை விரிவான மற்றும் தெளிவான கருத்துகள் அடங்கியிருப்பது பொருட்பாலின் தனிச்சிறப்பு.

ஒருவன் ஐம்பது வயதுவரை உடற்பயிற்சி மட்டுமல்லாமல் இசை, அளவியல் (Geometry), வானியல் (Astronomy), மற்றும் தர்க்கம் (Logic) போன்றவற்றைக் கற்று, நிர்வாகத்தில் அனுபவமும் பெற்ற பிறகுதான் தத்துவஞானி என்னும் தகுதியைப் பெறுகிறான் என்கிறார் கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ[4].  அவ்வாறு தத்துவஞானியான ஒருவன்தான் நாட்டின் தலைவனாக வேண்டும் என்பது பிளேட்டோவின் கருத்து.  முடியாட்சியிலும், குடியாட்சியிலும் பிளேட்ட்டோவின் கருத்துப்படி தலைவனைத் தேர்ந்தெடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. தலைவனுக்குரிய குணநலன்களையும் அவன் ஆட்சி செய்ய வேண்டிய முறையைப் பற்றியும்  பல கருத்துகளை வள்ளுவர்  கூறினாலும், அத்தகைய தகுதியுடையவன்தான்  தலைவனாக வேண்டும் என்று வள்ளுவர் கூறவில்லை. ஒருவனுக்குத் தலைவனாகும்பொழுது அத்தகைய தகுதிகள் இல்லையென்றால், தலைவனாகப் பதவி ஏற்ற பிறகு அவன் அவற்றைப் பெற்றுக்கொண்டு, அமைச்சர்களின் உதவியோடு ஆட்சிபுரியலாம் என்று வள்ளுவர் கருதுவதாகத் தோன்றுகிறது. வள்ளுவரின் கருத்து முடியாட்சியிலும் குடியாட்சியிலும் நடைமுறையில் சாத்தியமாகக் கூடிய ஒன்று. உதாரணமாக, மொகலாயப் பேரரசன் அக்பர் பதின்மூன்று வயதில் பதவிக்கு வந்து 49 ஆண்டுகள் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தான். இரண்டாம் சொபுசா(Sobhuza II) என்பவன் குழந்தையாக இருக்குபொழுதே மன்னனாகப் பதவி ஏற்று, இப்பொழுது எஸ்வண்டினி (Eswatini) என்று அழைக்கப்படும் சுவாசிலாந்து (Swaziland) என்ற நாட்டை 83 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தான். இவர்களைப்போல், சிறுவயதிலெயே பதவிக்கு வந்து சிறப்பாக ஆட்சி புரிந்தவர்கள் பலர். ஆகவே, பொருட்பாலில் மன்னனைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள் கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோவின் கருத்துகளைவிடச் சிறப்பானவையாகவும், முடியாட்சிக்கும் குடியாட்சிக்கும் ஏற்றவையாகவும் உள்ளன.

 

பொருட்பாலில் வள்ளுவர் கூறும் பல கருத்துகள் மன்னனுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஏற்றவை. உதாரணமாக கல்வி, கேள்வி, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றம்தழால், தெரிந்துசெயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், பொச்சாவாமை, ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை போன்ற அதிகாரங்களில் வள்ளுவர் கூறும் கருத்துகள் மக்கள் அனைவருக்கும் ஏற்றவை.

 

அறத்துபாலில் வள்ளுவரை ஒரு  தத்துவஞானியாகக் காண்கிறோம். பொருட்பாலில் பொருளாதரம்(Economics), அரசியல் அறிவியல்(Political Science), பொது நிதியியல்(Public Finance), பொது நிர்வாகம்(Public Administration), சமூகவியல்(Sociology), மேலாண்மை(Management), வேளாண்மை (Agriculture)போன்ற பல துறைகளிலும் வள்ளுவர் ஓர் அறிஞர் என்பதைக் காண்கிறோம்.

 

பொருளுக்கும் இன்பத்திற்கும் அறம் அடித்தளம் என்பது வள்ளுவரின் கருத்து. அதுபோல், அறத்திற்கும் இன்பத்திற்கும் பொருள் தேவை என்பதும் வள்ளுவரின் கருத்து. அறமும் இன்பமும் இல்லாமல் மனிதன் வாழ முடியும். ஆனால், பொருளில்லாமல் மனிதன் வாழ முடியாது என்பது குறிப்பிடத் தக்கது. 

 

பொருட்பாலில் வள்ளுவர் கூறும் கருத்துகள் அரசுக்கு மட்டுமல்லாமல், தற்கால நிறுவனங்களுக்கும் தனி மனிதர்களுக்கும் பொருந்துவதாக அமைந்திருப்பது[5] பொருட்பாலின் சிறப்புகளில் ஒன்று.


பின்னிணைப்பு

பொருட்பாலில் வள்ளுவர் கூறும் கருத்துகள் இன்றைய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

 

அறவழியில் பொருள் சேகரிக்க வேண்டும் என்பதைப் பொருட்பாலில் வள்ளுவர் வலியுறுத்துகிறார். தீமை ஒன்றும் இல்லாமல் சேகரிக்கப்பட்ட பொருள் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும் என்பது வள்ளுவரின் கருத்து.

 

அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்.
                           (குறள் 754)

இங்கு, ”தீதின்றி வந்த பொருள்” என்பது ”அறவழியில் சேகரிக்கப்பட்ட பொருள்” என்பதைக் குறிக்கிறது. வள்ளுவரின் இந்த அறிவுரை மன்னனுக்கு மட்டுமல்லாமல்  ஒரு நிறுவனத்தின் தலைவனுக்கும் பொருந்தும். ஒரு நிறுவனம் தரமற்ற பொருள்களைத் தயாரித்து விற்பதும், கொடுக்க வேண்டிய அளவுக்குக் குறைவாகக் கொடுப்பதும், அதிக விலைக்குப் பொருள்களை விற்பதும் நுகர்வோருக்குத் தீங்கு விளைவிப்பதால் அவை அந்த நிறுவனத்தின் அறமற்ற செயல்களாகும். அத்தகைய செய்களைச் செய்யாமல் நிறுவனம் பொருளீட்ட வேண்டும் என்பதை வள்ளுவர் நிறுவனங்களுக்குக் கூறும் அறிவுரையாகக் கருதலாம்.

”கொடுங்கோலனாக, முறையற்ற ஆட்சி செய்து மன்னன் மக்களைத் துன்புறுத்தினால், அத்துன்பத்தால் மக்கள் வருந்தி அழுது  சிந்திய கண்ணீர் அவனுடைய செல்வத்தை  அழிக்கும் படை அல்லாவா” என்று கேட்கிறார் வள்ளுவர்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
                    (குறள் 555)

இந்தக் குறளில் வள்ளுவர் கூறும் எச்சரிக்கை தற்கால நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஒரு நிறுவனம் நுகர்வோருக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களைத் தயாரித்து விற்றாலோ, எந்த வகையிலாவது நுகர்வோரை ஏமாற்றினாலோ, அந்த நிறுவனத்தின்மீது அரசு நடவடிக்கை எடுத்துத் தண்டனைகளை விதிக்கும். நுகர்வோர் அந்த நிறுவனத்தின்  பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பார்கள். அதனால், அந்த நிறுவனத்தின் வருமானம் குறையும். வருமானம் குறைந்தால், அந்த நிறுவனம் நிலைத்து நீடிக்க முடியாது.

படை, குடி, கூழ் (செல்வம்), அமைச்சு, நட்பு மற்றும் அரணும் உடைய மன்னன் மன்னர்களுள் சிங்கம் போன்றவன் என்கிறார் வள்ளுவர்.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
      (குறள் 381)

ஒரு மன்னன் சிறப்பானவனாகக் கருதப்பட வேண்டுமானால் அவன் படை, குடி, செல்வம், அமச்சர்கள், நட்பு நாடுகள் மற்றும் அரண் ஆகிய ஆறும் உடையவனாக இருக்க வேண்டும் என்று  வள்ளுவர் கூறும் கருத்து, தற்காலத்தில் ஒரு நிறுவனத்தின் தலைவனுக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பது வியக்கத் தக்கதாக உள்ளது.

மன்னன்: நாட்டிற்கு  மன்னன் – நிறுவனத்திற்குத் தலைவன்(President/CEO)

ஒரு நாட்டிற்குத் தலைவன் மன்னன். நிறுவனத்தில் மன்னனுக்கு இணையாக இருப்பவன் அந்த  நிறுவனத்தின் தலைவன் (President/CEO).

படை:   நாட்டிற்கு இராணுவம் – நிறுவனத்திற்கு வழக்கறிஞர்கள் மற்றும் சந்தைப்படுத்தும் உத்திகளில் வல்லுநர்கள்(Marketing Strategists)

 ஒரு நாட்டிற்குப் பகைநாடுகள் இருப்பதைப்போல், ஒரு நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களை அந்த நிறுவனத்தின் பகைநிறுவனங்களாகக் கருதலாம். ஒரு நிறுவனத்தின் பொருள்களைப்போல் ஒரு போட்டி நிறுவனம் பொருள் தயாரித்து அதைக் குறைந்த விலைக்கு விற்றால் அந்த நிறுவனத்தின் வருமானம் குறையும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் பகைநிறுவனத்தின் நுகர்வோராக மாறக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர்கள், பகைநிறுவனம் தங்கள் நிறுவனத்தின் காப்புரிமை உரிமைகளை(காப்புரிமை உரிமைகள் – Patent Rights) மீறியதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வார்கள். பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் உத்திகளில் வல்லுநர்கள் பகை நிறுவனத்தைப் போட்டியில் தோற்கடிப்பதற்கான தந்திரங்களைக் கையாள்வார்கள். ஆகவே, வழக்கறிஞர்களையும் சந்தைப்படுத்தும் உத்திகளில்  வல்லுநர்களையும் ஒரு நிறுவனத்தின் படையாகக் கருதலாம்.

குடி: நாட்டிற்குக் குடிமக்கள் – நிறுவனத்திற்கு நுகர்வோர்

ஒரு மன்னனுக்கு அவன் நாட்டு மக்கள் குடிமக்கள். ஒரு நிறுவனத்தின் தலைவனுக்கு அவனுடைய நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துபவர்களை (நுகர்வோரை) குடிமக்களாகக் கருதலாம்.

 

கூழ் (செல்வம்): ஒரு நாட்டிற்குச் செல்வம் – நிறுவனத்திற்கும் செல்வம்

ஒரு நாட்டுக்குச் செல்வம் இன்றியமையாதது. அதுபோல் ஒரு நிறுவனத்துக்கும் செல்வம் இன்றியமையாதது. ஓர் அரசனுக்கு மக்கள் செலுத்தும்  வரி, சுங்க வரி, தோல்வியுற்ற பகைவர்கள் கொடுக்கும் திறை போன்ற வகைகளில் வருமானம் வருவதைப்போல, பொருள்களை  விற்பதினால் வரும் இலாபம், நிறுவனத்தின் பங்குகளை விற்பதினால் கிடைக்கும் வருமானம், வங்கியில் உள்ள பணத்துக்கு வட்டி போன்ற பல  வகைகளில் ஒரு நிறுவனத்துக்கு வருமானம் வரலாம். ஒரு மன்னன் பொருளை இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் ஆகியவற்றைச்  செய்வதைப்போல், ஒரு நிறுவனத்தின் தலைவனும் பல வகைகளிலும் பொருளை இயற்ற வேண்டும்; இயற்றிய பொருளைச் சேர்க்க வேண்டும்; சேர்த்த பொருளைப் பாதுககாக்க வேண்டும்; பாதுகாத்தப் பொருளை நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், பங்குதாரர்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவும் பயன்படுத்த வேண்டும். செல்வத்தை வகுத்துப் பங்கீடு செய்வதில் ஓர்  அரசனின் நோக்கத்திற்கும், ஒரு நிறுவனத்தின் தலைவனின் நோக்கத்திற்கும் ஒரு  வேற்றுமை உள்ளது. மன்னன் செல்வத்தைக் குடிமக்களின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும். ஆனால், நிறுவனத்தின் தலைவன் நுகர்வோரின் நலத்திற்காகப் பயன்படுத்த வேண்டியதில்லை.

 

அமைச்சு: நாட்டிற்கு அமைச்சர்கள் – நிறுவனத்திற்குத் துணைத்தலைவர்கள்
மன்னன் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்தும் அமைச்சர்களைப்போல், நிறுவனத்தின் தலைவரின் முடிவுகளைச் செயல்படுத்துபவர்கள் அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர்கள் (Vice Presidents). ஆகவே, ஒரு நிறுவனத்தின் துணைத்தலைவர்களை மன்னனின் அமைச்சர்களுக்கு இணையானவர்களாகக் கருதலாம்.

நட்பு: நாட்டிற்கு நட்பு நாடுகள் – நிறுவனக்களுக்கு நட்பு நிறுவனங்கள்

ஒரு நாட்டிற்கு நட்பு நாடுகள் இருந்தால் அந்த நாட்டைப் பகைவர்கள் தாக்கினால் பகைநாடுகள் அந்த நாட்டிற்குத் துணையாகப் போரிடும். ஒரு நாட்டிற்கு இயற்கைச் சீற்றங்களால் கேடு விளைந்தால் நட்பு நாடுகள் உதவி செய்யும். நாட்டிற்கு நட்பு நாடுகள் இருப்பதைப்போல் ஒரு நிறுவனத்திற்கு, அந்த நிறுவனத்திற்குத் தேவையான பொருள்களை  வழங்கும் நிறுவனங்கள் (Suppliers), ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்கள் (contractors) , நிறுவனத்திடமிருந்து பொருளை வாங்கிச் சந்தைக்குக் கொண்டு செல்லும் இடைநிலை வணிக நிறுவனங்கள்(Distributors), நிறுவனத்தோடு தொடர்புள்ள வங்கிகள் ஆகியவற்றை நட்பு நிறுவனங்களாகக் கருதலாம்.

 

அரண்: நாட்டிற்கு மலைகள், காடுகள், கடல்கள், மதிற்சுவர்கள் - நிறுவனங்களுக்குக்  காப்பீடு, காப்புரிமைகள், பாதுகாப்புக் கருவிகள் போன்றவை

ஒரு நாட்டிற்கு மலைகள், கடல்கள், காடுகள் மதிற்சுவர்கள் போன்றவை வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து நாட்டை பாதுகாக்கின்றன. இதேபோல், நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அமைப்புகள் தேவைப்படுகின்றன. இயற்கை அரண்களுக்குப் பதிலாக, நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது வணிகக் காப்பீடு (Business Insurance), காப்புரிமைகள்(copyrights, Patent rights), பகைமை கொண்ட நிறுவனங்களின் கையகப்படுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் விதிமுறைகள்(provisons against hostile takeover), மேலும் நிறுவன வளாகங்களையும் சொத்துகளையும் பாதுகாக்கும் பாதுகாப்பு அமைப்புகள்( security devices)  போன்றவை  ஆகும்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த வள்ளுவர் மன்னனின் குணநலன்களைப் பற்றியும், அவன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் திருக்குறளில் கூறும் கருத்துகள் தற்கால நிறுவனத்தின் தலைவனுக்கும் பொருத்தமானவையாக உள்ளன என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக உள்ளது. இத்தகைய சிறப்புகளால்தான் திருக்குறள் எக்காலத்துக்கும் எந்நாட்டவர்க்கும் ஏற்ற நூலாகக் கருதப்படுகிறது.



[1]. வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர். (நாலடியார் 114)

உலகில் நில்லைபெற்றிருப்பவை
 அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று. வற்றில் நடுவில் உள்ளதாகிய பொருள் ஒருவனுக்கு இருக்குமாயின், அறம் செய்தலும், இன்பம் துய்த்தலும் பெறலாகும். அந்தப் பொருள் இல்லாதவன் உலை நீரில் இட்டுச் சுடவைத்த ஆமையைப் போன்ற  துயரம் அடைவான். 

 [2] . புறநானூற்றுப் பாடல் 191

[3]. நெல்லும் உயிர்அன்றே; நீரும் உயிர்அன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால், யான்உயிர் என்ப தறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

                                (மோசிகீரனார், புறநானூறு, 186)

 

பொருள்: இவ்வுலகுக்கு நெல்லும் நீரும் உயிரல்ல. இவ்வுலகம் மன்னனையே உயிராக உடையது. அதனால், தான் இந்தப் பரந்த உலகுக்கு உயிர் (போன்றவன்) என்பதை அறிந்து கொள்வது (மிகுந்த வேல்களுடன் கூடிய படைகளையுடைய) மன்னனின் கடமையாகும்.

 [4] . Plato, Republic, trans. C. D. C. Reeve (Indianapolis: Hackett, 2004), 473c–d.

[5] . பொருடபாலில் வள்ளுவர் கூறும் கருத்துகள் எவ்வாறு தற்கால நிறுவனங்களுக்கும் ஏற்றவையாக உள்ளன என்பதைப் பற்றிய விரிவான விளக்கத்தைப் பின்னிணைப்பில் கணலாம்.

Friday, February 20, 2026

வள்ளுவர் பார்வையில் அறம்

 

வள்ளுவர் பார்வையில் அறம்

முனைவர் இர. பிரபாகரன்

முன்னுரை

பல்வேறு நாகரிகங்களில், சிந்தனையாளர்கள் ஓர் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதன் பொருள் என்ன என்பதை விளக்க முயன்றுள்ளனர். கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் (Aristotle 384 – 322 கி.மு), சுயக்கட்டுப்பாடு (self-control), நெஞ்சுரம் (courage) மற்றும் மிதவாதம் (moderation) போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் மூலம் நற்பண்பு வளர்க்கப்படுகிறது என்றும், இந்தக் குணங்கள் மனிதர்கள் சிறப்பாக வாழவும் செழிக்கவும் உதவுகின்றன என்றும் நம்பினார். ஜெர்மானியத் தத்துவஞானி இம்மேனுவெல் கான்ட் (Immanuvel Kant 1724-1804 கி.பி.), தனிப்பட்ட நன்மைக்காகவோ அல்லது தண்டனைக்கு அஞ்சியோ அல்லாமல், ஒரு செயல் சரியானது என்பதற்காகவே தனது கடமைகளைச் செய்வதில்தான் நற்பண்பு அடங்கியுள்ளது என்று வாதிட்டார். ரோமானிய தத்துவஞானியான மார்க்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius 161-180 கி.பி.), நற்பண்பு என்பது உள் ஒழுக்கம் (inner discipline), ஒருவரின் ஆசைகளின் மீதான கட்டுப்பாடு, மற்றும் துன்பத்தின் போதும் பகுத்தறிவின்படி வாழ்வது ஆகியவற்றைக் குறிக்கிறது என்று கற்பித்தார். சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸ் (Confucius 551 – 479 கி.மு.) அன்றாட உறவுகளில் நற்பண்புக்கு முக்கியத்துவம் அளித்து, கருணை, மரியாதை மற்றும் முறையான நடத்தை ஆகியவை சமூக நல்லிணக்கத்திற்கு அவசியமானவை என்று கருதினார். வைதிக மதத்தைச் சார்ந்த மனு என்பவர் மனுஸ்மிருதியில் கூறும் தர்மம் என்பது அனைவருக்கும் பொதுவானதன்று. அது ஒவ்வொரு குலத்துக்கும் வெவ்வேறு தர்மத்தைப் போதிக்கிறது.

திருக்குறளில் திருவள்ளுவர் கூறும் அறம் பற்றிய கருத்து, இந்தச் சிந்தனையாளர்களின் கருத்துகளுடன் சில ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், முக்கியமான வழிகளில் அவர்களிடமிருந்து வேறுபடுகிறது. அரிஸ்டாட்டிலைப் போலவே, வள்ளுவரும் தன்னடக்கம் நல்லொழுக்கம் ஆகியவை தேவை என்று கருதுகிறார்; கன்ஃபூசியஸைப் போலவே, வள்ளுவர் அன்பு, நட்பு, அருள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்; மேலும் மார்க்கஸ் அரேலியஸைப் போலவே, வள்ளுவர் அக ஒழுக்கம், மன வலிமை ஆகியவற்றை வலியுறுத்துகிறார். இருப்பினும், காண்டின் கடுமையான விதி அடிப்படையிலான ஒழுக்கவியல் அல்லது மதக் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்ட நெறிமுறைகளைப் போலன்றி, வள்ளுவர் அறத்தை அன்றாட வாழ்வில் வேரூன்றிய நல்லொழுக்காமாகக் கருதுகிறார். வள்ளுவரின் அறத்தைப் பற்றிய கருத்து மனு என்பவர் மனுஸ்மிருதியில் கூறும் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வள்ளுவர் மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுதான் அறம் என்று கூறுகிறார். வள்ளுவர் கூறும் அறம் உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்துக்கும் ஏற்றது. இக்கட்டுரை, வள்ளுவர் கூறும் அறம் என்னும் ஒழுக்க நெறியைப் பற்றியும், மனிதர்களின் நல்வாழ்கைக்கு அது எப்படிப் பயனுடையதாக உள்ளது என்பதையும்  விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

இல்வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வள்ளுவர் கூறும் அறிவுரைகள்

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில், இல்வாழ்க்கையில் இருப்பவன் தன் மனைவி, மக்கள், பெற்றோர் ஆகிய மூவர்க்கும் துணையாக இருக்க வேண்டும் என்றும், துறவிகள், வாழ்க்கையை அனுபவிக்க முடியாதவர்கள், வாழ்க்கைப் பாதையிலிருந்து தவறியவர்கள், இறந்த முன்னோர்கள், தெய்வம், விருந்தினர்கள், சுற்றத்தார் ஆகியயோருக்கும் துணையாக  இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.  அது மட்டுமல்லாமல் தன்னையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது இலவாழ்க்கையில் இருப்பவனின் கடமை என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

கற்பு நெறியிலிருந்து தவறினால் அது தன் கணவனுக்கும் தன் குடும்பத்துக்கும் தான் இழைக்கும் தீமை என்பதை உணர்ந்து,  மனைவி கற்பிற் சிறந்தவளாக, கணவனுக்கும் குடும்பத்திற்கும் ஏற்றவளாகக் குடும்பத்திற்குப் பெருமை சேர்ப்பவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதை வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் காண்கிறோம்.

தம் குழந்தைகளின் மழலைச் சொற்கள் குழலிசையையும் யாழிசையையும்விட இனிமையானது என்றும் அவர்களின் சிறுகை அளாவிய கூழ் அமிழ்திலும் இனியது என்றும் உணர்ந்து, அவர்களை அன்போடு அரவணைத்து, நல்ல முறையில் வளர்த்து, அவர்களை அவையில் முந்தி இருக்கச் செய்வது தந்தையின் கடமை என்பதும், குழந்தைகள் அறிவோடும் ஆற்றலோடும் சிறந்திருப்பதைக் காண்பவர்கள் அவர்களைப் பெற்ற தந்தை அத்தகைய சிறப்பான குழந்தைகளைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று வியக்கத்தக்க வகையில் அந்தக் குழந்தைகள் இருப்பது அவர்களின் கடமை என்பதும் மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் நாம் காணும் கருத்துகள்.

விருந்தினர்களைப் பேணி, இனிய சொற்கள் பேசி, நடுவுநிலைமையிலிருந்து தவறாமல், அடக்கத்தோடும், ஒழுக்கத்தோடும், பிறனில்விழையாமல், அழுக்காறுகளை நீக்கி, பொறுமையோடு, புறங்கூறாமல், பயனில்லாத சொற்களைப் பேசாமல், தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சி, மற்றவர்களும் தம்மைப் போன்றவர்கள் என்பதை மனத்தில்கொண்டு அவர்களுக்கு அவர்கள் வந்து கேட்காமலேயே உதவிகள் செய்து, இல்லையென்று இரப்போர்க்குக் கரவாமல் அவர்களிடமிடருந்து எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்து, புகழோடு வாழ்வது இல்வாழ்க்கையில் இருப்பவர்களின் கடமை என்று வள்ளுவர் கூறுகிறார். மேலும், தொடர்பில்லாதவர்கவளிடமும் பிற உயிரினங்களிடமும் பாசத்தோடும் பரிவோடும் இருந்து, புலால் உண்ணுவதைத் தவிர்த்து, பிறர் பொருளை விரும்பாமல், எவரிடமிருந்தும் எதையும் திருடாமல், திருட நினைக்காமல், வாய்மை பேசி, சினத்தைத் தவிர்த்து, எவருக்கும் எந்தத் தீமையும் செய்யாமல், எவ்வுயிரையும் கொல்லாமல் வாழ்வதும் இல்வாழ்க்கையில் இருப்பவனின் கடமை என்பதையும் திருக்குறளில் காண்கிறோம்.  

துறவியாக வாழ்பவர்களுக்கு வள்ளுவர் கூறும் அறிவுரைகள்

இல்வாழ்க்கை வாழ்பவர்களுக்குரிய கடமைகளில், குடும்ப வாழ்க்கைக்குத் தொடர்புள்ள ஒழுக்கங்களையும்,  ஈகை ஒப்புரவு ஆகிய ஒழுக்கங்களையும் தவிர மற்ற அனைத்தும் துறவிகளுக்கும் உரிய ஒழுக்கங்கள்தாம். மேலும், துறவியாக வாழ்பவர்கள், தமக்கு உற்ற துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு, எவ்வுயிர்க்கும் இன்னல் விளைவிக்கமல், தவத்தை மேற்கொண்டு, தகாத ஒழுக்கத்தைத் தவிர்த்து, வாழ்க்கையும் பொருளும்  நிலையில்லாதது என்பதை உணர்ந்து, மெய்ப்பொருளாகிய நிலயானபொருளை அறிந்து, பற்றுக்களை அறுத்துப் பிறவாத நிலையை அடைந்து இடையறாத இன்பம் அனுபவிப்பதைக் குறிக்கோளாகக்கொண்டு வாழ வேண்டும் என்பது வள்ளுவர் துறவிகளுக்குக் கூறும் ஒழுக்க நெறி.

 

அல்லவை நீக்கி நல்லவை செய்தல்

இல்வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் துறவியாக வாழ்பவர்களுக்கும் வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளை ஆராய்ந்தால் அவை அனைத்தும் தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் சொற்களையும் தவிர்த்துத் தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்வதும், சொற்களைப் பேசுவதும் வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளின் மையப்பொருளாகத் தோன்றுகிறது. அவ்வாறு அல்லவை நீக்கி நல்லவை செய்ய வேண்டுமானல் மாசுகள் இல்லாமல் மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் அறிவுரை. மனத்தில் மாசுகள் இல்லாமல் தூய்மையாக வைத்துக்கொள்வதே அறம் என்றும் மற்றவை அனைத்தும் வெறும் ஆரவாரம் என்று அறத்துக்கு வரையறை அளிக்கிறார் வள்ளுவர். மனத்தில் மாசில்லாமல் இருப்பது அறம் என்று கூறும் வள்ளுவர், மாசுகள் எவை என்பதற்குச் சில உதாரணங்களையும் சுட்டிக் காட்டுகிறார். அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் ஆகிய நான்கும் மாசுகள் என்றும், மனத்தில் இவை நான்கும் இல்லாமல் இருப்பது அறம் என்றும் வள்ளுவர் விளக்கம் அளிக்கிறார்.

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
                                                     (குறள்  34)

 

      அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

      இழுக்கா இயன்றது அறம்.                  (குறள் 35)

 

மனிதன் செய்கிற செயல்களும் பேசுகிற சொற்களும் அவனுடைய மனநிலையின் பிரதிபலிப்பாகவே அமைகின்றன. மனத்தில் உருவாகும் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் ஆசைகள்தான் அவனது நடத்தைக்கு அடித்தளமாக இருக்கின்றன. மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தால் செயல்களும் சொற்களும் நல்லவையாக அமையும்; மனம் குழப்பமடைந்தால் அதுவே தவறான செயல்களுக்கும் இன்னாச்சொற்களுக்கும் வழிவகுக்கும். ஆகவே, மனிதனின் வாழ்வை வழிநடத்துவது அவனுடைய மனமே ஆகும். ஒருவன் தன் மனத்திலிருந்து அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் முதலிய  மாசுகளை நீக்கிவிட்டால், அவனால் தன் செயல்களாலும் சொற்களாலும் தீமை செய்ய முடியாது என்பது வள்ளுவரின் கருத்து. உதாரணமாக, ஒருவன் இன்னாச்சொல் பேசாதவனாக இருந்தால், பொய்பேசுதல், புறங்கூறுதல், பயனில சொல்லுதல், கடுஞ்சொற்கள் கூறுதல் ஆகியவற்றால் தான் பிறருக்கு விளைவிக்கும் தீமைகளைத் தவிர்ப்பான். சினத்தால் ஒருவனின் இரத்த அழுத்தம் அதிகாமாகிறது. இரத்த அழுத்தம் அதிகமானால், இதயம், மூளை, சிறுநீரகம் முதலிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஒருவன் சினம் கொண்டால், அது அவனுக்குத் தீமை விளைவிப்பது மட்டுமல்லாமல், சினத்தால் அவன் செய்யும் செயல்களும் சொல்லும் சொற்களும் பிறருக்குத் துன்பம் தரும். ஆகவே, சினத்தைத் தவிர்த்தால், அதனால் தனக்கும் பிறருக்கும் நேரிடும் துன்பங்களைத் தவிர்க்கலாம். அழுக்காறு அவா போன்ற மாசுகளால், பிறர் பொருளைக் கவர வேண்டும் என்ற எண்ணமும், பிறர் பொருளைத் திருடவும் நேரிடும். ஆகவே அழுக்காறைத் தவிர்த்தால், வெஃகுதல், களவு போன்ற செயல்களால் தனக்கும் பிறருக்கும் நேரிடும் துன்பங்களைத் தவிர்க்கலாம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலிய மாசுகளை மனத்திலிருந்து நீக்கி, மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால், அவற்றால் தனக்கும் பிறருக்கும் ஏற்படும் தீமைகளைத் தவிர்க்கலாம்.

 

மனத்தில் உள்ள மாசுகளை எப்படி நீக்குவது?

மனத்தில் உள்ள மாசுகளை நீக்குவதற்கு வள்ளுவர் ஓர் அறிவுரை கூறுகிறார். உடலை நீர் தூய்மைப் படுத்துவதுபோல் வாய்மை உள்ளத்தை தூய்மை செய்யும் என்பது வள்ளுவரின் அறிவுரை.

 

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
                (குறள் 298)

உள்ளதை உள்ளவாறு கூறுவது உண்மை. நாம் பேசும்பொழுது, நம்முடைய சொற்களால் மற்றவர்க்கு எந்தத் தீமையும் விளையாமல் இருக்குமானால் அது வாய்மை என்பது வள்ளுவர் வாய்மைக்குக் கூறும் இலக்கணம். உதாரணமாக, ஒருவனைக் கொலை செய்வதற்காக ஒரு கொலைகாரன் அவனைத் துரத்திக்கொண்டு  வரும்பொழுது அவன் உங்கள்  வீட்டில் தஞ்சம் அடைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனைத் துரத்திக்கொண்டுவந்த கொலைகாரன் உங்களிடத்தில் வந்து, ”இங்கு ஒருவன் வந்து உங்கள் வீட்டில் ஒளிந்துகொண்டிருக்கிறானா?” என்று கேட்டால், நீங்கள், “அவன் இங்கு வரவில்லை.” என்று சொன்னால், உங்கள் சொற்களால் எவருக்கும் எந்தத் தீங்குமில்லை. ஆகவே, அது வாய்மை.  நீங்கள், “ஆம். அவன் இங்குதான் இருக்கிறான்.”  என்று கூறினால் அது உண்மை. நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு கூறுவது உண்மை. மற்றவருக்கு  எந்தத் தீங்கும் விளைவிக்காத சொற்களைக் கூறுவது வாய்மை.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.                                               (குறள் 291)

உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு நீர் பயன்படுகிறது. ஆனால், உடல் தூய்மையாக இருக்க வேண்டுமானால் நாள்தோறும் நீரைப் பயன்படுத்திக் குளிக்க வேண்டும். அதுபோல், மனம் தூய்மையாக இருக்கவேண்டுமானால் எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் வாய்மை பேசவேண்டும். பயம், குற்ற உணர்ச்சி, தன்னையே ஏமாற்றிக்கொள்வது ஆகியவற்றிலிருந்து வாய்மை பேசும் பழக்கம் மனிதனை விடுவித்து, அவனுடடைய மனத்திற்கு அமைதியும் தெளிவும் அளிக்கிறது. வாய்மை பேசுவது பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதால் அது அகங்காரத்தைக் குறைத்து, ஒழுக்கத் தெளிவை வளர்க்கிறது. வாய்மை பேசுவது மனத்திலுள்ள முரண்பாடுகளை அகற்றி, எண்ணம்–சொல்–செயல் ஆகியவற்றிற்கு இடையே ஒற்றுமையை அளிப்பதால், வள்ளுவர் வாய்மை பேசுதல் மனத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்று கூறுகிறார். 

ஆகவே, மனிதன் எப்பொழுதும் வாய்மை பேசினால், அவன் மனந்தில் மாசுகள் இரா. மனத்தில் மாசுகள் இல்லையென்றால், மனிதன் தீய செயல்களைச் செய்ய மாட்டான்; தீய சொற்களைப் பேச மாட்டன். அதாவது செயலாலும் சொல்லாலும் எவருக்கும் தீங்கிழைக்க மாட்டான் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது.

 

மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், பிறருக்கு நன்மை செய்ய முடியுமா?

மனிதனின் உயிரும் உடலும் இணைந்து இயங்குகிறது என்றும் அன்பில்லாத மனிதன் தோலால் போர்த்தப்பட்ட எலும்பு மட்டுமே என்றும் அன்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.                    (குறள் 73)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.                     (குறள் 80)

உயிரோடு இருக்கும் எந்த மனிதனும் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக் கூடு மட்டுமல்ல. அன்பினால்தான் மனிதனின் உயிரும் உடலும் இயங்குகிறது என்று வள்ளுவர் கூறுவதிலிருந்து, உயிரோடு இருக்கும் ஒரு மனிதனிடத்தில் அன்பு என்ற பண்பு  இயல்பாகவே இருக்கிறது என்பது புலனாகிறது. ஆனால், அவனால் சில காரணங்களால் அதை வெளிப்படுத்த முடியவில்லை என்பது பெறப்படுகிறது. இயல்பாக உள்ள  அன்பு அவனுடைய, வளர்ப்புமுறை, சுற்றுச்சூழல், வாழ்க்கை அனுபவங்கள், மனதில் உள்ள சினம், அழுக்காறு, பேராசை போன்றவற்றால் தோன்றிய மாசுகளால் வெளிப்படுத்த முடியாமல் தடை செய்யப்படுகிறது. தூசு படிந்த கண்ணாடியால், அதன் முன் உள்ள பொருளைப் பிரதிபலிக்க முடியாததுபோல், ஒருவனின் மாசு படிந்த மனத்தால் அவனிடம் இயல்பாக உள்ள அன்பை அவனால் வெளிப்படுத்த முடியவில்லை. அந்த மாசுகள் நீங்கினால், அன்பை வெளிப்படுத்த முடியும்.

ஒருவன் தன் உறவினர், சுற்றத்தார் ஆகியோரிடம் காட்டும் பாசத்தை அன்பு என்றும் மற்றவர்களிடத்திலும் மற்ற உயிரினங்களிடதிலும் அவன் காட்டும் பாசம் கருணை ஆகியவற்றை அருள் என்றும் வள்ளுவர் வகுக்கிறார். மாசுகள் நீங்கி அன்பு வெளிப்பட்டால், ஒருவனுடைய இல்வாழ்க்கை சிறப்பாக அமையும். அதனால்தான் வள்ளுவர், “அன்பும் அறனுமுடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.” என்கிறார். ஆகவே,  அன்போடும் அறத்தோடும் கூடிய இல்வாழ்க்கையில் இருப்பவன், தன் மனைவி, மக்கள், பெற்றோர்  மற்றும் பிற உறவினர்கள், நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் ஆகியோரிடம் பரிவும் பாசமும் காட்டி அவர்களுக்கு  எவ்விதத் தீமையும் செய்யாமல் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களைக் காப்பாற்றுவான்; விருந்தோம்பல் தனது கடமை என்பதை உணர்ந்து இல்வாழ்க்கையில் இருப்பவன் அகமும் முகமும் மலர்ந்து செல்விருந்தோம்பி, வருவிருந்து பார்த்திருப்பான். மேலும், அன்பு விரிந்து நட்பாக மலர்ந்து“யாவரும் கேளிர்” என்ற மனிதநேயமாக மலர்கிறது என்பதும் வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது.

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
                     (குறள் 74)

வள்ளுவர் கூறுவதைப்போல், ஒருவனுடைய அன்பு நட்பாக வளர்ந்தால், ”உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.” என்ற குறளுக்கேற்ப அவன் தன் நண்பர்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்காமல், அவர்களிடம் இன்சொல் பேசி அவர் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு நன்மைகளைச் செய்வான் என்று எதிர் பார்க்கலாம்.

அன்பு நட்பாக மலர்வதற்கும் அடுத்த நிலையில் அது அருளாக மாறுகிறது. அருளாக மாறுகின்ற பொழுது, எல்லா உயிர்களிடத்திலும் பரிவும் பாசமும் காட்டி, எவ்வுயிர்க்கும் எந்தத் தீமையும் செய்யாமல் நன்மைகளைச் செய்யும் இயல்பு தோன்றுகிறது. உதாரணமாக, பாரி முல்லைக்குத் தேரை கொழுகொம்பாக அளித்ததற்கும், பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததற்கும், அவர்கள் உள்ளத்தில் இருந்த அருள்தான் காரணம். ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.” என்று வள்ளுவர் கூறுவதும் அருள் உள்ளவன் செய்கின்ற செயலைத்தான் குறிக்கிறது. பாரியின் செயலும், பேகனின் செயலும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலும் பொருள் இருந்தால்தான் செய்ய முடியும்.

 

”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்” என்று தொடங்கும் பாடலில்[1] வள்ளலார்  ”நீரின்றி வாடிய பயிர்களைக் கண்ட போதும், பசியால் மேனி மெலிந்து வீடு தோறும் சென்றிரந்தும் பசி நீங்காது வருந்தும் வறியரைப் பார்த்தும், நோயினால் துன்புறுவோரைக் கண்ணெதிர் தோன்றக் காணிணும் மனம் மிக வருந்தி நொந்தேன்; ஒப்பற்ற மானமுடையராய் வறுமை எய்தினமையால் உள்ளம் உடைந்து மெலிந்தவர்களைக் கண்டு மெலிவுற்றேன்.”என்று கூறுகிறார்.  அவரிடத்தில் பொருள் இல்லாததால் வறியவர்களையும், நோயுற்றவர்களையும், வறுமையில் இருப்பவர்களையும் கண்டு வருத்தம் அடைய முடிந்ததே தவிர, அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை.  ஆகவே, அருள் இருந்தால் மட்டும் போதாது. பல நேரங்களில், பிறருக்கு உதவி செய்வதற்குப் பொருளும் வேண்டும். இந்தக் கருத்தை வள்ளுவர் மிக அழகாக ஒரு குறளில் கூறுகிறார். ”அருள் என்பது அன்பு பெற்ற குழந்தை. ஆனால், அந்தக் குழந்தை செழிப்பாக வளர்வதற்கு  செல்வம் என்ற  ஒரு வாளர்ப்புத் தாய் தேவை.”  என்று அந்தக் குறளுக்குப் பொருள். அந்தக் குறள்:

 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு.              (குறள் – 757)

 

அறத்தை வலியுறுத்துவதற்கு வள்ளுவர் கையாளும் உத்தி

நாம் ஒரு கருத்தைப் பிறரிடம் கூறும்பொழுது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினால், அதற்கு நான்கு அணுகுமுறைகளைப் பின்பற்றலாம். 1) அந்தக் கருத்தை அவர்களிடம் சமாதானமாகவும், விளக்கமாகவும் கூறலாம். 2) அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி அவர்கள் நடப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று கூறலாம். 3) அந்தக் கருத்தைப் பின்பற்றுவதற்கும் பின்பற்றாமல் இருப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை விவரமாகக் கூறலாம். 4)அந்தக் கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் - அதைப் பின்பற்றாமல் - இருப்பதனால் என்ன தீமைகள் வரலாம் என்று அவர்களிடம் கூறலாம். இந்த நான்கு அணுகுமுறைகளாலும் மற்றவர்களை நம் கருத்திற்கு இணங்கவைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த அணுகுமுறைகளுக்கு வடமொழியில் சாம தான பேத தண்டம் என்று பெயர். வள்ளுவர் அறத்தை வலியுறுத்துவதற்கு ”சாம தான பேத தண்டம்” என்ற உத்தியைப் பல அதிகாரங்களில் கையாளுகிறார். உதாரணமாக, அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில், குறட்பாக்கள் 34 மற்றும் 35ல் வள்ளுவர் அறத்தைப் பற்றிக் கூறி, அதைப் பின்பற்றுவதால் வரும் நன்மைகளை 31 ஆவது குறளில் கூறி நம்மை ஊக்குவித்து, அறத்தைப் பின்பற்றுவதற்கும் அறத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கும் இடையே உள்ள வேற்றுமையை 39 ஆவது  குறளில் கூறி, இறுதியாக 32 ஆவது குறளில் அறத்தைப் பின்பற்றாவிட்டல் வரும் தீமைகளை எடுத்துரைத்து நம்மை அச்சுறுத்தி, அறத்தைப் பின்பற்றுவதின் இன்றியமையாமையை  வலியுறுத்துகிறார். 

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.                               (குறள் 34)

 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.                       (குறள் 35)

 

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.                      (குறள் 31)

 

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.                            (குறள் 39)

 

 

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.                    (குறள் 32)

 

”சாம தான பேத தண்டம்” என்னும் உத்தியைப் பல அதிகாரங்களில், பல இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார். உதாரணமாக, அன்புடைமை என்ற அதிகாரத்தில், 77ஆவது குறளில், “என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.” என்று கூறுகிறார். இங்கு அறத்தைத் தன்னிச்சையாக  இயங்கும் ஆற்றலாக வள்ளுவர் உருவகிக்கிறார் என்றுதான் பொருள்கொள்ள வேண்டும். அறம் ஒரு நல்லொழுக்க நெறி. அது தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றல் உடையது  அன்று.  சிலர் கூறுவதுபோல் அறம் ஒரு தெய்வமும் அன்று. இதுபோல் வள்ளுவர் அறத்தைத் தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றல்போல் சித்திரிக்கும் இடங்களில், அறத்தை வலியுறுத்துவதற்குப் பயன்படுத்தும் உத்தி என்று பொருள்கொள்வதே சிறந்ததாகத் தோன்றுகிறது. அதுபோல் பல இடங்களில் வள்ளுவர் “அறம் செய்க” என்று கூறுகிறார். ”அறம் செய்க” என்பதற்கு ”அறத்தைப் பின்பற்றுக” என்று பொருள்கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

 

முடிவுரை

வள்ளுவர் பார்வையில் “மனத்தில் மாசில்லாமல் இருப்பதுதான் அறம்.  மனத்தில்

மாசில்லவாவிட்டால் மனிதன் தன்னிடத்தில்  இயல்பாக உள்ள அன்பு என்னும் பண்பை வெளிப்படுத்த முடியும். அன்புள்ள ஒருவன் பாசத்தோடும் பரிவோடும் மனைவி, மக்கள், பெற்றோர், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கும், அவனை நம்பி வந்தவர்களுக்கும் துணையாக இருந்து நன்மைகளைச் செய்வான். நாளடைவில், அவன் நாடாமலேயே அவனுக்குப் பலருடைய நட்புக் கிடைக்கும். அடுத்த நிலையில், அவனுடைய அன்பு அருளாக மலர்ந்து, எவ்வுயிர்க்கும் தீமை செய்யாமல், அனைத்துயிர்களுக்கும் தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்வான்.   இதுவே வள்ளுவர் கூறும் அறம். வள்ளுவரின் அறத்தைப் பற்றிய கருத்து எந்நாட்டவர்க்கும் எக்காலத்துக்கும் ஏற்புடையது.

 

 

 

 

 

 

 



[1]. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

          வாடினேன் பசியினால் இளைத்தே

     வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த

          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

     நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

          நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

     ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்

          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.