Statcounter

Friday, February 20, 2026

வள்ளுவர் பார்வையில் அறம்

 

வள்ளுவர் பார்வையில் அறம்

முனைவர் இர. பிரபாகரன்

முன்னுரை

பல்வேறு நாகரிகங்களில், சிந்தனையாளர்கள் ஓர் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதன் பொருள் என்ன என்பதை விளக்க முயன்றுள்ளனர். கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் (Aristotle 384 – 322 கி.மு), சுயக்கட்டுப்பாடு (self-control), நெஞ்சுரம் (courage) மற்றும் மிதவாதம் (moderation) போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் மூலம் நற்பண்பு வளர்க்கப்படுகிறது என்றும், இந்தக் குணங்கள் மனிதர்கள் சிறப்பாக வாழவும் செழிக்கவும் உதவுகின்றன என்றும் நம்பினார். ஜெர்மானியத் தத்துவஞானி இம்மேனுவெல் கான்ட் (Immanuvel Kant 1724-1804 கி.பி.), தனிப்பட்ட நன்மைக்காகவோ அல்லது தண்டனைக்கு அஞ்சியோ அல்லாமல், ஒரு செயல் சரியானது என்பதற்காகவே தனது கடமைகளைச் செய்வதில்தான் நற்பண்பு அடங்கியுள்ளது என்று வாதிட்டார். ரோமானிய தத்துவஞானியான மார்க்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius 161-180 கி.பி.), நற்பண்பு என்பது உள் ஒழுக்கம் (inner discipline), ஒருவரின் ஆசைகளின் மீதான கட்டுப்பாடு, மற்றும் துன்பத்தின் போதும் பகுத்தறிவின்படி வாழ்வது ஆகியவற்றைக் குறிக்கிறது என்று கற்பித்தார். சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸ் (Confucius 551 – 479 கி.மு.) அன்றாட உறவுகளில் நற்பண்புக்கு முக்கியத்துவம் அளித்து, கருணை, மரியாதை மற்றும் முறையான நடத்தை ஆகியவை சமூக நல்லிணக்கத்திற்கு அவசியமானவை என்று கருதினார். வைதிக மதத்தைச் சார்ந்த மனு என்பவர் மனுஸ்மிருதியில் கூறும் தர்மம் என்பது அனைவருக்கும் பொதுவானதன்று. அது ஒவ்வொரு குலத்துக்கும் வெவ்வேறு தர்மத்தைப் போதிக்கிறது.

திருக்குறளில் திருவள்ளுவர் கூறும் அறம் பற்றிய கருத்து, இந்தச் சிந்தனையாளர்களின் கருத்துகளுடன் சில ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், முக்கியமான வழிகளில் அவர்களிடமிருந்து வேறுபடுகிறது. அரிஸ்டாட்டிலைப் போலவே, வள்ளுவரும் தன்னடக்கம் நல்லொழுக்கம் ஆகியவை தேவை என்று கருதுகிறார்; கன்ஃபூசியஸைப் போலவே, வள்ளுவர் அன்பு, நட்பு, அருள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்; மேலும் மார்க்கஸ் அரேலியஸைப் போலவே, வள்ளுவர் அக ஒழுக்கம், மன வலிமை ஆகியவற்றை வலியுறுத்துகிறார். இருப்பினும், காண்டின் கடுமையான விதி அடிப்படையிலான ஒழுக்கவியல் அல்லது மதக் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்ட நெறிமுறைகளைப் போலன்றி, வள்ளுவர் அறத்தை அன்றாட வாழ்வில் வேரூன்றிய நல்லொழுக்காமாகக் கருதுகிறார். வள்ளுவரின் அறத்தைப் பற்றிய கருத்து மனு என்பவர் மனுஸ்மிருதியில் கூறும் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வள்ளுவர் மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுதான் அறம் என்று கூறுகிறார். வள்ளுவர் கூறும் அறம் உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்துக்கும் ஏற்றது. இக்கட்டுரை, வள்ளுவர் கூறும் அறம் என்னும் ஒழுக்க நெறியைப் பற்றியும், மனிதர்களின் நல்வாழ்கைக்கு அது எப்படிப் பயனுடையதாக உள்ளது என்பதையும்  விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

இல்வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வள்ளுவர் கூறும் அறிவுரைகள்

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில், இல்வாழ்க்கையில் இருப்பவன் தன் மனைவி, மக்கள், பெற்றோர் ஆகிய மூவர்க்கும் துணையாக இருக்க வேண்டும் என்றும், துறவிகள், வாழ்க்கையை அனுபவிக்க முடியாதவர்கள், வாழ்க்கைப் பாதையிலிருந்து தவறியவர்கள், இறந்த முன்னோர்கள், தெய்வம், விருந்தினர்கள், சுற்றத்தார் ஆகியயோருக்கும் துணையாக  இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.  அது மட்டுமல்லாமல் தன்னையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது இலவாழ்க்கையில் இருப்பவனின் கடமை என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

கற்பு நெறியிலிருந்து தவறினால் அது தன் கணவனுக்கும் தன் குடும்பத்துக்கும் தான் இழைக்கும் தீமை என்பதை உணர்ந்து,  மனைவி கற்பிற் சிறந்தவளாக, கணவனுக்கும் குடும்பத்திற்கும் ஏற்றவளாகக் குடும்பத்திற்குப் பெருமை சேர்ப்பவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதை வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் காண்கிறோம்.

தம் குழந்தைகளின் மழலைச் சொற்கள் குழலிசையையும் யாழிசையையும்விட இனிமையானது என்றும் அவர்களின் சிறுகை அளாவிய கூழ் அமிழ்திலும் இனியது என்றும் உணர்ந்து, அவர்களை அன்போடு அரவணைத்து, நல்ல முறையில் வளர்த்து, அவர்களை அவையில் முந்தி இருக்கச் செய்வது தந்தையின் கடமை என்பதும், குழந்தைகள் அறிவோடும் ஆற்றலோடும் சிறந்திருப்பதைக் காண்பவர்கள் அவர்களைப் பெற்ற தந்தை அத்தகைய சிறப்பான குழந்தைகளைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று வியக்கத்தக்க வகையில் அந்தக் குழந்தைகள் இருப்பது அவர்களின் கடமை என்பதும் மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் நாம் காணும் கருத்துகள்.

விருந்தினர்களைப் பேணி, இனிய சொற்கள் பேசி, நடுவுநிலைமையிலிருந்து தவறாமல், அடக்கத்தோடும், ஒழுக்கத்தோடும், பிறனில்விழையாமல், அழுக்காறுகளை நீக்கி, பொறுமையோடு, புறங்கூறாமல், பயனில்லாத சொற்களைப் பேசாமல், தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சி, மற்றவர்களும் தம்மைப் போன்றவர்கள் என்பதை மனத்தில்கொண்டு அவர்களுக்கு அவர்கள் வந்து கேட்காமலேயே உதவிகள் செய்து, இல்லையென்று இரப்போர்க்குக் கரவாமல் அவர்களிடமிடருந்து எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்து, புகழோடு வாழ்வது இல்வாழ்க்கையில் இருப்பவர்களின் கடமை என்று வள்ளுவர் கூறுகிறார். மேலும், தொடர்பில்லாதவர்கவளிடமும் பிற உயிரினங்களிடமும் பாசத்தோடும் பரிவோடும் இருந்து, புலால் உண்ணுவதைத் தவிர்த்து, பிறர் பொருளை விரும்பாமல், எவரிடமிருந்தும் எதையும் திருடாமல், திருட நினைக்காமல், வாய்மை பேசி, சினத்தைத் தவிர்த்து, எவருக்கும் எந்தத் தீமையும் செய்யாமல், எவ்வுயிரையும் கொல்லாமல் வாழ்வதும் இல்வாழ்க்கையில் இருப்பவனின் கடமை என்பதையும் திருக்குறளில் காண்கிறோம்.  

துறவியாக வாழ்பவர்களுக்கு வள்ளுவர் கூறும் அறிவுரைகள்

இல்வாழ்க்கை வாழ்பவர்களுக்குரிய கடமைகளில், குடும்ப வாழ்க்கைக்குத் தொடர்புள்ள ஒழுக்கங்களையும்,  ஈகை ஒப்புரவு ஆகிய ஒழுக்கங்களையும் தவிர மற்ற அனைத்தும் துறவிகளுக்கும் உரிய ஒழுக்கங்கள்தாம். மேலும், துறவியாக வாழ்பவர்கள், தமக்கு உற்ற துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு, எவ்வுயிர்க்கும் இன்னல் விளைவிக்கமல், தவத்தை மேற்கொண்டு, தகாத ஒழுக்கத்தைத் தவிர்த்து, வாழ்க்கையும் பொருளும்  நிலையில்லாதது என்பதை உணர்ந்து, மெய்ப்பொருளாகிய நிலயானபொருளை அறிந்து, பற்றுக்களை அறுத்துப் பிறவாத நிலையை அடைந்து இடையறாத இன்பம் அனுபவிப்பதைக் குறிக்கோளாகக்கொண்டு வாழ வேண்டும் என்பது வள்ளுவர் துறவிகளுக்குக் கூறும் ஒழுக்க நெறி.

 

அல்லவை நீக்கி நல்லவை செய்தல்

இல்வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் துறவியாக வாழ்பவர்களுக்கும் வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளை ஆராய்ந்தால் அவை அனைத்தும் தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் சொற்களையும் தவிர்த்துத் தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்வதும், சொற்களைப் பேசுவதும் வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளின் மையப்பொருளாகத் தோன்றுகிறது. அவ்வாறு அல்லவை நீக்கி நல்லவை செய்ய வேண்டுமானல் மாசுகள் இல்லாமல் மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் அறிவுரை. மனத்தில் மாசுகள் இல்லாமல் தூய்மையாக வைத்துக்கொள்வதே அறம் என்றும் மற்றவை அனைத்தும் வெறும் ஆரவாரம் என்று அறத்துக்கு வரையறை அளிக்கிறார் வள்ளுவர். மனத்தில் மாசில்லாமல் இருப்பது அறம் என்று கூறும் வள்ளுவர், மாசுகள் எவை என்பதற்குச் சில உதாரணங்களையும் சுட்டிக் காட்டுகிறார். அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் ஆகிய நான்கும் மாசுகள் என்றும், மனத்தில் இவை நான்கும் இல்லாமல் இருப்பது அறம் என்றும் வள்ளுவர் விளக்கம் அளிக்கிறார்.

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
                                                     (குறள்  34)

 

      அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

      இழுக்கா இயன்றது அறம்.                  (குறள் 35)

 

மனிதன் செய்கிற செயல்களும் பேசுகிற சொற்களும் அவனுடைய மனநிலையின் பிரதிபலிப்பாகவே அமைகின்றன. மனத்தில் உருவாகும் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் ஆசைகள்தான் அவனது நடத்தைக்கு அடித்தளமாக இருக்கின்றன. மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தால் செயல்களும் சொற்களும் நல்லவையாக அமையும்; மனம் குழப்பமடைந்தால் அதுவே தவறான செயல்களுக்கும் இன்னாச்சொற்களுக்கும் வழிவகுக்கும். ஆகவே, மனிதனின் வாழ்வை வழிநடத்துவது அவனுடைய மனமே ஆகும். ஒருவன் தன் மனத்திலிருந்து அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் முதலிய  மாசுகளை நீக்கிவிட்டால், அவனால் தன் செயல்களாலும் சொற்களாலும் தீமை செய்ய முடியாது என்பது வள்ளுவரின் கருத்து. உதாரணமாக, ஒருவன் இன்னாச்சொல் பேசாதவனாக இருந்தால், பொய்பேசுதல், புறங்கூறுதல், பயனில சொல்லுதல், கடுஞ்சொற்கள் கூறுதல் ஆகியவற்றால் தான் பிறருக்கு விளைவிக்கும் தீமைகளைத் தவிர்ப்பான். சினத்தால் ஒருவனின் இரத்த அழுத்தம் அதிகாமாகிறது. இரத்த அழுத்தம் அதிகமானால், இதயம், மூளை, சிறுநீரகம் முதலிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஒருவன் சினம் கொண்டால், அது அவனுக்குத் தீமை விளைவிப்பது மட்டுமல்லாமல், சினத்தால் அவன் செய்யும் செயல்களும் சொல்லும் சொற்களும் பிறருக்குத் துன்பம் தரும். ஆகவே, சினத்தைத் தவிர்த்தால், அதனால் தனக்கும் பிறருக்கும் நேரிடும் துன்பங்களைத் தவிர்க்கலாம். அழுக்காறு அவா போன்ற மாசுகளால், பிறர் பொருளைக் கவர வேண்டும் என்ற எண்ணமும், பிறர் பொருளைத் திருடவும் நேரிடும். ஆகவே அழுக்காறைத் தவிர்த்தால், வெஃகுதல், களவு போன்ற செயல்களால் தனக்கும் பிறருக்கும் நேரிடும் துன்பங்களைத் தவிர்க்கலாம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலிய மாசுகளை மனத்திலிருந்து நீக்கி, மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால், அவற்றால் தனக்கும் பிறருக்கும் ஏற்படும் தீமைகளைத் தவிர்க்கலாம்.

 

மனத்தில் உள்ள மாசுகளை எப்படி நீக்குவது?

மனத்தில் உள்ள மாசுகளை நீக்குவதற்கு வள்ளுவர் ஓர் அறிவுரை கூறுகிறார். உடலை நீர் தூய்மைப் படுத்துவதுபோல் வாய்மை உள்ளத்தை தூய்மை செய்யும் என்பது வள்ளுவரின் அறிவுரை.

 

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
                (குறள் 298)

உள்ளதை உள்ளவாறு கூறுவது உண்மை. நாம் பேசும்பொழுது, நம்முடைய சொற்களால் மற்றவர்க்கு எந்தத் தீமையும் விளையாமல் இருக்குமானால் அது வாய்மை என்பது வள்ளுவர் வாய்மைக்குக் கூறும் இலக்கணம். உதாரணமாக, ஒருவனைக் கொலை செய்வதற்காக ஒரு கொலைகாரன் அவனைத் துரத்திக்கொண்டு  வரும்பொழுது அவன் உங்கள்  வீட்டில் தஞ்சம் அடைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனைத் துரத்திக்கொண்டுவந்த கொலைகாரன் உங்களிடத்தில் வந்து, ”இங்கு ஒருவன் வந்து உங்கள் வீட்டில் ஒளிந்துகொண்டிருக்கிறானா?” என்று கேட்டால், நீங்கள், “அவன் இங்கு வரவில்லை.” என்று சொன்னால், உங்கள் சொற்களால் எவருக்கும் எந்தத் தீங்குமில்லை. ஆகவே, அது வாய்மை.  நீங்கள், “ஆம். அவன் இங்குதான் இருக்கிறான்.”  என்று கூறினால் அது உண்மை. நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு கூறுவது உண்மை. மற்றவருக்கு  எந்தத் தீங்கும் விளைவிக்காத சொற்களைக் கூறுவது வாய்மை.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.                                               (குறள் 291)

உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு நீர் பயன்படுகிறது. ஆனால், உடல் தூய்மையாக இருக்க வேண்டுமானால் நாள்தோறும் நீரைப் பயன்படுத்திக் குளிக்க வேண்டும். அதுபோல், மனம் தூய்மையாக இருக்கவேண்டுமானால் எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் வாய்மை பேசவேண்டும். பயம், குற்ற உணர்ச்சி, தன்னையே ஏமாற்றிக்கொள்வது ஆகியவற்றிலிருந்து வாய்மை பேசும் பழக்கம் மனிதனை விடுவித்து, அவனுடடைய மனத்திற்கு அமைதியும் தெளிவும் அளிக்கிறது. வாய்மை பேசுவது பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதால் அது அகங்காரத்தைக் குறைத்து, ஒழுக்கத் தெளிவை வளர்க்கிறது. வாய்மை பேசுவது மனத்திலுள்ள முரண்பாடுகளை அகற்றி, எண்ணம்–சொல்–செயல் ஆகியவற்றிற்கு இடையே ஒற்றுமையை அளிப்பதால், வள்ளுவர் வாய்மை பேசுதல் மனத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்று கூறுகிறார். 

ஆகவே, மனிதன் எப்பொழுதும் வாய்மை பேசினால், அவன் மனந்தில் மாசுகள் இரா. மனத்தில் மாசுகள் இல்லையென்றால், மனிதன் தீய செயல்களைச் செய்ய மாட்டான்; தீய சொற்களைப் பேச மாட்டன். அதாவது செயலாலும் சொல்லாலும் எவருக்கும் தீங்கிழைக்க மாட்டான் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது.

 

மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், பிறருக்கு நன்மை செய்ய முடியுமா?

மனிதனின் உயிரும் உடலும் இணைந்து இயங்குகிறது என்றும் அன்பில்லாத மனிதன் தோலால் போர்த்தப்பட்ட எலும்பு மட்டுமே என்றும் அன்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.                    (குறள் 73)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.                     (குறள் 80)

உயிரோடு இருக்கும் எந்த மனிதனும் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக் கூடு மட்டுமல்ல. அன்பினால்தான் மனிதனின் உயிரும் உடலும் இயங்குகிறது என்று வள்ளுவர் கூறுவதிலிருந்து, உயிரோடு இருக்கும் ஒரு மனிதனிடத்தில் அன்பு என்ற பண்பு  இயல்பாகவே இருக்கிறது என்பது புலனாகிறது. ஆனால், அவனால் சில காரணங்களால் அதை வெளிப்படுத்த முடியவில்லை என்பது பெறப்படுகிறது. இயல்பாக உள்ள  அன்பு அவனுடைய, வளர்ப்புமுறை, சுற்றுச்சூழல், வாழ்க்கை அனுபவங்கள், மனதில் உள்ள சினம், அழுக்காறு, பேராசை போன்றவற்றால் தோன்றிய மாசுகளால் வெளிப்படுத்த முடியாமல் தடை செய்யப்படுகிறது. தூசு படிந்த கண்ணாடியால், அதன் முன் உள்ள பொருளைப் பிரதிபலிக்க முடியாததுபோல், ஒருவனின் மாசு படிந்த மனத்தால் அவனிடம் இயல்பாக உள்ள அன்பை அவனால் வெளிப்படுத்த முடியவில்லை. அந்த மாசுகள் நீங்கினால், அன்பை வெளிப்படுத்த முடியும்.

ஒருவன் தன் உறவினர், சுற்றத்தார் ஆகியோரிடம் காட்டும் பாசத்தை அன்பு என்றும் மற்றவர்களிடத்திலும் மற்ற உயிரினங்களிடதிலும் அவன் காட்டும் பாசம் கருணை ஆகியவற்றை அருள் என்றும் வள்ளுவர் வகுக்கிறார். மாசுகள் நீங்கி அன்பு வெளிப்பட்டால், ஒருவனுடைய இல்வாழ்க்கை சிறப்பாக அமையும். அதனால்தான் வள்ளுவர், “அன்பும் அறனுமுடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.” என்கிறார். ஆகவே,  அன்போடும் அறத்தோடும் கூடிய இல்வாழ்க்கையில் இருப்பவன், தன் மனைவி, மக்கள், பெற்றோர்  மற்றும் பிற உறவினர்கள், நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் ஆகியோரிடம் பரிவும் பாசமும் காட்டி அவர்களுக்கு  எவ்விதத் தீமையும் செய்யாமல் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களைக் காப்பாற்றுவான்; விருந்தோம்பல் தனது கடமை என்பதை உணர்ந்து இல்வாழ்க்கையில் இருப்பவன் அகமும் முகமும் மலர்ந்து செல்விருந்தோம்பி, வருவிருந்து பார்த்திருப்பான். மேலும், அன்பு விரிந்து நட்பாக மலர்ந்து“யாவரும் கேளிர்” என்ற மனிதநேயமாக மலர்கிறது என்பதும் வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது.

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
                     (குறள் 74)

வள்ளுவர் கூறுவதைப்போல், ஒருவனுடைய அன்பு நட்பாக வளர்ந்தால், ”உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.” என்ற குறளுக்கேற்ப அவன் தன் நண்பர்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்காமல், அவர்களிடம் இன்சொல் பேசி அவர் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு நன்மைகளைச் செய்வான் என்று எதிர் பார்க்கலாம்.

அன்பு நட்பாக மலர்வதற்கும் அடுத்த நிலையில் அது அருளாக மாறுகிறது. அருளாக மாறுகின்ற பொழுது, எல்லா உயிர்களிடத்திலும் பரிவும் பாசமும் காட்டி, எவ்வுயிர்க்கும் எந்தத் தீமையும் செய்யாமல் நன்மைகளைச் செய்யும் இயல்பு தோன்றுகிறது. உதாரணமாக, பாரி முல்லைக்குத் தேரை கொழுகொம்பாக அளித்ததற்கும், பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததற்கும், அவர்கள் உள்ளத்தில் இருந்த அருள்தான் காரணம். ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.” என்று வள்ளுவர் கூறுவதும் அருள் உள்ளவன் செய்கின்ற செயலைத்தான் குறிக்கிறது. பாரியின் செயலும், பேகனின் செயலும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலும் பொருள் இருந்தால்தான் செய்ய முடியும்.

 

”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்” என்று தொடங்கும் பாடலில்[1] வள்ளலார்  ”நீரின்றி வாடிய பயிர்களைக் கண்ட போதும், பசியால் மேனி மெலிந்து வீடு தோறும் சென்றிரந்தும் பசி நீங்காது வருந்தும் வறியரைப் பார்த்தும், நோயினால் துன்புறுவோரைக் கண்ணெதிர் தோன்றக் காணிணும் மனம் மிக வருந்தி நொந்தேன்; ஒப்பற்ற மானமுடையராய் வறுமை எய்தினமையால் உள்ளம் உடைந்து மெலிந்தவர்களைக் கண்டு மெலிவுற்றேன்.”என்று கூறுகிறார்.  அவரிடத்தில் பொருள் இல்லாததால் வறியவர்களையும், நோயுற்றவர்களையும், வறுமையில் இருப்பவர்களையும் கண்டு வருத்தம் அடைய முடிந்ததே தவிர, அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை.  ஆகவே, அருள் இருந்தால் மட்டும் போதாது. பல நேரங்களில், பிறருக்கு உதவி செய்வதற்குப் பொருளும் வேண்டும். இந்தக் கருத்தை வள்ளுவர் மிக அழகாக ஒரு குறளில் கூறுகிறார். ”அருள் என்பது அன்பு பெற்ற குழந்தை. ஆனால், அந்தக் குழந்தை செழிப்பாக வளர்வதற்கு  செல்வம் என்ற  ஒரு வாளர்ப்புத் தாய் தேவை.”  என்று அந்தக் குறளுக்குப் பொருள். அந்தக் குறள்:

 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு.              (குறள் – 757)

 

அறத்தை வலியுறுத்துவதற்கு வள்ளுவர் கையாளும் உத்தி

நாம் ஒரு கருத்தைப் பிறரிடம் கூறும்பொழுது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினால், அதற்கு நான்கு அணுகுமுறைகளைப் பின்பற்றலாம். 1) அந்தக் கருத்தை அவர்களிடம் சமாதானமாகவும், விளக்கமாகவும் கூறலாம். 2) அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி அவர்கள் நடப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று கூறலாம். 3) அந்தக் கருத்தைப் பின்பற்றுவதற்கும் பின்பற்றாமல் இருப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை விவரமாகக் கூறலாம். 4)அந்தக் கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் - அதைப் பின்பற்றாமல் - இருப்பதனால் என்ன தீமைகள் வரலாம் என்று அவர்களிடம் கூறலாம். இந்த நான்கு அணுகுமுறைகளாலும் மற்றவர்களை நம் கருத்திற்கு இணங்கவைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த அணுகுமுறைகளுக்கு வடமொழியில் சாம தான பேத தண்டம் என்று பெயர். வள்ளுவர் அறத்தை வலியுறுத்துவதற்கு ”சாம தான பேத தண்டம்” என்ற உத்தியைப் பல அதிகாரங்களில் கையாளுகிறார். உதாரணமாக, அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில், குறட்பாக்கள் 34 மற்றும் 35ல் வள்ளுவர் அறத்தைப் பற்றிக் கூறி, அதைப் பின்பற்றுவதால் வரும் நன்மைகளை 31 ஆவது குறளில் கூறி நம்மை ஊக்குவித்து, அறத்தைப் பின்பற்றுவதற்கும் அறத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கும் இடையே உள்ள வேற்றுமையை 39 ஆவது  குறளில் கூறி, இறுதியாக 32 ஆவது குறளில் அறத்தைப் பின்பற்றாவிட்டல் வரும் தீமைகளை எடுத்துரைத்து நம்மை அச்சுறுத்தி, அறத்தைப் பின்பற்றுவதின் இன்றியமையாமையை  வலியுறுத்துகிறார். 

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.                               (குறள் 34)

 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.                       (குறள் 35)

 

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.                      (குறள் 31)

 

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.                            (குறள் 39)

 

 

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.                    (குறள் 32)

 

”சாம தான பேத தண்டம்” என்னும் உத்தியைப் பல அதிகாரங்களில், பல இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார். உதாரணமாக, அன்புடைமை என்ற அதிகாரத்தில், 77ஆவது குறளில், “என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.” என்று கூறுகிறார். இங்கு அறத்தைத் தன்னிச்சையாக  இயங்கும் ஆற்றலாக வள்ளுவர் உருவகிக்கிறார் என்றுதான் பொருள்கொள்ள வேண்டும். அறம் ஒரு நல்லொழுக்க நெறி. அது தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றல் உடையது  அன்று.  சிலர் கூறுவதுபோல் அறம் ஒரு தெய்வமும் அன்று. இதுபோல் வள்ளுவர் அறத்தைத் தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றல்போல் சித்திரிக்கும் இடங்களில், அறத்தை வலியுறுத்துவதற்குப் பயன்படுத்தும் உத்தி என்று பொருள்கொள்வதே சிறந்ததாகத் தோன்றுகிறது. அதுபோல் பல இடங்களில் வள்ளுவர் “அறம் செய்க” என்று கூறுகிறார். ”அறம் செய்க” என்பதற்கு ”அறத்தைப் பின்பற்றுக” என்று பொருள்கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

 

முடிவுரை

வள்ளுவர் பார்வையில் “மனத்தில் மாசில்லாமல் இருப்பதுதான் அறம்.  மனத்தில்

மாசில்லவாவிட்டால் மனிதன் தன்னிடத்தில்  இயல்பாக உள்ள அன்பு என்னும் பண்பை வெளிப்படுத்த முடியும். அன்புள்ள ஒருவன் பாசத்தோடும் பரிவோடும் மனைவி, மக்கள், பெற்றோர், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கும், அவனை நம்பி வந்தவர்களுக்கும் துணையாக இருந்து நன்மைகளைச் செய்வான். நாளடைவில், அவன் நாடாமலேயே அவனுக்குப் பலருடைய நட்புக் கிடைக்கும். அடுத்த நிலையில், அவனுடைய அன்பு அருளாக மலர்ந்து, எவ்வுயிர்க்கும் தீமை செய்யாமல், அனைத்துயிர்களுக்கும் தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்வான்.   இதுவே வள்ளுவர் கூறும் அறம். வள்ளுவரின் அறத்தைப் பற்றிய கருத்து எந்நாட்டவர்க்கும் எக்காலத்துக்கும் ஏற்புடையது.

 

 

 

 

 

 

 



[1]. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

          வாடினேன் பசியினால் இளைத்தே

     வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த

          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

     நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

          நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

     ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்

          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

 

Tuesday, January 27, 2026

உங்கள் கவனத்திற்கு

 அன்பிற்குரிய வாசகர்களுக்கு,

வணக்கம்.

புதிய  பதிவுகள் அல்லது வாசகர்களுக்கு நான் கூறவிரும்பும் செய்திகளை https://updateinfo2024.blogspot.com என்ற பதிவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

ஆகவே, அவ்வப்பொழுது, https://updateinfo2024.blogspot.com என்ற பதிவிற்குச் சென்று என்னுடைய பதிவுகளைப் பற்றிய புதிய  செய்திகளைத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

பிரபாகரன்

Thursday, December 26, 2024

புறநானூற்றுப் பாடல்களைத் தழுவிய நாடகங்கள்

 அன்பிற்குரிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

கோப்பெருஞ்சோழன் என்ற சோழ மன்னனும் பிசிராந்தையார் என்ற புலவரும், ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே சிறந்த நண்பர்களாக இருந்தார்கள்.  ஏதோ காரணத்தினால், கோபெருஞ்சோழனுக்கும் அவனுடைய இரண்டு மகன்களுக்கும் இடையே போர் தொடங்க இருங்தது. அப்பொழுது ஒரு புலவர், கோப்பெருஞ்சோழனுக்கு அறிவுரை கூறிப் போரைத் தடுத்து நிறுத்தினார். கோப்பெருஞ்சோழன் இயற்றியதாகவும் பிசிராந்தையார் இயற்றியதாகவும் புறநானூற்றில் பல பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்களில் உள்ள கருத்துகளோடு கறபனையும் கலந்து ”கோப்பெருஞ்சோழன்” என்று ஒரு  சிறு நாடகம் எழுதியுள்ளேன்.

மயிலுக்குப் போர்வை அளித்த வள்ளல் பேகனை பற்றிய புறநானூற்றுப் பாடல்களோடு  என்னுடைய கற்பனையும் கலந்து, “கொடை மடம் கொண்ட பேகன்” என்று ஒரு சிறு நாடகம் எழுதியுள்ளேன்.

இந்த இரண்டு நாடகங்களையும் https://sangamplays.blogspot.com என்ற வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். ஆர்வமும் நேரமும் இருந்தால் அவற்றைப் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

பிரபாகரன்

Tuesday, September 5, 2023

Letter to the Readers - Sept. 5, 2023

 Dear friends,

vanakkam.

Thanks for all your interest in my blog, https://sasq21.blogspot.com  and your overwhelming support. As a result of the readers’ interest and response, I decided to publish this as a book. The book is titled, “Valluvar’s Answers to Vital Questions.” The book is a revised version of this blog, where I have corrected a few minor errors, omissions, etc. The book has forewords from Dr. Armoogum Parsuramen, former Minister of Mauritius and Director of UNESCO, and Hon’ble Justice R. Mahadevan of Madras High Court. The book is available in India in leading bookstores and from the Publisher. Contact information for the Publisher is as follows:

Emerald Publishers

15A, I Floor, CASA Major Rd

Egmore, Chennai, Tamil Nadu 600 008, India

Phone+91 98406 96574 

 

I have a few copies with me. Those of you who are in the USA can purchase the book from me. The price of the book, including shipping charges, is $20.00. If you send $20.00 through Zelle to my mobile phone number ((443)752 - 0238) along with your mailing address, I will be glad to send you the book.

If you have any questions, please feel free to contact me via email (prabu0111@gmail.com).

Thank you support.

anbudan,

Dr. R. Prabhakaran

Thursday, November 4, 2021

இன்றைய உலகுக்குத் திருக்குறள் கூறும் அறிவுரைகள்

                              இன்றைய உலகுக்குத்  திருக்குறள் கூறும் அறிவுரைகள்


முன்னுரை

இவ்வுலகில் மனிதர்கள் நெடுங்காலமாகவே தங்களுடைய வாழ்க்கையில் பலவகையான துன்பங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்; மற்ற உயிரினங்களும் பல இன்னல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய துன்பங்களுக்கு முடிவுகாண வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐக்கிய நாடுகளின் அவையைச் சார்ந்த அறிஞர்கள் 2015 ஆம் ஆண்டு, நிலையான வளர்ச்சிக்கான பதினேழு இலக்குகளை முடிவு செய்தார்கள்.  ஆங்கிலத்தில், அவை ‘United Nations Organization’s Sustainable Development Goals’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த இலக்குகளை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அந்த இலக்குகளை அடைந்தால் உலகில் வறுமை, பிணி, வன்முறை மற்றும் சுற்றுச் சூழல் சீரழிவு ஆகியவற்றால் வரும் நான்கு பெரும் துன்பங்களையும் பெருமளவில் குறைத்துவிடலாம் என்பது ஐ. நா. அவை அறிஞர்களின் கருத்து. இந்த நான்கு பெரும் துன்பங்களும் வள்ளுவர் வாழ்ந்த காலத்திலும் இருந்தன. அவற்றை எப்படித் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி வள்ளுவர் பல குறட்பாக்களில் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

வறுமை

ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்குமுன், கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் மக்கள் மிகுந்த வறுமையில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. தமிழ் நாட்டில், சங்க காலத்தில் புலவர்களும் பாணர்களும் வறுமையில் வாடி, வள்ளல்களையும் மன்னர்களையும் நாடிச் சென்று பரிசு பெற்றதாக சங்க இலக்கியம் கூறுகிறது. எல்லாக் காலங்களிலும் வறுமையில் வாடிய மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். இன்றும் கோடிக்கணக்கான மக்கள் கொடிய வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

 

மன்னன் கொடையிலும் ஈகையிலும் சிறந்து விளங்கி, வறுமையில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இறைமாட்சி என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார். ஒரு நாட்டில் உள்ள வறுமையை மன்னனால் மட்டுமே ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்த வள்ளுவர், ”வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (குறள் – 221)” என்று ஈகைக்கு இலக்கணம் வகுக்கிறார். மேலும், “தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் – 212).” என்று, கைம்மாறு கருதாமல் பெய்யும் மழைபோல், பொருள் இல்லாதவர்களுக்குப் பொருள் உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். ”இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் (குறள் -1062).” என்று இறைவனையே வள்ளுவர் சாடுகிறார். எவரும் இரந்து உயிர் வாழும் நிலை இல்லாமல் இருக்க வேண்டுமானால், மன்னனும், மக்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை வறியவர்களுக்கு உதவி செய்து அவர்களின் நல்வாழ்விற்கு வழி வகுக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. வறுமையில் இருந்து, பசியென்று வந்து கேட்பவர்க்கு உணவு அளிப்பதால் மட்டும் வறுமையை ஒழிக்க முடியாது. வறுமையில் இருப்பவர்கள் வறுமையில் இருந்து நீங்கி வளமான வாழ்வு வாழ்வதற்கு அரசும்  செல்வம் உள்ளவர்களும் வழிவகுக்க வேண்டும் என்பதுதான் ஈகை மற்றும் ஒப்புரவு ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் கூறும் கருத்து.

 

 

பிணி

றுமையைப்போல் பிணியும் இவ்வுலகை நெடுங்காலமாகவே துன்புறுத்திவருகிறது. மருந்து என்ற அதிகாரத்தில், ”முன்பு உண்ட உணவு செறித்த பிறகு, மாறுபாடு இல்லாத உணவை அளவோடு உண்டால் உடலுக்குக் கேடு விளைவிக்கும் நோய்கள் வாரா (குறட்பாக்கள் 942, 945).” என்று வள்ளுவர் கூறுகிறார்.  இவ்வாறு உண்பதனால் எல்லா நோய்களையும் தவிர்க்க முடியாது என்பதை அறிந்த வள்ளுவர், “உறுபசியும் ஓவாப் பிணியும் (குறள் – 734)” இல்லாமல் இருப்பதுதான் சிறந்த நாடு என்று மன்னனுக்கு அறிவுரை கூறுகிறார். மரபுவழி வரும் நோய்கள், புற்று நோய்கள், கொடுந்தொற்று நோய்கள் போன்ற கொடிய நோய்களைத் தவிர்ப்பதற்கும் அவற்றை குணப்படுத்துவதற்கும் ஆட்சியில் இருப்பவர்கள் பொறுப்பேற்று ஓவாப் பிணிகளை அழிக்க வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது.

 

ன்முறை

இவ்வுலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை பலவகையான ன்முறைச் செயல்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த கேய்ன், பல் என்ற இரு மகன்களில் ஒருவன் மற்றொருவனைக் கொன்றதாக விவிலியத்தில் காண்கிறோம். போர், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்முறைகளும் மற்றும் பல வன்முறைகளும் நெடுங்காலமாகவே உலகில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ”இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் (குறள் – 316)”, என்று இன்னாசெய்யாமைக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், ”எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய்யாமை தலை (குறள் – 317)” என்று அறிவுரை கூறுகிறார். இன்னா செய்யாமை மற்றும் கொல்லாமை ஆகிய அதிகாரங்களில் வன்முறைகளைக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

சுற்றுச் சூழல் சீரழிவு

தங்களுடைய உணவுக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களை வேட்டையாடிச் சேகரித்த மனிதர்கள், ஏறத்தாழ பதினோராயிரம் ஆண்டுகளுக்குமுன், வேளாண்மை செய்யத் தொடங்கியவுடன் காடு திருத்திக் கழனி ஆக்கினார்கள். அதிலிருந்து சுற்றுச் சூழல் சீரழிவு தொடங்கியதாக யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari) என்ற வரலாற்று ஆசிரியர் தன்னுடைய Sapiens – A Brief History of Humankind என்ற நூலில் குறிப்பிடுகிறார். மனிதர்கள் சென்ற இடங்களில் எல்லாம் விலங்குகளை அழித்தார்கள்; காடுகளை அழித்தார்கள்; சுற்றுச் சூழல் சீரழிவு நடைபெறத் தொடங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய தொழிற்புரட்சிக்குப் பிறகு நிலக்கரி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சீருந்துகளும், இருபதாம் நூற்றாண்டில் விமானங்களும் வரத் தொடங்கிய பிறகு, கல்லெண்ணெய் (Petroleum) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.  நிலக்கரி, கல்லெண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருள்களை (புதைபடிவ எரிபொருள் - Fossil Fuel) எரிக்கும்போது, அவை நாம் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், கரியமில வாயுவை அதிக அளவில் காற்றில் வெளிப்படுத்துகின்றன. அதனால் வளிமண்டலமும் புவியும் வெப்பமடையும் வாய்ப்பு ஏற்படுகிறது. புவி வெப்பமடைவதால், வானிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது தொடர்ந்து நடைபெற்றால் கடல் மட்டம் உயரும்; கடலோரங்களில் உள்ள ஊர்கள் நீரில் மூழ்கும். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்கள் நிலத்தையும் நீரையும் பாழக்குகின்றன. நெகிழியாலான (நெகிழி - Plastics) பொருட்கள் நிலத்தையும் கடல் நீரையும் மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் அங்கு வாழும் விலங்குகளுக்குத் தீமை விளைவிக்கின்றன.  இவ்வாறு, ஆகாயத்தையும், நிலத்தையும், நீரையும் காற்றையும் தொடர்ந்து மாசுபடுத்தினால் அது நம்முடைய வாழ்வுக்கும் மற்ற உயிரினங்களின் வாழ்வுக்கும் கேடு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்கள்.

 

வள்ளுவர் காலத்தில், மனிதர்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக அளவில் கேடு விளைவிக்கவில்லை. விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் மனிதர்கள் சுற்றுச் சூழலுக்குச் செய்யும் தீமைகள் அதிகரித்துவிட்டன. சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் வள்ளுவர் சில அறிவுரைகளைக் கூறுகிறார்.

 

இக்காலத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் இவ்வுலகம் சொந்தமானதன்று. நமது அடுத்த தலைமுறையினர்களுக்கும், இக்காலத்தில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் அவைகளின் சந்ததிகளுக்கும் இவ்வுலகம் சொந்தமானது. ஆகவே, உலகைப் பாழாக்கி, அதை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இல்லாமல் அழிப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. சுற்றுச் சூழலுக்கு கேடுகள் வருவதற்குக் காரணம் விஞ்ஞானம் மற்றும் தொழில் நூட்பம் ஆகிய துறைகளின் வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுவரும் செயற்கைப் பொருள்கள்தான். செயற்கைப் பொருள்களால் பல நன்மைகள் இருப்பதால், அவற்றைத் தவிர்க்க முடியாது. செயற்கையாக எதைச் செய்தாலும் அது இயற்கைக்கு முரணானதாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அதை  இயற்கையோடு  இணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்ற கருத்தையும், “செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் (குறள் – 637).” என்ற குறளில் வள்ளுவர் எச்சரிக்கிறார்.

 

”எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு  இல்லை அதிர வருவதோர் நோய் (குறள் – 429)” என்ற வள்ளுவரின் அறிவுரைக்கேற்ப, விஞ்ஞானிகள்  கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி, சுற்றுச் சூழலின் சீரழிவைத் தடுத்து,  நம்மையும் நமது சந்ததியினரையும் மற்ற உயிரினங்களையும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பேரழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்வது நமது தலையாய கடமை.

முடிவுரை

வறுமை, பிணி, வன்முறை, சுற்றுச் சூழல் சீரழிவால் வரும் தீமைகளைத் தவிர்ப்பதற்கு வள்ளுவர் கூறும் அறிவுரைகள் எக்காலத்திற்கும் எந்நாட்டவர்க்கும் ஏற்றவை. மனித சமுதாயம் இதுவரை அவற்றைப் பின்பற்றத் தவறிவிட்டது. இனி வருங்காலத்திலாவது வள்ளுவரின் அறிவுரைகளைப் பின்பற்றி நாம் வாழ்வாங்கு வாழ வேண்டும்.

Saturday, October 30, 2021

நெடுநல்வாடை

 அன்பிற்குரிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

நான் சில மாதங்களாக சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை என்ற பாடலைப் படித்து, அந்தப் பாடலுக்கான உரையை https://nedunalvaadai2021.blogspot.com என்ற வலைத்தளத்தில் இப்பொழுது பதிவு செய்துள்ளேன்.

வாடைக் காற்று வீசும் குளிர் காலத்தில் ஒரு மன்னன் போருக்குப் போயிருக்கிறான்.  அவன் மனைவி அவனைவிட்டுப் பிரிந்து வருத்தத்தில் இருக்கிறாள். வருத்தத்தில் இருப்பதால் அவளுக்கு வாடைக் காலம் நீண்டதாகவும், போரில் வெற்றிபெற்றுக்கொண்டிருப்பதால் அந்த வாடைக் காலம் அந்த மன்னனுக்கு நல்லதாகவும் உள்ளது. இவ்வாறு நெடியதாகவும் அதே சமயத்தில் நல்லதாகவும் இருக்கும் வாடைக் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கவிதை நயத்தோடும், விளக்கமாகவும் சங்க காலப் புலவர் நக்கீரனார் நெடுநல்வாடை என்று ஒரு பாடலாக இயற்றியுள்ளார்.

இந்தப் பாடலைப் புரிந்துகொள்வது சற்று கடினம். என்னால் இயன்றவரை, இந்தப் பாடலின் பொருளைப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் பாடலுக்கு அறிமுகம், பாடலின் அருஞ்சொற்களுக்குப் பொருள், பதவுரை, கருத்துரை மற்றும் தொகுப்புரை (பொருட்சுருக்கம்) ஆகியவற்றைப் பதிவுசெய்துள்ளேன். ஓரளவுக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிமுகத்தைப் படியுங்கள். அதிக ஆர்வம் உள்ளவர்கள் தொகுப்புரையையும் படியுங்கள். சங்க இலக்கியத்தில் தீவிர ஆர்வமுள்ளவர்கள் பாடல், அருஞ்சொற்களுக்குப் பொருள், கருத்துரை ஆகிய அனைத்தையும் படியுங்கள். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்; நண்பர்களோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி.

அன்புடன்,

பிரபாகரன்.

பி.கு. நெடுநல்வாடையில் அதிக விருப்பமுள்ளவர்கள் விரும்பினால், குவியம் (zoom) வழியாக நாம் அனைவரும் அதைச் சேர்ந்து படிக்கலாம். அவ்வாறு படிப்பதற்கு, ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேர அளவில் நாம் ஐந்து அல்லது ஆறுமுறை நாம் கூட வேண்டியதாக இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் prabu0111@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக என்னை அல்லது kolandavel@gmail.com என்ற மின்னஞ்சல் ழியாக நண்பர் கொழந்தவேல் இராமசாமி அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. 

Friday, November 6, 2020

கற்பொழுக்கம்

 

கற்பொழுக்கம்

ஊர்மக்கள் எழுப்பிய அலரால், களவொழுக்கத்தில் இருந்த காதலர்கள் தங்கள் பெற்றோர் தங்களுடைய திருமணத்திற்குச் சம்மதிப்பார்கள் என்று எதிர்பார்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. அவர்களுடைய திருமணம் இனிதே நடைபெற்றது[1]. இனி அவர்கள் எவருக்கும் தெரியாமல் இரவில் சந்திக்கத் தேவையில்லை. ஊரார் பேச்சைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

தலைவன் தலைவியைப் பிரிந்து போருக்குச் செல்லுதல்

திருமணமாகி இரண்டு மாதங்களே ஆயின.  அவர்கள் வாழும் நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையே போர் தொடங்கியது. இளைஞர்கள் எல்லோரும் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் அரசன் அறிவித்தான். தலைவனும் அரசனுக்குத் துணையாகப் போர்புரிந்து, தன் நாடு வெற்றிபெறத் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டுமென்பதில் ஆவலாக இருந்தான். ஆனால், தன் மனைவியைவிட்டுப் பிரிய வேண்டும் என்பதை நினைத்தால் அவனுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. அவன் போருக்குச் செல்வதை அவனுடைய மனைவி சற்றும் விரும்பமாட்டாள் என்பதையும் அவள் அளவு கடந்த வருத்தம் அடைவாள் என்பதையும் நினைத்து அவன் மனம் கலங்கினான். இருப்பினும், நாட்டிற்காகப் போராடுவது தன் தலையாய கடமை என்பதில் உறுதியாக இருந்தான். போருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை அவன் தன் மனைவிக்குத் தெரியாமல் செய்துகொண்டிருந்தான்.

 

ஒருநாள் தலைவியின் தோழி வந்தாள். தலைவி வருத்தத்தோடு இருப்பதைக் கண்ட அவள், “உனக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள்தான் ஆயின. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உன் முகத்தில் கவலையைக் காண்கிறேன். ஏன்? என்ன ஆயிற்று?”, என்று கேட்டாள். அதற்குத் தலைவி, “போருக்குப் போவதற்குத் தேவையான ஏற்பாடுகளை என் கணவர் எனக்குத் தெரியாமல் செய்துகொண்டிருகிறார். அவர் போருக்குப் போகப்போவது எனக்குத் தெரியாது என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் இன்னும் சில நாட்களில் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்.” என்று கூறினாள். ”முன்பெல்லாம் அவர் என்னைப் பார்த்தாலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். இப்பொழுது, நாங்கள் கூடி மகிழ்ந்தாலும், அவர் என்னைவிட்டுப் பிரிந்துபோகப்போகிறாரே என்பதை நினைத்து அஞ்சுகிறேன்[2]. என்னால் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாக அறிந்த என் கணவர், என்னைவிட்டுப் பிரிவதால், ”“உன்னைப் பிரியேன்.”, என்று அவர் முன்பு சொல்லிய சொல்லை என்னால் நம்ப முடியவில்லை[3].”, என்று வருத்தத்தோடு தலைவி தோழியிடம் கூறினாள். தலைவியின் மனநிலையைத் தோழி நன்கு உணர்ந்தாள், “நான் உன்னுடைய கணவரிடம் பேசுகிறேன். அவர் உன்னைவிட்டுப் பிரிந்தால், நீ மிகுந்த வருத்தம் அடைவாய் என்றும், போருக்குப் போக வேண்டாம் என்று சொல்கிறேன். நீ கவலைப்படாதே.”, என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள். தான் கூறியபடியே, தோழி தலைவனைச் சந்தித்து, அவனைப் போருக்குப் போக வேண்டாம் என்றும், அவன் போருக்குப் போனால், அவன் மனைவி மிகவும் வருந்துவாள் என்றும் அவனிடம் கூறினாள். போருக்குசெல்வது தன்னுடைய தவிர்க்க முடியாத கடமை என்றும் தான் விரைவில் திரும்பிவந்துவிடுவதாகவும் அவன் கூறினான். தலைவன் கூறியதைத் தோழி தலைவியிடம் கூறினாள். அதற்குத் தலைவி, “என் கணவர், என்னைவிட்டுப் பிரிந்து போகப்போகிறேன் என்று சொல்லுகின்ற அளவிற்குக் கொடியவராக இருப்பாரானால், அவர் திரும்பிவந்து என்னிடம் அன்பு காட்டுவர் என்ற ஆசையை விட்டுவிட வேண்டியதுதான்[4].”, என்று அழுதுகொண்டே கூறினாள்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு, தான் போருக்குப் போகப்போவதைப் பற்றித் தலைவியிடம் கூற வேண்டும் என்று தலைவன் முடிவு செய்தான். அவன் தலைவியிடம் வந்து, தான் போருக்குப் போவதைப் பற்றிக் கூற முயற்சி செய்தான். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை உணர்ந்த தலைவி, “நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்து செல்லவில்லை என்ற செய்தி இருந்தால் அதை என்னிடம் சொல்லுங்கள்; அதை விட்டுவிட்டு, நான் பிரிந்து சென்று விரைவில் திரும்பிவந்துவிடுவேன்.”, என்று கூற விரும்பினால், அதை நீங்கள் திரும்பிவரும்பொழுது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் சொல்லுங்கள்[5].”, என்று கோபத்துடன் கூறினாள். மறுநாள், மனத்தில் கோபம் இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், தலைவன் போருக்குச் செல்வதற்கு சம்மதம் அளித்து, அவள் அவனை வாழ்த்தி வழியனுப்பினாள்.

சில நாட்கள் கழித்து, தோழி தலைவியைப் பார்க்க வந்தாள். தலைவி வருத்தத்தோடு இருப்பதைப் பார்த்து, “கணவர் பிரிந்து செல்வதற்கு உடன்பட்டு, பிரிவால் வரும் துன்பத்தை நீக்கிப் பிரிவைப் பொறுத்துக்கொண்டு உயிர் வாழ்பவர் பலர்[6]. உன் கணவர் போரில் வெற்றிபெற்று விரைவில் திரும்பிவருவார். நீ உன் மனத்தைத் தேற்றிக்கொள்; வருந்தாதே!” என்று கூறித் தலைவிக்கு ஆறுதல் அளிக்க முயற்சி செய்தாள்.

 

தலைவன் சென்று மேலும் சில நாட்களாயின. தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து அவளுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லலாம் என்ற நோக்கத்தோடு தோழி வந்தாள். தலைவி தனிமையில் அழுதுகொண்டு இருப்பதைக் கண்ட தோழி, “ஏன் அழுகிறாய்? போர் விரைவில் முடிந்து, உன் கணவர் வெற்றியுடன் திரும்பிவருவார். மகிழ்ச்சியாக இரு!. அழாதே!” என்று கூறினாள்.  ”எனக்கு அவர்மீது உள்ள ஆசையை நான் மறைக்கத்தான் பார்க்கிறேன். ஆனால், எனக்கு அவர்மீது உள்ள காதலால் வரும் துன்பம், நீரை இறைக்கும்பொழுது ஊற்றிலிருந்து நீர் பெருகுவதுபோல் மேலும் மேலும் பெருகுகிறது[7]. ஆனால், என்னுடைய நாணத்தால், எனக்கு அவர்மீது உள்ள ஆசையைப் பற்றி எவரிடமும் சொல்ல முடியாமல் இருக்கிறேன். என்னுடைய உயிர் நாணத்திற்கும் காமத்திற்கும் நடுவே சிக்கிக்கொண்டு தவிக்கிறது[8]. காதலால் வருகின்ற ஆசையாகிய கொடிய கடலைக் கடக்க முயற்சி செய்கிறேன்; ஆனால், கரைசேர முடியவில்லை. அதனால் நான் இந்த நள்ளிரவில் அக்கடலில் தனியாக இருக்கிறேன்[9]. என்னுடைய காமநோய் ஒரு கடலைப்போல் பரந்து கிடக்கிறது. ஆனால், அதைக் கடந்து செல்வதற்கான தோணி என்னிடம் இல்லை[10]. இந்த இராப் பொழுது இரங்குதற்குரியது. அது எல்லோரையும் தூங்கவைத்துவிட்டு என்னை மட்டும் துணையாகக் கொண்டுள்ளது[11]. நான் ஏன் அழுதுகொண்டிருக்கிறேன் என்று நீ கேட்கிறாயே? ஏன் தெரியுமா? என் காதலர் இருக்கும் இடத்திற்கு என் உள்ளம் விரைந்து செல்கிறது. ஆனால், என் கண்களால் அவ்வாறு விரைந்துசென்று அவரைக் காணமுடியவில்லை. அதனால்தான், என் கண்கள் வெள்ளம்போல் கண்ணீரைச் சொரிந்து அதில் நீந்திக்கொண்டிருக்கின்றன[12]. எனக்கு அவரை இப்பொழுதே காணவேண்டும்போல் இருக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்று தேம்பித்தேம்பி அழுதுகொண்டு தலைவி தோழியிடம் கூறினாள்.

 

“உன் கணவர் விரைவில் திரும்பிவருவார் என்பதில் நீ உறுதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் உன் கண்கள் அழா. நீ அழுவதற்கு நீதான் காரணம். உன் கண்கள் அல்ல. நீ ஏன் உன் கண்களைக் குறை கூறுகிறாய்? சரி, சரி. கண்களைத் துடைத்துக்கொள்! அழாதே!”, என்று தோழி கூறினாள். ”உனக்கு என் கண்களைப் பற்றித் தெரியாது. அவைதான் என்னுடைய துன்பத்திற்கெல்லாம் காரணம். இந்தக் கண்கள் அவரைக் காட்டியதால்தானே எனக்கு இந்தத் தீராத துன்பம் வந்துசேர்ந்தது. அப்படி இருக்க, இப்போது இந்தக் கண்கள் அழுவது ஏன்[13]? இந்தக் கண்கள் அன்று திடீரென்று அவரை விரும்பிப் பார்த்து, காதலை வளர்த்து, இப்பொழுது அவரைக் காணமுடியவில்லையே என்று அழுவது சிரிக்கத்தக்கதாக இருக்கிறது[14]. கடலினும் பெரிய காமநோயை உண்டாக்கிய எனது கண்கள் தூங்க முடியாமல் துன்பத்தை அனுபவிக்கின்றன[15]. சிந்தித்துப் பார்த்தால், எனக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக்கொண்டது மிகவும் இனிமையானதுதான் என்று தோன்றுகிறது[16]. அன்று விரும்பி அவர்மீது ஆசைப்பட்டு அவரைக்கண்ட கண்கள் இன்று துன்பத்தை அனுபவித்து அனுபவித்துத் தம்மிடம் உள்ள நீர் வற்றிப்போகட்டும்[17].” என்று தலைவி தன் கண்களைப் பற்றித் தன் தோழியிடம் கூறினாள்.

 

தலைவி தன் கண்களைப் பற்றி இதுவரை கூறியதைப் பொறுமையாகக் கேட்ட தோழி, “உன் கண்களால்தான் நீ அவரைக் கண்டாய்; காதல் கொண்டாய்; திருமணம் செய்து கொண்டாய்; நீங்கள் இருவரும் இதுவரை மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கை நடத்தினீர்கள். இப்பொழுது சிறிதுகாலம் பிரிந்திருக்கப் போகிறீர்கள். நான் முன்பே கூறியதுபோல், இதுபோல், ஆடவர் அவ்வப்பொழுது போருக்காகவும் பொருளுக்காகவும் சிலகாலம் பிரிந்து செல்வது இயற்கை.  நீ இந்தப் பிரிவை பொறுத்துக்கொள்ள வேண்டும்.” என்று அறிவுரை கூறினாள்.

 

”நாங்கள் மற்ற கணவன் மனைவி போல் இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் அளவு கடந்த காதல் உடையவர்கள். நான் உனக்கு ஒன்று சொல்கிறேன், கேள். ஒரு நாள் நான் என் கணவரைத் தழுவிக்கொண்டு படுத்திருந்தபொழுது, சிறிது ஒரு பக்கமாகத் தள்ளிப் படுத்தேன். உடனே, பசலை நோய் என்னை அள்ளிக்கொள்ளும் அளவிற்கு உடல் முழுதும் பரவத் தொடங்கியது[18]. போருக்காக என்னுடைய கணவர் என்னைவிட்டுப் பிரிந்து, சிறிது தொலைவுதான் சென்றிருப்பார் என்றாலும், அதற்குள்ளாகவே இங்கே என் மேனியில் பசலை படரத் தொடங்கியது[19]. இப்பொழுது, என்னுடைய நிலை உனக்குப் புரிகிறதா? என்னால் எப்படி இந்தப் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியும்?” தோழி, “எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிவிட்டேன். உன் கணவர் உன்னைவிட்டுப் பிரிந்து போருக்குச் செல்வதற்கு நீ சம்மதம் அளித்தாய். நான் மீண்டும் சொல்கிறேன். அவர் விரைவில் திரும்பிவருவார். இந்தப் பிரிவை எப்படிப் பொறுத்துக்கொள்வது என்று சிந்தித்துப் பார். பொறுமையாக இரு. உன் உடலை கவனித்துக்கொள்.”, என்று அறிவுரை கூறி, தலைவியிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள். ”என் கணவர் போருக்குச் செல்வதற்கு உடன்பட்ட நான் இப்பொழுது என் உடலில் பசலை பரவியதை எவரிடம் போய்ச் சொல்வேன்[20]?” என்று தலைவி தன்னையே நொந்துகொண்டாள்.

 

தலைவன் வரவுக்காகத் தலைவி காத்திருத்தல்

சில நட்களுக்குப் பிறகு, தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக, தோழி வந்தாள். தலைவி ஓரளவிற்கு அமைதியாக இருப்பதைப் பார்த்து, அவள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். “எப்படி இருக்கிறாய்” என்று தலைவியைப் பார்த்துக் கேட்டாள். அதற்குத் தலைவி, “என் கணவர் என்னைவிட்டுப் பிரியாமல் இருந்தபொழுது, மாலைப்பொழுது துன்பம் செய்ததை நான் அறிந்ததில்லை[21]. இந்தக் காமநோய் காலையில் முளைவிட்டு பகல்முழுதும் வளர்ந்து மாலையில் விரியும் தன்மையுடையது[22]. மாலை வேளைகளில்தான் அவரைவிட்டுப் பிரிந்திருப்பது அதிக துன்பத்தைத் தருகிறது. என்ன செய்வது? தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறுபெற்றவர் விதையில்லாத பழத்தைப்போல் இடையறாத காம இன்பத்தை முழுமையாக அனுபவிப்பவராவார்[23]. காதலிப்பவர்க்கு அவர் யாரைக் காதலிக்கிறாரோ அவர் அளிக்கும் அன்பு, உயிர்வாழும் மக்களுக்குத் தேவையான மழை தேவையானபொழுது பெய்வது போல்வதாகும்[24].”, என்று சற்று விரக்தியோடு பதில் அளித்தாள்.  ”உனக்கு ஒன்று தெரியுமா? சில சம்யங்களில், எனக்குத் தும்மல் வருவதுபோல் தோன்றி அடங்கி விடுகின்றது. ஆதலால், என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாது மறந்துவிடுகின்றார் என்று தோன்றுகிறது[25]. என்னுடைய உள்ளத்தில் அவர் எப்போதும் இருக்கின்றாரே! அதுபோல் அவர் நெஞ்சத்தில் நான் இருக்கின்றேனா? தெரியவில்லையே![26]. என் கணவர் என்னைவிட்டுப் பிரிந்திருப்பதால் நாங்கள் கூடி இன்பமுறாவிட்டாலும்,  சில நாட்களில் என் கணவரை நான் கனவில் காண்கிறேன். அதனால்தான் என் உயிர் என்னைவிட்டுப் பிரியாமல் இருக்கிறது[27]. நான் தூங்கும்பொழுது, என் கனவில் வந்து, அவர் என் தோள்மீது படுத்திருப்பதுபோல் காண்கிறேன். ஆனால், விழித்தவுடன் அவர் என் செஞ்சுக்குள் விரைந்து புகுந்துகொள்கிறார்[28]. நான் அவரைக் கனவில் கண்டால், அது அவரிடமிருந்து எனக்குத் தூது வந்ததுபோல் இருக்கிறது. அப்படிப்பட்ட கனவிற்கு நான் எப்படி விருந்தளித்துப் பாராட்டப் போகிறேன்?[29]”, என்று தன் மனத்தில் தோன்றியவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் தலைவி தோழியிடம் சொல்லி முடித்துவிட்டாள். தலைவி கூறியதைக் கவனமாகக் கேட்ட தோழி, “நீ வருத்தமாக இருந்தாலும், உன் கணவரின் பிரிவை நன்றாகச் சமாளிக்கிறாய்.”, என்று தலைவியைப் பாராட்டிவிட்டு தன் வீட்டுக்குச் சென்றாள்.

 

”மனமே! உன்னை வாழ்த்துகிறேன். நீ அடைந்த காம வேதனையைப்போல் அவர் அடையாததால் அவர் விரைந்து வரவில்லை. அவர் வந்தபின் நீ அடையும் காம வேதனைகளை அவரிடம் சொல்லிக்கொள்ளலாம், இப்போது, கடல்போல் உன்னுள் வளர்ந்துவிட்ட காம ஆசையை அடக்கிக் கொள்![30]”, என்று தலைவி தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.

 

தலைவன் வராததால் தலைவி வருத்தம் மிகுதல்

போருக்குப் போன தலைவன் பலநாட்களுக்குப் பின்னரும் திரும்பி வரவில்லை. தலைவி எப்படி இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ளத் தோழி ஆவலாக இருந்தாள். ஆகவே, அவள் தலைவியைப் பார்க்க வந்தாள். தலைவி அழகிழந்து காணப்பட்டாள். ”பிரிவுத் துன்பத்தை உனக்குத் தந்துவிட்டு, நெடுந்தூரம் சென்ற தலைவரை நினைத்து நீ அழுவதால், உன்னுடைய கண்கள் அழகிழந்து காணப்படுகின்றன. முன்பெல்லாம் மலர்கள் உன் கண்களைக் கண்டு, அவற்றைப்போல் தாம் இல்லையே என்று நாணின. இப்பொழுது உன் கண்கள் மலர்களைப்போல் தாம் இல்லையே என்று நாணுகின்றன[31]. பசலை நிறம் அடைந்து, கண்ணீர் வடிக்கும் உன் கண்கள், உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருப்பதை பிறருக்குத் தெரியப்படுத்துகின்றன[32]. உன் கணவர் உன்னைப் பிரிந்திருப்பதால், முன்பு அழகாக இருந்த உன் தோள்கள் இப்பொழுது மெலிந்து, அங்கிருந்த வளையல்கள் கழலுகின்றன.”, என்று தலைவியின் நிலையைக் கண்ட தோழி வருத்தத்தோடு கூறினாள்[33]. தலைவியும் தன் நிலையை நன்கு உணர்ந்தாள். அவள் தன் நெஞ்சை நோக்கி, “நெஞ்சே! எனக்குத் துன்பம் தரும் இந்தக் காமநோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றை, நீ ஆலோசித்துச் சொல்ல மாட்டாயோ[34]? என் தலைவர் என்மீது காதல் இல்லாதவராக இருக்கும்போது, நீ அவரை எண்ணியெண்ணி வருந்துவது பேதைமையாகும்[35]. நீ இங்கிருந்து அவரை எண்ணி வருந்துவது ஏன்? இத்துன்பமான நோய்க்குக் காரணமான என் தலைவர் என்னை நினைத்து இரங்குவதாகத் தெரியவில்லையே[36]! நீ அவரைக் காணச் செல்லும்போது, என் கண்களையும் அழைத்துக்கொண்டு செல்.  என் கண்கள் அவரைக் காண விரும்பி என்னைப் பிடுங்கித் தின்னுகின்றன[37].”, என்று கூறினாள்.

 

”நம் வேந்தன் விரைவில் போரில் வெற்றிபெற வேண்டும்; அவன் அவ்வாறு வெற்றிபெற்றால், நாமும் (ஊர் சென்று) மனைவியோடு கூடி, மாலைப்பொழுதில் விருந்தை அனுபவிக்கலாம்[38]. என் மனைவி என் பிரிவைத் தாங்க முடியாமல் மனமுடைந்து விட்டால், பின்னர் அவள் என்னை அடைவதால் என்ன பயன்? அதற்கும் மேலாக, அவளோடு கலந்தாலும்தான் என்ன பயன்? ஒரு பயனுமில்லை[39].” என்று தலைவன் எண்ணினான்.

 

தலைவன் விரும்பியதைப்போல் போர் முடிந்தது. தலைவனின் நாடு போரில் வெற்றிபெற்றது. அந்த நல்ல செய்தியைத் தலைவி கேள்விப்பட்டாள், அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த நல்ல செய்தியைக் கேட்ட தோழி தலைவியைப் பார்க்க வந்தாள். ”அவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரிற் குறித்த குறிகளைத் தொட்டுத்தொட்டு எண்ணுவதால், என் விரல்கள் தேய்ந்து போயின. அது மட்டுமல்லாமல், அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து என் கண்களும் ஒளியிழந்து பூத்துப் போயின[40]. இப்பொழுது அவர் வரப்போகிறார். என்னைவிட்டுப் பிரிந்த என் கணவர் மிகுந்த ஆசையோடு வருவதை எண்ணி என் மனம் (குரங்குபோல்) மரத்தின் கிளைக்குக் கிளை மேலும் மேலும் ஏறி அவர் வருவதைப் பார்க்கத் துடிக்கிறது[41].  என் கணவரை நான் என் கண்ணாரக் காணப்போகிறேன்; அவ்வாறு கண்டபின் என் மெல்லிய தோளில் உள்ள பசலை உடனே நீங்கும்[42]. என் கண்போன்ற கணவர் நீண்ட நாட்கள் கழித்து வருவதால், அவரோடு ஊடுவேனோ, அல்லது அவரைத் தழுவிக்கொள்வேனோ அல்லது அவரைக் கூடுவேனோ? எதைச் செய்வேன் என்று தெரியவில்லை.[43]” என்று தோழியிடம் தலைவி பெருமகிழ்ச்சியோடு கூறினாள்.

 

 

தலைவனின் வருகை

தலைவன் வீடு வந்துசேர்ந்தான். அவனைக் கண்டதும் தலைவி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அதே சமயம், அவன் மீண்டும் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவானோ என்ற அச்சம் ஒரு பக்கம் அவளை வருத்திகொண்டிருந்தது. அவள் தன் உள்ளத்தில் இருந்த அச்சத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் முகத்தில் மகிழ்ச்சியோடு தன் பணிகளில் கவனம் செலுத்தினாள். ஆனால், தன் மனைவி அவள்  உள்ளத்தில் இருப்பதை மறைத்தாலும் அதையும் மீறி, அவளுடைய மைதீட்டிய கண்கள் சொல்ல நினைக்கும் செய்தி ஒன்று இருப்பதை அவள் கணவன் உணர்ந்தான்[44]. ”கோக்கப்பட்ட மணிகளுக்குள் இருந்து விளங்கித் தோன்றும் நூல்போல என் மனைவியின் அழகுக்குள்ளிருந்து காணப்படும் குறிப்பு ஒன்று உண்டு[45]”, என்றும்,  ”அரும்பும் மொட்டினுள் அடங்கியிருக்கின்ற மணத்தைப்போல், என் மனைவியின் புன்முறுவலின் உள்ளேயும் அடங்கியிருக்கும் குறிப்பு ஒன்று உண்டு[46]”, என்றும் தான் உணர்வதாக மனைவியின் தோழியிடம் அவன் கூறினான். அதற்குத் தோழி, “இப்பொழுது அவள் என்ன செய்தாள் பார்த்தீரா?  ”அவள் தன் வளையல்களைப் பார்த்தாள்; மெலிந்திருக்கும் தோள்களைப் பார்த்தாள்; இனியும் பிரிந்து செல்வதானால், என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்ற நோக்கத்தோடு, தன் கால்களைப் பார்த்தாள்[47]. நீர் அவளை விட்டுப் பிரிவதை அவள் விரும்பவில்லை என்பதைத்தான் அவள் குறிப்பால் உணர்த்துகிறாள்.”, என்று தோழி அந்தக் கணவனுக்கு விளக்கினாள்.

 

தலைவியின் ஊடல்

தலைவன் வந்து சில நாட்களாயின. ஒரு நாள் தோழியும் தலைவியும் தனியாக இருந்தார்கள். அப்பொழுது தோழி, ”உன் கணவர் வந்தவுடன் அவரோடு ஊடப் போகிறேன் என்று சொன்னாயே! என்ன ஆயிற்று? அவரைக் கண்டவுடன் ஊடலை மறந்து உன் மனம் கூடலில் சென்றது போலிருக்கிறதே!”, என்று கூறித் தலைவியை சற்று உரிமையோடு கிண்டல் செய்தாள். தலைவி வெட்கித் தலைகுனிந்து, ”என்ன செய்வது? பனையளவுக்குக் காமம் இருந்தால் தினையளவுக்குக்கூட ஊடல் கூடாது என்று கேள்விப்பட்டதில்லையா[48]? என் கதையும் அது தான். நான் என் கணவருடன் ஊடவேண்டும் என்று நினைத்துச் சென்றேன். ஆனால், என் நெஞ்சம் அதை மறந்து கூடுவதற்குச் சென்றது[49]. கண்ணிற்கு மைதீட்டும்பொழுது மைதீட்டும் கோலைக் காணமுடியாத கண்போல, என் கணவரைக் கண்டவுடன் அவருடைய குற்றங்களை என்னால் காண முடியவில்லை[50].  நான் என் கணவரைக் காணும்பொழுது, அவர் தவறுகளைக் காண்பதில்லை. ஆனால், அவரைக் காணாதபொழுது (என்னைவிட்டுப் பிரிந்திருக்கும்பொழுது) அவருடைய தவறுகளைத் தவிர பிறவற்றைக் காண்பதில்லை[51]. வெள்ளப் பெருக்கெடுத்தோடும் ஆற்றில் குதித்தால் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் குதிப்பதைப்போல், ஊடல் கூடலில் முடியும் என்று தெரிந்திருந்தும் ஊடுவதால் என்ன பயன்[52]?” என்று தன்னுடைய ஊடல் செய்ய இயலாத நிலையைப் பற்றித் தோழியிடம் தலைவி கூறினாள். ”நீ சொல்வதெல்லாம் சரி. இன்று அவர் உன்னைத் தழுவ வரும்பொழுது, நீ அவரைத் தழுவாமல் இருந்து ஊடல் செய். அவர் படும் துன்பத்தைச் சிறிது காண்போம்[53]. ஆனால், ஊடலை அதிக நேரம் நீடிக்காதே. கலவிக்குமுன் ஏற்படக்கூடிய ஊடல், உணவில் உப்பு அளவாக இருப்பதைப்போல் அளவாக இருக்க வேண்டும். ஊடல் நீடித்தால் அது உணவில் உப்பு மிகுதியாக இருப்பதைப் போன்றது[54].”, என்று தோழி தலைவிக்கு அறிவுரை கூறினாள்.

 

தலைவன் தலைவியைக் காண வந்தான். தானும் தன் மனைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிப்பதை எண்ணி மகிழ்ந்து, கணவன் மனைவி ஆகிய இணையர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் யாவரினும் தாம் இருவரும் மிக்க காதலுடையவர்கள் என்ற கருத்தில், “யாரினும் காதலம்” என்று தலைவன் சொன்னவுடன், தன் கணவனுக்குக்குப் பல காதலியர் இருப்பதாகவும், “அவர்கள் அனைவருள்ளும் ”உன்னையே மிகுதியாகக் காதலிக்கிறேன்” என்று அவன் கூறியதாகவும் எடுத்துகொண்டு, “யாரைக் காட்டிலும்? யாரைக் காட்டிலும்?” என்று தலைவி ஊடத்தொடங்கிவிட்டாள்[55]. தலைவன், “இப்பிறவியில் நாம் பிரிய மாட்டோம்”, என்று சொன்னவுடன், ”மறுபிறவியில் நாம் பிரிவோம்”, என்று அவன் சொன்னதாகக்கொண்டு அவள் கண்ணீர்விட்டு அழத்தொடங்கினாள்[56]. உன்னைவிட்டுப் பிரிந்திருக்கும்பொழுது, “உன்னையே நினைத்துகொண்டிருந்தேன்.” என்று தலைவன் சொன்னவுடன், “மறந்தால்தானே நினைக்க முடியும். ஏன் என்னை மறந்தீர்?” என்று தலைவனைத் தழுவாமல் ஊடினாள்[57]. தலைவனுக்குத் தும்மல் வந்தது. வழக்கம்போல் தலைவி அவனை ”நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினாள். ஆனால், உடனே, “யாரோ உம்மை நினைத்ததால்தான் உமக்குத் தும்மல் வந்தது. யார் நினைத்ததால் தும்மினீர்[58]”, என்று கேட்டுத் தலைவி அழுதாள். தலைவனுக்கு மீண்டும் ஒருமுறை தும்மல் வந்தது. தும்மினால் தலவி அழுகிறாளே என்று நினைத்து அவன் தும்மலை அடக்க முயற்சி செய்தான். அதைப் பார்த்த தலைவி, “வேறுயாரோ உம்மை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்கின்றீர்.”, என்று சொல்லி மீண்டும் அழுதாள்[59]. இவ்வாறு எதைச் செய்தாலும் தொடர்ந்து ஊடுகிறாளே என்று எண்ணி, இனிய சொற்களைப் பேசி, தலைவியின் ஊடலைத் தலைவன் தணிக்க முயற்சி செய்தான். அப்பொழுது, தலைவி, “மற்ற பெண்கள் உம்மோடு ஊடும்பொழுது இப்பாடித்தான் இனிய சொற்களைப் பேசி ஊடலைத் தீர்ப்பீரா?[60]” என்று சினந்து ஊடலைத் தொடர்ந்தாள். தலைவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னுடைய பேச்சும் செயலும் தலைவிக்குக் கோபத்தை உண்டாக்குவதால், அவள் அழகை நினைத்து தலைவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது, “என் அழகை யாரோடு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்?[61]” என்று கேட்டு மீண்டும் கோபமடைந்தாள்.

 

இவ்வாறு ஊடல் சற்று நேரம் நீடித்தது. உணவில் உப்பைப்போல் ஊடல் அளவாக இருக்க வேண்டும் என்று தோழி கூறியது தலைவியின் நினைவிற்கு வந்தது. இனியும் ஊடலைத் தொடரக்கூடாது என்று அவள் முடிவு செய்தாள். அதே சமயம், அவளிடம் பணிவாகவும் அன்பாகவும் தலைவன் பேச முயற்சி செய்தான், தலைவியின் ஊடல் முடிந்ததைத் தலைவியின் முகத்திலிருந்து தலைவன் உணர்ந்தான். “நாம் தவறே செய்யாத நிலையிலும், நாம் விரும்பும் காதலியின் மெல்லிய தோள்களைத் தழுவாமல் பிரிந்திருப்பதிலும் இன்பம் தரக்கூடியது ஒன்று உண்டு[62].”, என்று அந்த ஊடலுக்குப் பின் வரப்போகும் கூடலால் வரும் இன்பத்தை நினைத்து மகிழ்ந்தான். அதைத்தான்,

 

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்

கூடி முயங்கப் பெறின்.                                 (குறள் – 1330)

 

என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.



[1]தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்

   அகறலின் ஆங்கொன்று உடைத்து.                                                                                              (குறள் – 1325)


 



[1] திருமணமாகிய காதலர்கள்  கணவன் மனைவி அல்லது தலைவன் தலைவி என்று இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படுகிறார்கள்.

[2] ன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.                                                                                  (குறள் – 1152)

[3] அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.                                                                                    (குறள் – 1153)

[4] பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

    நல்குவர் என்னும் நசை.                                                                                          (குறள் – 1156)

[5] செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

    வல்வரவு வாழ்வார்க் குரை.                                                                                   (குறள் – 1151)

[6]அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

  பின்இருந்து வாழ்வார் பலர்.                                                                                    (குறள் – 1160)

7மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

  ஊற்றுநீர் போல மிகும்.                                                                                              (குறள் – 1161)

[8]காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

 நோனா உடம்பின் அகத்து.                                                                                        (குறள் – 1163)

[9]காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

   யாமத்தும் யானே உளேன்.                                                                                      (குறள் – 1167)

[10]காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

   ஏமப் புணைமன்னும் இல்.                                                                                     (குறள் – 1164)

[11]மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

    என்னல்லது இல்லை துணை.                                                                               (குறள் – 1168)

[12]உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

    நீந்தல மன்னோஎன் கண்.                                                                                       (குறள் – 1170)

[13]கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

    தாம்காட்ட யாம்கண் டது.                                                                                      (குறள் – 1171)

[14]கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

    இதுநகத் தக்கது உடைத்து.                                                                                      (குறள் – 1173)

[15]படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

    காமநோய் செய்தஎன் கண்.                                                                                    (குறள் – 1175)

[16]ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

    தாஅம் இதற்பட் டது.                                                                                                (குறள் – 1176)

[17]உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து

    வேண்டி அவர்க்கண்ட கண்.                                                                                  (குறள் – 1177)

[18]புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

    அள்ளிக்கொள் வற்றே பசப்பு.                                                                              (குறள் – 1187)

[19]உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

    மேனி பசப்பூர் வது.                                                                                                   (குறள் – 1185)

[20] நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

    பண்பியார்க்கு உரைக்கோ பிற.                                                                                                    (குறள் – 1181)

[21]மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

    காலை அறிந்தது லேன்.                                                                                                               (குறள் – 1226)

[22]காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

    மாலை மலரும்இந் நோய்.                                                                                                             (குறள் – 1227)

[23]தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

    காமத்துக் காழில் கனி.                                                                                                                      (குறள் – 1191)

[24]வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

    வீழ்வார் அளிக்கும் அளி.                                                                                                                (குறள் – 1192)

[25]நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

    சினைப்பது போன்று கெடும்.                                                                                                       (குறள் – 1203)

[26]யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

    ஓஓ உளரே அவர்.                                                                                                                                (குறள் – 1204)

[27]நனவினால் நல்கா தவரை கனவினான்

    காண்டலின் உண்டுஎன் உயிர்.                                                                                                      (குறள் – 1213)

[28]துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

    நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.                                                                                                          (குறள் – 1218)

[29]காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

    யாதுசெய் வேன்கொல் விருந்து.                                                                                                  (குறள் – 1211)

[30]உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

     செறாஅஅய் வாழிய நெஞ்சு.                                                                                                        (குறள் – 1200)

[31]சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

    நறுமலர் நாணின கண்.                                                                                                                     (குறள் – 1231)

[32]நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

    பசந்து பனிவாரும் கண்.                                                                                                                  (குறள் – 1232)

[33]பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணநீங்கித்

    தொல்கவின் வாடிய தோள்.                                                                                                           (குறள் – 1234)

[34]நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

    எவ்வநோய் தீர்க்கும் மருந்து.                                                                                                        (குறள் – 1241)

[35]காதல் அவரிலர் ஆகநீ நோவது

    பேதைமை வாழிஎன் நெஞ்சு.                                                                                                       (குறள் – 1242)

[36]இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

    பைதல்நோய் செய்தார்கண் இல்.                                                                                                (குறள் – 1243)

[37]கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

    தின்னும் அவர்க்காணல் உற்று.                                                                                                    (குறள் – 1244)

[38]வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

     மாலை அயர்கம் விருந்து.                                                                                                              (குறள் – 1268)

[39]பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

     உள்ளம் உடைந்துக்கக் கால்.                                                                                                         (குறள் – 1270)

[40]வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

     நாளொற்றித் தேய்ந்த விரல்.                                                                                                         (குறள் – 1261)

[41]கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

    கோடுகொ டேறும்என் நெஞ்சு.                                                                                                   (குறள் – 1264)

[42]காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

     நீங்கும்என் மென்தோள் பசப்பு.                                                                                                 (குறள் – 1265)

[43]புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்                                       

    கண்அன்ன கேளிர் வரின்.                                                                   (குறள் – 1267)                          

[44]கரப்பினுங் கையிகந்து ஒல்லாநின் உண்கண்

    உரைக்கல் உறுவதொன்று ண்டு.                                                                                              (குறள் – 1271)

[45]மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

   அணியில் திகழ்வதொன்று உண்டு.                                                                                             (குறள் – 1273)

[46]முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

     நகைமொக்குள் உள்ளதொன்று ண்டு.                                                                                  (குறள் – 1274)

[47]தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

     அஃதாண்டு அவள்செய் தது.                                                                                                        (குறள் – 1279)

[48]தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

    காமம் நிறைய வரின்.                                                                                                                       (குறள் – 1282)

[49]ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

    கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு.                                                                                                  (குறள் – 1284)

[50]எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

     பழிகாணேன் கண்ட இடத்து.                                                                                                       (குறள் – 1285)

[51]காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

    காணேன் தவறல் லவை.                                                                                                                 (குறள் – 1286)

[52]உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

    பொய்த்தல் அறிந்தென் புலந்து.                                                                                                   (குறள் – 1287)

[53]புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்

    அல்லல்நோய் காண்கம் சிறிது.                                                                                                     (குறள் – 1301)

[54]உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

    மிக்கற்றால் நீள விடல்.                                                                                                                    (குறள் – 1302)

[55]யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

   யாரினும் யாரினும் என்று.                                                                                                               (குறள் – 1314)

[56]இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்

     கண்நிறை நீர்கொண் டனள்.                                                                                                         (குறள் – 1315)

[57]உள்ளினேன் என்றேன்மற்று ன்மறந்தீர் என்றென்னைப்

    புல்லாள் புலத்தக் கனள்.                                                                                                                 (குறள் – 1316)

[58]வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

    யாருள்ளித் தும்மினீர் என்று.                                                                                                          (குறள் – 1317)

[59]தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

    எம்மை மறைத்திரோ என்று.                                                                                                         (குறள் – 1318)

[60]தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

     இந்நீரர் ஆகுதிர் என்று.                                                                                                                   (குறள் – 1319)

[61]நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

    யாருள்ளி நோக்கினீர் என்று.                                                                                                          (குறள் – 1320)

[62]தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்

   அகறலின் ஆங்கொன்று உடைத்து.                                                                                              (குறள் – 1325)