Statcounter

Saturday, August 29, 2020

சொல்லாற்றல்

 

சொல்லாற்றல்

 

தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஆற்றல் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடத்திலும் உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், மனிதர்கள் தகவல் பரிமாறிக்கொள்ளும் முறை விலங்குகள் தகவல் பரிமாறிக்கொள்ளும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. உணவுப் பொருள்களைச் சேகரிப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும், தங்களையும் தங்களின் கூட்டத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கும், இனச்சேர்க்கைக்கும் விலங்குகள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. மனிதர்கள் மட்டுமே, மொழியைப் பயன்படுத்தி அன்பு, காதல், கோபம், வியப்பு, வருத்தம், உவகை போன்ற உணர்வுகளையும், தங்கள் உள்ளத்தில் உள்ள எண்ணங்களையும், அறிவு சார்ந்த கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறார்கள். சில சமயங்களில், மொழியின் உதவி இல்லாமலும், தங்கள் கண்களாலும் உடலாலும் தங்கள் உணர்வுகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் ஆற்றலும் மனிதர்களிடம் உள்ளது. மனிதன் மற்றொரு மனிதனோடு தொடர்புகொண்டு தன் மனத்தில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரே சமயத்தில் பலரிடம் தன் கருத்துக்களைக் கூறக்கூடிய ஆற்றலையும் உடையனாக இருக்கிறான். இன்றைய வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற தொழிநுட்பக் கருவிகளின் உதவியால் ஒரே சமயத்தில் எண்ணற்ற மக்களோடு தன் கருத்துக்களைப் பகிர்த்துகொள்ள முடிகிறது. மேலும், ஒருவருடைய சொற்பொழிவு அல்லது பேச்சு, தொழில் நுட்பக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டுக் காலம், இடம் ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து எங்கெங்கும், என்றென்றும் கேட்கக்கூடியதாகவும் உள்ளது. மனிதனின் சொல்லாற்றல் என்பது மிக வலிமையான ஒரு ஆற்றல். அதன் சிறப்பைப் பற்றியும், அதனால் வரும் நன்மை தீமைகளைப் பற்றியும், அந்த ஆற்றலைப் பயன்படுத்தி எப்படிச் சொற்போழிவாற்ற வேண்டும் என்பதைப் பற்றியும் சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் விளக்காமாகக் கூறுகிறார்.

 

சொல்லாற்றலின் சிறப்பு

மனிதனுடைய சொல்லாற்றல் என்ற ஆற்றல் ஒரு தனிச்சிறப்பான ஆற்றல்; அது அவனுடைய மற்ற ஆற்றல்களில் அடங்காது (குறள் – 641) என்று வள்ளுவர் கூறுகிறார்.

 

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.                                                                                 (குறள்641)

 

ஒருவன் தன் சொற்களால் பிறரை மகிழ்விக்க முடியும்; துன்புறுத்த முடியும்; ஆத்திரம் அடையச் செய்ய முடியும்; உணர்ச்சிவசப்படுத்த முடியும்; தான் விரும்பும் செயல்களைச் செய்யுமாறு ஊக்குவிக்க முடியும்; கல்வி கற்பிக்க முடியும். பிறரோடு உரையாடுவதால் அவர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். தங்கள் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் வலிமையான ஆற்றல் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது என்பதில் எவருக்கும் கருத்து வெறுபாடு இருக்க முடியாது.

 

சொல்லாற்றலால் விளையும் நன்மையும் தீமையும்

”நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்” என்ற பழமொழிக்கேற்ப, தங்கள் சொல்லாற்றலைப் பயன்படுத்தி மனிதர்கள் நன்மையும் செய்ய முடியும்; தீமையும் செய்ய முடியும். ஒருவனுக்கு மேன்மேலும் உயரும் ஆக்கமும் அழிவும் அவனுடைய சொல்லால் வருவதால், தன்னுடைய சொற்களில் தவறு ஏற்படாதவாறு அவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (குறள் – 642) என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.

 

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.                     (குறள் - 642)

 

தங்கள் சொல்லாற்றலைப் பயன்படுத்தி மனிதர்கள் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். சிலர் எண்ணற்ற மக்களுக்கு வேதனைகளையும் அளித்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போர் நடந்தபொழுது, ஜெர்மனியைச் சார்ந்த அடால்ஃப் ஹிட்ளரும் (Adolf Hitler, 1189 – 1945) இத்தாலியைச் சார்ந்த முசோலினியும் (Benito Musolini, 1883 – 1945) தங்கள் நாவன்மையால் மக்களிடையே யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை எழுப்பி, யூதர்களைக் கொன்று குவித்தார்கள்.  அந்தப் போர் நடந்தபொழுது, இங்கிலாந்தைச் சார்ந்த வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill, 1874 – 1965) தன்னுடைய சொல்லாற்றலால் தன் நாட்டு வீரர்களை ஊக்குவித்துப் போரில் வெற்றிக்கு வழிவகுத்தார். அவருடைய புகழ் பெற்ற ‘Never give in” சொற்பொழிவு அவருடைய நாவன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் உள்ள பேள் ஹார்பர் (Pearl Harbor) துறைமுகத்தின்மீது ஜப்பானியர்கள் 1941 – ஆம் ஆண்டு, சரமாரியாகக் குண்டுகளைப் பொழிந்து அங்கிருந்த பல கப்பல்களையும் விமானங்களையும் அழித்ததோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்களையும் கொன்றார்கள். அப்பொழுது, அமெரிக்கக் குடியரசின் தலைவராக இருந்த ஃபிரேங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt, 1882 – 1945), அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஆற்றிய “Date of Infamy” என்ற சொற்பொழிவு, அமெரிக்கர்களை ஒருங்கிணைத்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்கச் செய்தது. அவருடைய சொற்பொழிவு இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரின் உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்குடைய (Martin Luther King, 1929 – 1968) சொல்லாற்றல்தான் ஆபிரிக்க ஆமெரிக்க மக்களைத் தட்டியெழுப்பி அவர்களின் சமயுரிமைகளுக்காக அவர்களைப் போராடத் தூண்டியது. அவருடைய ”I have a dream” என்ற சொற்பொழிவு மக்களின் மனத்தில் இன்றும் ஒலித்துகொண்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டில், தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று தன் சொற்பொழிவுகளின் மூலம், மக்களிடையே பகுத்தறிவைப் பரப்பி, தமிழ்ச் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை உருவாக்கிய பெருமைக்குரியவர் தந்தை பெரியார் (1879 – 1973).

 

.

அவையில் பேசுதல்

தனியாக ஒருவரோடு உரையாடுவது வேறு. பலர் முன்னிலையில், ஒரு அவையில் சொற்பொழிவாற்றுவது என்பது வேறு. அன்றாட வாழ்க்கையில் அனைவரும் எவரோடாவது பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். சிறு குழந்தையாக இருந்தபொழுதே பேசத் தொடங்கி வாழ்நாள் முழுதும் பேசிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு உரையாடுவதற்குத் தனிப்பயிற்சியோ, சிறந்த கல்வியோ தேவையில்லை.  ஆனால் பலர் முன்னிலையில் சொற்பொழிவாற்றுவது என்பது ஒரு கலை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், சொற்பொழிவு ஆற்றுவது எப்படி என்று கிரேக்க நாட்டைச் சார்ந்த பிளேடோ (Plato, 428/427 B. C. – 348/347 B. C.), அரிஸ்டாட்டில் (Aristotle, 384 B. C. – 322 B. C.) டெமோஸ்தனீஸ்(Demosthenes,  384 B. C. – 322 B. C.) போன்றவர்கள் ஆராய்ச்சி செய்து, சொற்பொழிவாற்றுவதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்காகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தினார்கள் என்று வரலாறு கூறுகிறது.

 

அவையில் பேசுவதைப் பற்றி அரிஸ்டாட்டில்

அவையில் பேசுவதற்கு ஒரு தகவல் தொடர்பு மாதிரியை அரிஸ்டாட்டில் (அரிஸ்டாட்டிலின் தகவல் தொடர்பு மாதிரி – Aristotle’s Model for Communications) முன்மொழிந்தார். இன்றும் மேலை நாடுகளில், கருத்தரங்குகளிலும், சொற்பொழிவுகளிலும் அரிஸ்டாட்டிலின் மாதிரி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அரிஸ்டாட்டிலின் மாதிரி ஐந்து கூறுகள் அடங்கியது. அவை: 1)பேச்சாளர், 2)பேச்சு, 3)சூழ்நிலை, 4)கேட்பவர்கள், 5)விளைவு (Effect). அரிஸ்டாட்டில் மாதிரிப்படி, தகவல் தொடர்பில் பேச்சாளர்தான் முக்கியமான பங்கு வகிக்கிறார். மேலும், அனைத்துத் தகவல் தொடர்புகளுக்கும் பேச்சாளர்தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சாளர் தனது சொற்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பேசுவதற்குமுன், அவையில் இருப்பவர்களின் தகுதியையும் எதிர்பார்ப்புகளையும் பேச்சாளர் ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். பேச்சு, குழப்பம் இல்லாமல் தெளிவாகவும், புரிந்துகொள்வதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். பேசும் முறை அவையில் இருப்பவர்களைக் கவர்வதாக இருக்க வேண்டும். பேச்சாளர் நம்பத் தகுந்தவராகவும், எதைப் பற்றிப் பேசுகிறாரோ அதைப் பற்றி நன்கு அறிந்தவராகவும் இருக்க வேண்டும். பேச்சைக் கேட்பவர்கள் ஒவ்வொருவரும், பேச்சாளர் தன்னோடு பேசுவதாக உணரவேண்டும். கேட்பவர்களின் உள்ளத்தைத் தொடும் வகையிலும் உணர்ச்சியைத் தூண்டும் வகையிலும் பேச்சு அமைய வேண்டும்.  பேச்சில் நகைச்சுவையைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த உத்தியாகும். பேச்சாளர் கூறும் கருத்துக்கள் உண்மையானவையாகவும், முன்னுக்குப்பின் முரணானவையாக இல்லாமலும் இருக்க வேண்டும். 

 

கிரேக்கத் தத்துவஞானிகளைப்போல், வள்ளுவரும் அவையில் பேசப்படும் பேச்சு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, தன் கருத்துக்களைத் திருக்குறளில் கூறியுள்ளார். அரிஸ்டாட்டிலின் தகவல் தொடர்பு மாதிரிக்கும் அவையில் பேசுவதைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களுக்கும் இடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது.

 

 

அவையில் பேசுவதைப் பற்றி டேல் கார்னிகி (Dale Carnegie, 1888 – 1955)

கடந்த நூற்றாண்டில், அமெரிக்காவில் வாழ்ந்த டேல் கார்னிகி என்பவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தது மட்டுமல்லாமல், சுயமுனேற்றம், மேடைப்பேச்சு, ஆகிய துறைகளில் நூல்கள் எழுதியும் மற்றவர்களுக்கு பயிற்சி அளித்தும் சிறப்பாகச் சேவை செய்தவர். மேடையில் சிறப்பாகப் பேசுவது எப்படி என்பதைப் பற்றி, “The Quick and Easy Way to Effective Speaking” என்ற தலைப்பில் அவர் ஒரு அருமையான நூல் எழுதியுள்ளார். பலர் முன்னிலையில் ஒருவன் சிறப்பாக மேடையில் பேச வேண்டுமானால், எதைப் பற்றி பேச விரும்புகிறானோ அதைப் பற்றி அவன் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று அந்த நூலில் அவர் கூறுகிறார். பேச்சாளனுக்குப் பயிற்சி தேவை என்கிறார். மேலும், மேடையில் பேசுவதற்குமுன், ஒருவன் தன்னுடைய பேச்சில் என்ன சொல்லப் போகிறான், அதை எப்படிச் சொல்லப் போகிறான் என்பவற்றை நன்கு சிந்திதுப் பார்க்க வேண்டும். அதாவது, அவன் தன் பேச்சை தயார் செய்துகொள்ள வேண்டும்.  அவர் கருத்துப்படி, பேச்சாளான் என்பவன் ஒரு விற்பனையாளனைப் (விற்பனையாளன் - Salesman) போன்றவன். ஒரு பொருளை நம்மிடம் விற்பனை செய்பவன், எந்தப் பொருளை விற்பனை செய்கிறானோ அந்தப் பொருளைப் பற்றி ஐயந்திரிபறக் கற்றிருக்க வேண்டும்.  அந்தப் பொருளைப் பற்றி யார் என்ன கேள்வி கேட்டாலும் அந்தக் கேள்விக்குச் சரியான விடை அளிக்கக் கூடிய ஆற்றல் உடையவனாகவும் இருக்க வேண்டும். அதுபோன்ற ஆற்றலைப் பெறுவதற்கு, அந்தப் பொருளைப் பற்றிய அறிவோடு பயிற்சியும் தேவை. ஒரு அவையில் பலர் முன்னிலையில் பேசுபவனுக்கு, கல்வியும், அறிவும், பயிற்சியும், பேச்சைத் தயாரிப்பதும் தேவை என்று டேல் கார்னிகி கூறுகிறார். மேடைப்பேச்சைப் பற்றிய கருத்துக்களில், வள்ளுவருக்கும் டேல் கார்னிகிக்கும் இடையே ஒற்றுமை காணப்படுகிறது.

 

அவையில் பேசுவதைப் பற்றி வள்ளுவர்

அவையில் பேசுவதற்கு அறிவும் கல்வியும் தேவை:  ஒருவன் எதைப் பற்றிப் பலர் முன்னிலையில் பேச விரும்புகிறானோ அதைப் பற்றி அவன் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் பல குறட்பாக்களில் வலியுறுத்துகிறார். அவையில் பேசுவதற்குத் தன் அறிவு நிரம்புவதற்குரிய நூல்களைக் கல்லாது, ஒருவன் ஒரு அவையில் சொற்பொழிவாற்ற முயற்சி செய்வது, அரங்கத்தை அமைத்துக்கொள்ளாது காய்களை மட்டும் உருட்டி விளையாட நினைப்பதைப் போன்றது (குறள் – 401). கல்லாத ஒருவன், ஒரு அவையில் சொற்பொழிவாற்ற விரும்புதல், முலை இரண்டும் இல்லாத பெண் ஒருத்தி காதல் இன்பத்தை பெற விரும்புவதைப் போன்றதாகும் (குறள் – 402). கற்றோர் அவையில் எதையும் சொல்லதிருப்பார்களேயானால், கல்லாதவர்களும் நல்லவர்களாகவே கருதப்படுவார்கள் (குறள் – 403). கல்லாதவனுடைய இயற்கையான அறிவு, சில சமயங்களில் மிகச் சிறந்ததாகத் தோன்றினாலும், அவனைச் சிறந்த அறிவுடையவனாகக் கருதமாட்டார்கள் (குறள் – 404). கல்லாத ஒருவன் தன்னைக் கற்றவன் போலத் தனக்குத் தானே மதிப்பிட்டுகொண்டு கற்றவர்களோடு உரையாடத் தொடங்கினால், அந்த மதிப்பானது கெட்டுப் போய்விடும் (குறள் – 405)

 

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.                                                                          (குறள்401)

 

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.                                                                  (குறள்402)

                 

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.                                                                             (குறள்403)

 

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.                                                           

   (குறள்404)

 

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.                                                                            (குறள்405)

 

இந்தக் குறள்களிலிருந்து, ஒருவன் கற்றவர் அவையில் பேச விரும்பினால், அவன் கல்வியும் அறிவும் உடையவனாக இருப்பது இன்றியமையாதது என்பது வள்ளுவரின் கருத்து என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், வள்ளுவரின் கருத்துக்கும் டேல் கார்னிகி மற்றும் அரிஸ்டாட்டிலின் கருத்துக்கும் இடையே மிகுந்த ஒற்றுமை இருப்பதும் தெரிகிறது.

 

அவையறிதல்: சொற்களைத் தொகுத்துப் பேசுவதை அறிந்த தூய அறிவுடையவர்கள் அவையை அறிந்து, சொல்ல வேண்டியதை ஆராய்ந்து சொல்ல வேண்டும் (குறள் – 711). சொல்லின் வழக்கை அறிந்த நல்லறிவாளர், அவையின் இடம், காலம், நிலைமை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும் (குறள் – 712). அறிவுடையவர்கள் உள்ள அவையில் அறிவில் சிறந்தவர்களைப் போலவும், பாமரமக்கள் உள்ள அவையில் அவர்களில் ஒருவனாகவும், அவர்களுக்குப் புரியுமாறும் பேச வேண்டும் (குறள் – 714). முதிர்ந்த அறிவுடையவர்கள் கூடியுள்ள அவையில், முந்திக்கொண்டு பேசாமல் இருப்பது, நற்பண்புகள் என்று சொல்லப்படும் பண்புகள் எல்லாவற்றிலும் சிறந்த நற்பண்பாகும் (குறள் – 715). பரவலாகப் பலநூல்களையும் கற்று உணர்ந்தவர்கள் உள்ள அவையில், குற்றம் உண்டாகும்படிப் பேசுதல் நல்ல நெறியில் நின்றவன் அந்நெறியிலிருந்து தவறியதற்கு ஒப்பாகும் (குறள் – 716). கருத்துக்களை உணர்ந்துகொள்ளும் அறிவுடையர்கள் முன்னிலையில் பேசுதல் பயிர் விளையும் பாத்தியில் நீர் சொரிந்தைப் போன்றது (குறள் – 718). தம் தகுதியோடு பொருந்தாதவர்முன் சிறந்த கருத்துக்களைப் பேசுதல் சாக்கடையில் அமிழ்தத்தை ஊற்றியது போலாகும் (குறள் – 720).

 

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.                                                                         (குறள் – 711)

 

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.                                                                            (குறள் – 712)

 

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.                                                                      (குறள் – 714)

 

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு.                                                                   (குறள் - 715)

 

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.                                                                     (குறள் – 716)

 

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந் தற்று.                                                  

           (குறள் – 718)

 

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல்.                                                

        (குறள் – 720)

 

 

அவையஞ்சாமையும் தேவை: டேல் கார்னிகியின் கூற்றுப்படி, கல்லூரி மாணவர்களில் எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் பேர் அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள். அவையில் பேசுவதற்கு அஞ்சும் பெரியவர்களின் சதவீதம் அவையில் பேசுவதற்கு அஞ்சும் மாணவர்களைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, வள்ளுவர் இதே கருத்தைக் கூறியுள்ளார். அஞ்சாது அவையில் பேசும் ஆற்றல் உடையவர்களைப் பாராட்டியும், அவையில் பேச அஞ்சுபவர்களை வீரமில்லாதவர்களோடு ஒப்பிட்டும் பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறுகிறார்.

 

அவைக்கு அஞ்சாதவர்களின் இயல்பு: பகைவர் இருக்கும் போர்க்களத்தில் போரிட்டுச் சாகின்றவர்கள் பலர். ஆனால், ஒரு அவையில் நின்று அஞ்சாது பேசக்கூடியவர்கள் வெகு சிலரே (குறள் – 723). சொற்களைத் தொகுத்துப் பேசும் தூய அறிவுடையவர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவிருக்கும் அவையின் தன்மையை அறிந்து, கல்வியில் சிறந்தவர்கள் கூடிய அவையில் சொற்சோர்வு உண்டாகுமாறு பேசமாட்டார்கள் (குறள் – 721).  கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர்களுடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர்கள் கற்றவர்கள் எல்லோரையும்விடச் சிறப்பாகக் கற்றவர்கள் என்று கருதப்படுவார்கள் (குறள் – 722).

 

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.                                                                             (குறள் – 723)

 

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.                                               

            (குறள் – 721)

 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.                                                          

      (குறள் – 722)

 

 

அவைக்கு அஞ்சுபவர்களின் இயல்பு: தாம் கற்றவற்றை பிறர் புரிந்துகொள்ளுமாறு விரித்துரைக்க முடியாதவன், கொத்தாக மலர்ந்திருந்த்தும் மணம் கமழாத மலரைப் போன்றவன் (குறள் – 650). உள்ளத்தில் வீரமில்லாதவர்க்குக் கையில் வாளிருந்து என்ன பயன்? அதுபோல், நுண்ணறிவு படைத்தோர் கூடிய அவையில் பேச அஞ்சுபவர்க்கு, அவர் கற்ற நூலால் என்ன பயன் (குறள் – 726)? கற்க வேண்டியதைக் கற்று அறிந்திருந்தும், அவற்றை நல்லவர் கூடிய அவையில் பேச அஞ்சுபவர்கள் கல்லாதவரைவிடக் கீழானவர்களாகக் கருதப்படுவார்கள் (குறள் – 729).  கற்றறிந்தோர் அவையில் உரையாற்ற அஞ்சுபவன் கற்ற நூலறிவு, பகைவரோடு போரிடும் களத்தில் கோழையின் கையில் உள்ள ஒளிபொருந்திய வாளைப் போன்றது (குறள் – 727).

 

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.                                             (குறள் – 650)

 

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.                                                                           (குறள் – 726)

 

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.                                                                                 (குறள் – 729)

 

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.                                                                                  (குறள் – 727)

 

அவையில் பேசுவதற்கு அஞ்சாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?: அவையோரின் தகுதியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அவையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேச வேண்டும். எதைப் பற்றி பேச வேண்டுமோ அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து, தேவையான செய்திகளைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். அடுத்து, எவ்வளவு நேரம் பேச வண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சேகரித்த செய்திகளை, சரியாக வரிசைப்படுத்தி, அவையோருக்குப் புரியும்படி பேச்சைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். தயாரித்த பேச்சைப் பலமுறைப் பேசிப் பழக வேண்டும். கல்வி அறிவு மட்டுமல்லாமல், பயிற்சியும் தேவை என்று டேல் கார்னிகி வலியுறுத்துகிறார். அவையைப் பற்றிய புரிதல், பேசும் பொருளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தல், பேச்சைத் தயாரித்தல், பேசிப் பயிற்சி பெறுதல் இவை அனைத்தையும் முறையாகச் செய்தால், பேச்சாளனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை இருந்தால், பேச்சாளன் அவையைக் கண்டு அஞ்ச மாட்டான். அவையில் பேசுவதற்குப் பயிற்சி தேவை என்று குறிப்பாகக் கூறாவிட்டாலும், எல்லாச் செயல்களையும் செவ்வனே செய்வதற்கு முயற்சி தேவை என்பதைப் பல குறட்பாக்களில் வள்ளுவர் வலியுறுத்துகிறார். உதாரணமாக, எந்த ஒரு செயலும் செய்வதற்கு அரிய செயல் என்று முடிவு செய்து, மனம் தளர்ந்துவிடாமல், முயற்சி செய்தால், அந்த முயற்சி பெருமையைத் தரும் என்பது வள்ளுவரின் கருத்து என்பது, “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (குறள் – 611)” என்ற குறளிலிருந்து தெரிகிறது. முயற்சியினால் வருவது பயிற்சி. ஆகவே, ஒருவன் முதலில் அவையில் பேசுவதில் வல்லமை படைத்தவனாக இல்லாவிட்டலும், தொடர்ந்து முயற்சி செய்தால், வெற்றி அடைவான் என்பதுதான் வள்ளுவரின் அறிவுரை. ஆகவே, மீண்டும் டேல்கார்னிகியின் கருத்துக்கும் வள்ளுவரின் கருத்துக்கும் ஒற்றுமை இருப்பது தெரிகிறது.

 

 

சொற்பொழிவைப் பற்றி வள்ளுவர்

சொல்லாட்சி: கேட்பவர்களைக் கவரும் தன்மை உடையதாகவும், கேளாதவரும் கேட்க விரும்பும்படிப் பேசுவதே சிறந்த சொல்வன்மையாகும் (குறள் – 643). கேட்பவரது மனநிலையை அறிந்து, ஒருவர் சொல்லக்கருதும் சொல்லை, முறையாகச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதைவிடச் சிறந்த அறமோ, பொருளோ வேறொன்றும் இல்லை (குறள் – 644). தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லக்கூடிய சொல் வேறொன்றும் இல்லை என்பதைத் தெளிவாக அறிந்த பிறகே, அச்சொல்லைச் சொல்ல வேண்டும் (குறள் – 645). தான் சொல்ல விரும்பியதை பிறர் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்வதில் வல்லவனாய், அவைக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனை தருக்கத்தாலும் கருத்து மாறுபட்டாலும் வெல்லுதல் எவருக்கும் அரிய செயலாகும் (குறள் – 647).

 

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.                                                                            (குறள் – 643)

 

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்.                                                                    (குறள் – 644)

 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.                                                                (குறள் – 645)

 

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.                                                                    (குறள் – 647)

 

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்: தாம் கருதியவற்றைக் குற்றமிலாத சில சொற்களால் தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்லத் தெரியாதவர்கள்தான் வீணாகப் பல சொற்களால் விரித்துக் கூற விரும்புவர் (குறள் – 649).

 

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.                                                                            (குறள் – 649)

 

வள்ளுவர் கூறுவதிற்கிணங்க, உலக வரலாற்றில், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பெருந்தலைவர்கள் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும், தங்கள் சொற்பொழிவுகளின் மூலம் தங்கள் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்தபொழுது, 1863 – ஆம் ஆண்டு, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரஹாம் லிங்கன் (Abraham Lincoln, 1809 – 1865) ஆற்றிய உலகப் புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் (Gettysbugh, Pennsylvania) சொற்பொழிவு மூன்று மணித்துளிகளில் முடிவடைந்தது. 1941 – ஆம் ஆண்டு, ஜப்பானியர்கள் அமெரிக்காவைத் தாக்கியபொழுது, அமெரிக்கக் குடியரசின் தலைவர், ஃபிரேங்க்ளின் டெலனோ ரூரஸ்வெல்ட், அமெரிக்கா ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஆற்றிய “Date of Infamy” என்ற சொற்பொழிவு ஏழு மணித்துளிகளில் முடிவடைந்தது. அதே ஆண்டு, இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்து ஜெர்மனியை எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதற்காக ஆற்றிய உரை மிகச் சுருக்கமாக நான்கு மணித்துளிகளில் முடிவடைந்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமவுரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்குடைய “I have a dream” என்ற சொற்பொழிவு பதினெட்டு மணித்துளிகளில் முடிவடைந்தது.

 

சொல்லாற்றல் மிக்க அறிஞர் அண்ணா

தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிஞர் அண்ணாவைப் பற்றித் தெரியாத தமிழர் எவரும் இருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் வரலாற்றில், தனக்கென்று தனியிடம் படைத்துக்கொண்டவர் அறிஞர் அண்ணா. வள்ளுவர் கூறும் சொல்வன்மைக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அண்ணாவின் சொற்பொழிவில், கருத்துச் செறிவு இருக்கும்; அழகிய தமிழ் இருக்கும்; அடுக்குமொழி இருக்கும்; நகைச் சுவை இருக்கும். ”சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து (குறள் – 647)” என்பதற்கிணங்க, தகுந்த சொற்களைப் பயன்படுத்திப் பேசுவார். அவர் அவையில் பேசுகின்றபொழுது, அவரால் கேட்பவர்களைச் சிந்திக்க வைக்க முடியும்; சிரிக்கவைக்க முடியும்; செயல்செய்யத் தூண்ட முடியும். மாற்றுக் கருத்துடையவர்கள்கூட அவர் பேச்சை விரும்பிக் கேட்டார்கள். அவர் பேச்சைக் கேட்டவர்கள் அவற்றை மறப்பதில்லை. ”நாம் அவருடைய பேச்சைக் கேட்கும் வாய்ப்பை இழந்து விட்டோமே!” என்று வருந்துபவர்கள் இன்றும் உள்ளார்கள். அவருடைய சில சொற்பொழிவுகளை இன்றும் எண்ணற்றவர்கள் வலையொளியில் (வலையொளி – YouTube) கேட்டு மகிழ்கிறார்கள் .”கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் (குறள் – 643)” என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாக அவர் பேச்சு இருக்கும்.  அவர் அவையறிந்து பேசும் ஆற்றல் உடையவர். பாமர மக்களிடமும் பேசுவார்; பாராளுமன்றத்திலும் பேசுவார்; கல்லாதவர்களிடமும் பேசுவார்; கல்லூரிகளிலும் பேசுவார். அரசியல் பேசுவார்; பொருளாதாரம் பேசுவார்; சட்டம் பேசுவார்; இலக்கியம் பேசுவார்; எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசுவார்; எந்தத் தலைப்பும் இல்லாமலும் பேசுவார். அவர் இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையில் ஆற்றிய சொற்பொழிவு, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் (Yale University, New Haven Connecticut) ஆற்றிய சொற்பொழிவு, மற்றும் தமிழ்நாட்டின் முலைமுடுக்குகளில் எல்லாம் அவர் ஆற்றிய ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் கேட்டவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

 

அண்ணா அவர்கள் மணிக்கணக்கில் மக்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடிய ஆற்றல் மட்டுமல்லாமல் சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் ஆற்றலும் உடையவராக இருந்தார்.  ஒரு சமயம், ஒரு ஊரில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டதிற்கு அவர் செல்ல வேண்டியதாக இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஒன்பது மணிக்கு வரவேண்டியவர் எறத்தாழ பத்தரை மணிக்கு வந்தார். அண்ணா வந்தவுடன், கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள், “ஐயா, பத்தரை மணிவரைதான் கூட்டம் நடத்த நமக்கு அனுமதி அளித்திருகிறார்கள். இப்பொழுது, பத்தரை மணிக்கு இன்னும் ஒரு மணித்துளிதான் உள்ளது. என்ன செய்வது?” என்று அவரைக் கேட்டார்கள். தற்கு அண்ணா,பரவாயில்லை. நான் ஒரு மணித்துளியில் என் பேச்சை முடித்து விடுகிறேன்.”, என்று சொல்லிவிட்டு, மேடைக்குப் போய், “மாதமோ சித்திரை! நேரமோ பத்தரை ! வருவதோ நித்திரை . குத்துங்கள் முத்திரை உதய சூரியனில் !  வணக்கம்." என்று கூறித் தன் பேச்சை முடித்தார். அவர் சுருங்கச் சொல்லி விளங்கவைத்த செய்தி, அந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

அண்ணாவின் சொற்பொழிவுகளைக் கேட்கும் பேறு பெற்வர்களுள் நானும் ஒருவன். நான் சென்னையில் உள்ள இலயோலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்புப் படிக்கும்பொழுது, கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துகொண்டிருந்தேன். அங்கு, விடுதியில் இருக்கும் மாணவர்கள், இரவு எட்டு மணி முதல் மறுநாள்நாள் காலை ஆறுமணி வரை தங்கள் அறையில் இருக்க வேண்டும்; எவரிடமும் பேசக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால், மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப் படுவார்கள். இது போன்ற கடினமான கட்டுப்பாடுகள் இருந்தாலும், நானும் என்னுடைய நண்பர்களில் ஒரு சிலரும், சென்னையில் மெரீனா கடற்கரையில் அண்ணாவின் சொற்பொழிவு நடக்கும் நாட்களில், விடுதியிலிருந்து எவருக்கும் தெரியாமல் வெளியேறி, அண்ணாவின் பேச்சைக் கேட்டுவிட்டு, விடுதிக்கு இரவில் திரும்பி வருவது வழக்கம். மறுநாள் காலை, என்னோடு அண்ணாவின் பேச்சைக் கேட்க வராத நண்பர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு, “அண்ணா என்ன பேசினார்?”, “எப்படிப் பேசினார்?” என்று கேட்பார்கள். ”அண்ணா பேசியதைப்போல் பேசிக்காட்டுங்கள்” என்றும் என்னைக் கேட்பார்கள். அண்ணாவைப்போல் எவராலும் பேச முடியாது. இருந்தாலும், நான் என்னால் இயன்றவரை அண்ணா பேசுவதுபோல் பேச முயற்சி செய்வது வழக்கம். நான் பலமுறை அண்ணாவின் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். இரண்டு முறை அண்ணாவைச் சந்தித்திருக்கிறேன். அந்த நிகழ்வுகள் என் நெஞ்சிலிருந்து நீங்காமல் நிரந்தரமான இடம் பெற்றுள்ளன. என் நெஞ்சில் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் மனத்திலும் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் அண்ணா எப்பொழுதும் நிலைபெற்றிருப்பார் என்பது உறுதி.

 

முடிவுரை

ஒருவனுடைய சொல்லாற்றல் அவனுடைய மற்ற ஆற்றல்களைவிட வலிமையான ஆற்றல். சொல்லாற்றலைப் பற்றி ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களைக் கூறிய கிரேக்கத் தத்துவஞானிகளைப்போல், வள்ளுவரும் சொல்லாற்றலைப் பற்றி தன்னுடைய அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார். சொல்லாற்றலைப் பற்றிய வள்ளுவரின் கருத்துக்களை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை, ஆகிய அதிகாரங்களில் காணலாம். ஆக்கமும் கேடும் சொல்லால் வருதலால் சொல்லில் தவறு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.  அவையில் பேசுவதற்கு அஞ்சுபவர்கள் பலர். ஆனால், கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் அஞ்சாமல், தங்கள் கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதும், அவ்வாறு பகிர்ந்துகொள்ளத் தெரியாதவர்கள் மணமில்லாத மலர்களைப் போன்றவர்கள் என்பதும் வள்ளுவரின் கருத்து. ஒரு அவையில் பேசும்பொழுது, அவையில் இருப்போரின் தன்மையை அறிந்து அதற்கேப்பப் பேச வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஒருவருடைய பேச்சு, கேட்பவர்களைக் கவர்வதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்பும் வகையிலும் இருக்கு வேண்டும் என்று வள்ளுவர் அறிவுரை கூறுகிரார். ஒரு அவையில் பேசும்பொழுது, சுருங்கச் சொல்லி விளங்கவைக்க வேண்டும் என்ற கருத்தையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். வள்ளுவர் கூறும் சொல்லாற்றலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா.

 

துணைநூல்கள்

Carnegie, Dale. The quick & easy way to effective speaking. Rupa Publications India Pvt. Ltd. 20167/16 Ansari Road, Daryaganj, New Delhi 110 002Diaz, S.M. Thirukkural. Volumes 1 &2.  Ramanandha Adigalar, Foundation, Chennai: 2000.

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural). Emerald Publishing, Chennai

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், மதுரை: 1999

தேவநேயப் பாவாணர், ஞா..  திருக்குறள்தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,சென்னை,

Tuesday, August 18, 2020

வள்ளுவர் பார்வையில் நட்பு

 

வள்ளுவர் பார்வையில் நட்பு

கிரேக்கத்தைச் சார்ந்த அரிஸ்டாட்டில் (Aristotle, 384 B.C. - 322 B.C)  என்ற தத்துவஞானி, “மனிதன் ஒரு சமூக விலங்கு. எவனொருவன் சமூகத்தோடு தொடர்பில்லாமல் வாழ்கிறானோ, அவன் ஒரு விலங்கு அல்லது கடவுள்.”, என்று கூறுகிறார். எல்லா விலங்குகளும் தனித்து வாழ்பவை அல்ல. பல விலங்குகள் தங்கள் சமூகத்தோடு கூடி வாழும் இயல்புடையவை என்று கடந்த நூற்றாண்டில் விலங்குகளின் வாழ்வியலை ஆராய்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக, ஒட்டகச்சிவிங்கி, யானை, மான், சிம்பன்சி (Chimpanzee), டால்ஃபின் (Dolphin), வௌவால் ஆகிய விலங்குகளும் வேறு சில விலங்குகளும் தங்கள் இனத்தோடு கூடி வாழும் இயல்புடையவை என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தச் செய்தியை அரிஸ்டாட்டில் அறிந்திருந்தால், “மனிதன் ஒரு சமூக விலங்கு. சமுதாயத்தோடு தொடர்பில்லாமல் வாழ்பவர்கள் கூட்டமாகக் கூடி வாழும் விலங்குகளைப் பார்த்து, சமூகத்தோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறியிருப்பார் என்று தோன்றுகிறது.

மனிதன் சமூகத்தோடு கூடி வாழும்பொழுது சிலரோடு நட்பு கொள்கிறான். மனிதர்களுக்கிடையே தோன்றும் நட்பைப் பற்றி ஆராய்ச்சி செய்த மேலைநாட்டு அறிஞர்களுள் கிரேக்கத்தைச் சார்ந்த பிளேடொ (Plato, 428/427 BC – 348/347 BC)) மற்றும்  அரிஸ்டாடில், ரோமாபுரியைச் சார்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ (Marcus Tullius Cicero, 106 BC – 43 BC), ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்த மிச்சல் ஐக்யூம் டி மாண்டெய்ன் (Michel Eyquem de Montaigne, 1533 – 1592), இங்கிலாந்தைச் சார்ந்த சர் ஃபிரேன்சிஸ் பேகன்  (Sir Francis Bacon, 1561 – 1626) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களைப்போல் வள்ளுவரும் நட்பைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார். நட்பைப் பற்றி ஏறத்தாழ 70 குறட்பாக்களில் வள்ளுவர் தன் கருத்தைக் கூறுகிறார். நட்பைப் பற்றி இந்த மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களையும் வள்ளுவரின் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த பேராசிரியர் ப. மருதநாயகம், “நட்பைப் பற்றிப் பேசும் மேலை அறிஞர்களுள் ஓரளவிற்கு வள்ளுவருக்கு நெருக்கமானவர் அரிஸ்டாட்டிலே.”, என்று கூறுகிறார்.

நட்பைப் பற்றி அரிஸ்டாட்டில்

நட்பை மூன்று வகையாக அரிஸ்டாட்டில் பிரிக்கிறார். அந்த மூன்று வகையான நட்புகள்: மகிழ்ச்சிக்காக நட்பு, பயன் கருதும் நட்பு, அறம் சார்ந்த நட்பு. மகிழ்ச்சிக்காக நட்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பதையே நோக்கமாகக் கொண்ட நட்பு. பயன் கருதும் நட்பு என்பது நட்பினால் என்ன பயனடையலாம் என்பதையே நோக்கமாகக் கொண்ட நட்பு. அறம் சார்ந்த நட்பு என்பது நண்பர்களின் அறிவு மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடைப்படையில் தொடங்கி வளரும் நட்பு. இந்த மூன்று வகையான நட்புகளில், மகிழ்ச்சி மற்றும் பயன் கருதும் நட்பு வகைகள் நிரந்தரமானவையாக இருக்க வாய்ப்பில்லை. மகிழ்ச்சியும் பயனும் குறைந்தால் அந்த நட்புகள் முடிவடைந்துவிடும். ஆனால், அறம் சார்ந்த நட்பு நல்லவர்களுக்கிடையே நல்லொழுக்கம் மற்றும் அறிவு சார்ந்ததாக இருப்பதால் அது முழுமையான, நிரந்தரமான நட்பு என்கிறார் அரிஸ்டாட்டில். இந்த மூன்று வகையான நட்புகளில் அறம் சார்ந்த நட்பே சிறந்த நட்பு என்பது அரிஸ்டாட்டிலின் கருத்து. வள்ளுவரும் அறம் சார்ந்த நட்பையே மிகச் சிறந்த நட்பாகவும், மகிழ்ச்சிக்கான நட்பையும், பயன் கருதும் நட்பையும் தீய நட்பாகவும் கருதுகிறார். நட்பைப் பற்றி வள்ளுவரின் கருத்துக்களைப் பார்ப்போம்.

 

நல்ல நட்பின் இலக்கணமும் சிறப்பும்

நட்பைப் பற்றி அரிஸ்டாட்டிலுடைய கருத்துக்களுக்கும் வள்ளுவருடைய கருத்துக்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், வள்ளுவருடைய கருத்துக்கள் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களைவிட முழுமையானதாகவும் விரிவானதாகவும் உள்ளன. பிறரிடம் அன்பு செலுத்துவதுதான் மனித வாழ்க்கையின் நோக்கமும் பயனும் (குறள் – 73) என்கிறார் வள்ளுவர். மற்றும், அன்பின்வழி நிற்பவன்தான் உயிருள்ள மனிதன்; அன்பில்லாத மனிதன் வெறும் எலும்பும் தோலும் போர்த்த உடம்பு (குறள் – 80) என்றும் வள்ளுவர் கூறுகிறார். நாம் அன்புடையவராக இருந்தால், மற்றவர்களுக்கு நம்மோடு பழக வேண்டும் என்ற ஆர்வத்தை நம்முடைய அன்பு உண்டாக்கும். அந்த ஆர்வம் நட்பு என்னும் சிறப்பை, நாம் தேடிப்; போகாமல் தானே நம்மை வந்தடையச் செய்யும். (குறள் – 74). அத்தகைய அன்புதான் நட்புக்கு அடித்தளமாக அமைகிறது என்பது வள்ளுவரின் கருத்து.

 

அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு

என்போடு இயந்த தொடர்பு.                                                         (குறள் – 73)

 

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.                                                       (குறள் – 80)

 

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.                                                       (குறள் – 74)

 

நல்ல நட்பு என்பது அன்பின் அடிப்படையில் நல்லொழுக்கம் உடையவர்களின் நட்பு. ஒரு நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளுவர் சில அழகான உவமைகளைக் கையாளுகிறார். நல்ல நட்பு என்பது நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மையது.  படிக்கும்பொழுதெல்லாம் ஒரு நல்ல நூல் இனிமையும் நன்மையும் தருவதுபோல், பழகப்பழக, நல்ல நட்பு நண்பர்களுக்கு இனிமையும் நன்மையும் பயக்கும் (குறள் – 783). நட்பு நல்லதாக இல்லாவிட்டால் அது நாளுக்குநாள் குறைந்துகொண்டே போய்க் கடைசியில் இல்லாமலே போய்விடும். எப்படி வளர்பிறையில் திங்கள் வளர்ந்துகொண்டிருக்கிறதோ அதுபோல் நல்லவர்களின் நட்பு வளர்ந்துகொண்டிருக்கும். எப்படித் தேய்பிறையில் நாளுக்குநாள் திங்கள் குறைந்து தோற்றமளிக்கிறதோ அதுபோல் அறிவில்லாதவர்களின் நட்பு குறைந்துக்கோண்டே போய்ச் சிலகாலத்திற்குப் பிறகு அவர்களின் நட்பு முறிந்து போகும் (குறள் – 782).  

 

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.                                                           (குறள் – 783)

 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.                                                  (குறள் – 782)

 

இது போன்ற கருத்து நாலடியார் பாடல் ஒன்றிலும் காணப்படுகிறது. அப்பாடலில், “கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவதுபோல், கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை மிகும்; அதற்கு எதிராக அடியிலிருந்து தின்றால் வரவர இனிமை குறைவதுபோல் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக்கப்படும்.” என்ற கருத்து கூறப்பட்டிருக்கிறது.  

 

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்

குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு

எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்

மதுரம் இலாளர் தொடர்பு.                                                 (நாலடியார் – 211)

 

 

நல்ல நட்பு உடைய நண்பர்களில் ஒருவர் ஒரு துன்பம் அடைந்தால், அவருடைய நண்பர் அந்தத் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகக் கருதித் தன்னால் இயன்ற உதவியை எவ்விதத் தயக்கமும் இன்றி உடனே செய்வார். இந்தக் கருத்தை ஒரு சுவையான உவமையின் உதவியால் வள்ளுவர் விளக்குகிறார். ஒருவன் அணிந்திருக்கும் ஆடை அவிழ்ந்து நெகிழ்ந்து விழும்பொழுது, அதைச் சீர்செய்வதற்கு எப்படி அவனுடைய கை விரைந்து சென்று உதவுகிறதோ அதுபோல் தன் நண்பனுக்குக் கேடு வந்தால் உடனே சென்று உதவி அளிப்பதுதான் நல்ல நட்புக்கு அடையாளம் (குறள் – 788) என்கிறார் வள்ளுவர்.  மேலும், அழிவைத் தருகின்ற தீயவழிகளிலிருந்து தன் நண்பனை விலக்கி, அவனை நல்ல நெறியில் செலுத்தி, அவன் துன்புறும்போது தானும் அவனோடு சேர்ந்து அத்துன்பத்தை அனுபவிப்பதே சிறந்த நட்புக்கு அடையாளம் என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 787).

 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.                                            (குறள் – 788)

 

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.                                     (குறள் – 787)

 

நல்ல நண்பர்களாக இருப்பவர்கள், ஒருவர் துன்பத்தை மற்றொருவர் பகிர்ந்துகொள்வதற்கு உதாரணமாக ஒரு கதை ஒன்று கிரேக்கத்தில் வழக்கில் உள்ளது. கிரேக்கத் தத்துவஞானி பித்தகோரஸின் (Pythagoras) சீடர்களாக இருந்த டாமன் (Damon) மற்றும் பித்தியஸ் (Pythias) ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் டியோனிசியஸ் (Dionysius) என்ற கொடுங்கோலன் ஆட்சி செய்துகொண்டிருக்கும் சிரக்குயூஸ் (Syracuse) என்னும் பகுதிக்குச் சென்று, அவன் ஆட்சியை எதிர்த்துப் போராடினார்கள்.  டியோனிசியஸுக்கு எதிராகச் சதி செய்ததாக பித்தியஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றத்திற்குத் தண்டனையாக, டியோனிசியஸ் பித்தியஸுக்கு மரண தண்டனை விதித்தான்.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை பித்தியஸ் ஏற்றுக்கொண்டான். ஆனால், வயதான தன் தாயைப் பார்க்கவும், அவருக்குச் சில உதவிகளைச் செய்வதற்காகவும், தான் தன்னுடைய தாய் இருக்கும் ஊருக்குச் சென்று அவரைப் பார்க்க அனுமதி வேண்டும் என்று பித்தியஸ் டியோனிசியஸிடம் வேண்டினான். தன் தாயைப் பார்த்துவிட்டு, உடனே திரும்பிவந்து கொலைத்தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினான். பித்தியஸை விடுவித்தால், அவன் ஒருபோதும் திரும்ப மாட்டான் என்று டியோனிசியஸ்  நினைத்தான். ஆகவே, பித்தியஸின் கோரிக்கையை டியோனீசியஸ் ஏற்க மறுத்துவிட்டான். பித்தியஸ் இல்லாதபொழுது, அவனுக்குப் பதிலாகத் தான் சிறையில் இருப்பதாகவும். ஒருகால், பித்தியஸ் திரும்பி வராவிட்டால், அவனுக்குப் பதிலாகக் குறிப்பிட்ட நாளில் தான் கொலைத் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் டாமன் டியோனிசியஸிடம் உறுதி அளித்தான். டாமனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, டியோனிசியஸ் பித்தியஸை விடுதலை செய்தான்.

குறிப்பிட்ட நாளில் பித்தியஸ் திரும்பிவரவில்லை.  டாமனை தூக்கிலிடுமாறு காவலாளிகளுக்கு  டியோனிசியஸ் உத்தரவிட்டான். ஆனால் மரணதண்டனை செய்பவர் டாமனைத் தூக்கிலிடப் போகும்பொழுது, பித்தியஸ் ஓடோடி வந்தான். தான் கடற்கொள்ளையர்களிடம் பிடிபட்டதாகவும், அவர்கள் தன்னைக் கடலில் எறிந்ததாகவும், தான் கரைக்கு நீந்த வேண்டியதாக இருந்ததாகவும், சிரக்குயூஸுக்கு எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக வந்தாகவும் கூறி, பித்தியஸ் டாமனிடம் மன்னிப்புக் கேட்டான். டாமனுக்கும் பித்தியஸுக்கும் இடையிலான நட்பைக் கண்டு டியோனிசியஸ் வியப்படைந்தான்.  அவன் பித்தியஸுக்கும்  டாமனுக்கும் மன்னிப்பு வழங்கினான். இந்த நிகழ்வின் அடிப்படையில், இரண்டு நண்பர்களிடையே உள்ள  நல்ல நெருங்கிய நட்பு, “டாமன் மற்றும் பித்தியஸ்  நட்பு” என்று அழைக்கப்படுகிறது[1].

நல்ல நெருங்கிய நண்பர்கள் நெருங்கிப் பழக வேண்டுமா என்ற கேள்வி எழுவது இயற்கை. ஒருவருடன் ஒருவர் நட்புகொள்வதற்கு ஒரே இடத்தில் கூடி ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்றும், அவர்கள் அடிக்கடி சந்தித்துப் பழக வேண்டியதில்லை என்றும், அவர்களிடம் ஒத்த உணர்ச்சி இருக்குமானால், அவர்களுடைய மனம் பொருந்திய உணர்ச்சியே நட்பு என்னும் உரிமையைப் பயக்கும் என்றும் வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 785).

 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்.                                                     (குறள் – 785)

 

நேரடியாகச் சந்திக்காமலும் கூடிப் பழகாமலும் நல்ல நண்பர்களாக இருப்பதற்கு இக்காலத்தில் முகநூல் (Facebook), கீச்சகம் (Tweeter) போன்ற தொழில்நுட்பக் கருவிகள் பேருதவியாக உள்ளன. சங்க காலத்தில், கூடிப் பழகாமல் நல்ல நெருங்கிய நண்பர்களாகக் கோபெருஞ்சோழன் என்ற சோழமன்னனும் பிசிராந்தையார் என்ற புலவரும் இருந்ததாகப் புறநானூற்றிலிருந்து தெரிகிறது.

 

கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் சோழநாட்டை ஆண்டுவந்தான். ஆந்தையார் என்ற புலவர் பாண்டிய நாட்டிலிருந்த பிசிர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தார். கோபெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் வேறுவேறு நாட்டில் வாழ்ந்தாலும், அவர்கள் கருதொருமித்தவர்களாக இருந்ததால், நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் எந்த அளவுக்கு நெருக்காமான நண்பர்களாக இருந்தார்கள் என்றால், பிசிராந்தையார் தன்னைக் கோபெருஞ்சோழனாகவே கருதினார். ஒருபாடலில், “நுங்கோ யார்என வினவின் எங்கோக் கோழி யோனே கோப்பெருஞ் சோழன்” என்று கூறுவேன் என்கிறார்[2]. அதாவது, “என் பெயர் என்னவென்று எவராவது கேட்டால், என் பெயர் உறையூரில் வாழும் கோப்பெருஞ்சோழன் என்று கூறுவேன்.” என்று பிசிராந்தையார் கூறுகிறார். ஒரு சமயம், கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மகன்களுக்குமிடையே தோன்றிய பகையால், அவர்களுக்கிடையே போர் மூண்டது. பொத்தியார் என்ற புலவர் கூறிய அறிவுரைக்கேற்ப, கோப்பெருஞ்சோழன் போர் செய்வதை நிறுத்திவிட்டான். ஆனால், தன் மகன்களோடு போர் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டதை நினைத்து, வெட்கப்பட்டு, வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்தான். அவ்வாறு அவன் வடக்கிருக்கும்பொழுது, அவனைக் காணப் பிசிராந்தையார் வரவில்லை. அவனோடு இருந்தவர்கள், ”பிசிரந்தையார் வரவில்லையே என்பதைக் குறித்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம் அவர் வேறு நாட்டில் இருப்பதால் அவர் இப்பொழுது இங்கு வரும் வாய்ப்பில்லை.” என்று அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால், கோப்பெருஞ்சோழன்,

 

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்

பிசிரோன் என்பஎன் உயிர்ஓம் புநனே;

செல்வக் காலை நிற்பினும்

அல்லற் காலை நில்லலன் மன்னே.[3]

என்றும்,

 

இன்னதோர் காலை நில்லலன்;

இன்னே வருகுவன்; ஒழிக்கஅவற்கு இடமே![4]

 

என்றும் கூறுகிறான். அதாவது, ”தென்திசையில் உள்ள பொதிகை மலையையுடைய பாண்டிய நன்னாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரில் உள்ளவர் ஆந்தையார்.  அவர் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும் நான் துன்பத்தில் இருக்கும்பொழுது என்னைப் பார்க்க வராமல் இருக்கமாட்டார். அவர் இப்பொழுதே வருவார்; அவருக்கு ஓரிடம் ஒதுக்கி வையுங்கள்.”, என்று கோப்பெருஞ்சோழன் கூறுகிறான். அவன் இறந்த பிறகு, பிசிராந்தையார் வந்ததாகவும், பின்னர் அவரும் வடக்கிருந்து உயிர் துறந்தாகவும் கூறப்படுகிறது[5]. நெருங்கிப் பழகாமல் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் என்பதற்கு, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு ஒரு எடுத்துக்காட்டு.

நட்பு தங்கியிருக்கும் மிக உயர்வான இடம் எதுவென்றால், மனம் சுழற்சி இன்றி, இயலும் வழியாலெல்லாம் நண்பர் தளர்ச்சியுற்றபோது தாங்கி நிற்கும் மனவலிமை பொருந்திய நிலையேயாகும் (குறள் – 789) என்று வள்ளுவர் கூறுகிறார்.

 

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.                                          (குறள் – 789)

.                                

’கொட்பு’ என்ற சொல்லுக்கு ’மனச் சுழற்சி’ என்று பொருள். ’கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை’ என்பது உதவி செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்து, மனத்தைக் குழப்பிக்கொள்ளாமல், இயன்ற வழியெல்லாம் தன் நண்பருக்கு உதவி செய்வதைக் குறிக்கிறது. தன்னுடைய நண்பருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், சிலரால் அந்த உதவியைச் செய்யலாமா வேண்டாமா என்று பலமுறை சிந்தித்த பிறகுதான் செய்ய முடியும். எனக்கு மிக நெருங்கிய உறவினர் ஒருவர் இருந்தார். அவர் வயதில் மூத்தவர்; அறிவிற் சிறந்தவர்; ஆன்மீகக் கருத்துக்களை நன்கு அறிந்தவர்.  திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களை நன்கு கற்றவர். அவரைச் சந்தித்து உரையாடுவதற்கு, பலரும் அவர் வீட்டுக்கு வருவது வழக்கம்.  ஒருநாள், அவருடைய பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.  அவரைப் பார்க்க அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வந்தார். வந்த நண்பர், “ஐயா, பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமானது குறித்து நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். ஆனாலும், உங்கள் முகத்தில் ஒரு கவலை தோன்றுகிறது. அது ஏன்?”, என்று கேட்டார். அந்தப் பெரியவர், “திருமணம் குறித்து மகிழ்ச்சிதான். ஆனால், அதற்குத் தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். வேறொன்றுமில்ல.” என்றார். பெரியவர் பேச்சைக் கேட்டவுடன், அவரைப் பார்க்க வந்த நண்பர், அவருடைய சீருந்துக்குச் சென்று காசோலைகள் அடங்கிய புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்தார். நான்கு காசோலைகளில், தொகையும் தேதியும் குறிப்பிடாமல், அந்தப் பெரியவரின் பெயரை மட்டும் எழுதி, கையெழுத்திட்டு, “இதை வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணம் என்னிடம் இருப்பதைவிட, உங்களுக்குப் பயன்பட்டால், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்” என்று கூறி, அந்த நான்கு கசோலைகளை பெரியவரிடம் கொடுத்தார். பெரியவருக்கு அந்தக் காசோலைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும், வேறு வழியின்றி அவற்றைப் பெற்றுக்கொண்டார். பெரியவரின் பெண்ணுக்குத் திருமணம் இனிதே நடைபெற்றது. சில மாதங்களில், பெரியவர் அவர் நண்பருடைய வங்கியிலிருந்து எடுத்துக்கொண்ட தொகையை நண்பரிடம் திருப்பிக் கொடுத்தார். பெரியவரின் நண்பர், அந்தப் பெரியவருக்கு, எவ்விதத் தயக்கமும் இல்லாமல், அவர் கேட்காமலேயே அவருக்கு உதவி செய்தார். இது “கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை” என்று வள்ளுவர் கூறுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

 

நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமாகக் கூறும் வள்ளுவர் நல்ல நட்பு எப்படி இருக்கக் கூடாது என்றும் கூறுகிறார். முகம் மலரும்படியாக நட்புகொள்வது நட்பாகாது; உள்ளுக்குள் மனம் மகிழும்படியாகப் பழகி நட்புக்கொள்வதே நட்பாகும்(குறள் – 786). ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது சிரித்துப்பேசி மகிழ்வதற்கன்று. நண்பர் தகாத செயலை செய்யத் தொடங்குமுன் தாமே முன்னதாகச் சென்று தயங்காமல் கடிந்து கூறித் திருத்துதற் பொருட்டாகும் (குறள் – 784).

 

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.                                                           (குறள் – 786)

 

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.                         (குறள் – 784)

 

நண்பன் தவறு செய்தால் அவனைத் திருத்த வேண்டும் என்ற கருத்தை கிரேக்கத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியரான புளூடார்க் (Plutarch, 45AD – 120AD) என்பவரும் கூறியுள்ளார். “நான் மாறும்போது என்னுடன் மாறி. நான் தலையசைக்கும்போது என்னுடன் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.  என் நிழல் அதைச் சிறப்பாக செய்கிறது.” என்கிறார் புளுடார்க்.

 

நல்ல நட்பின் இயல்பைக் கூறும் வள்ளுவர் அதன் சிறப்பையும் கூறத் தவறவில்லை. நட்பைப்போல், ஒருவன் தனக்குச் செய்துகொள்வதற்கு அருமையான செயல் வேறொன்றுமில்லை என்றும், ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பாதுகாப்பாக அமைவது நட்பைபோல் வேறொன்றுமில்லை என்றும் வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 781).

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.                                            (குறள் – 781)

 

நட்பாராய்தல்

நம்முடைய பெற்றோர், குழந்தைகள், உடன்பிறந்தோர் ஆகியோரையும் வேறு சில உறவினர்களையும்  நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், நண்பர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்; தெர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் தங்களுடைய நம்பிக்கைகளை, மறைகளை (மறை – இரகசியம்), கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள். ஆகவே, ஒருவரை நன்றாக ஆரய்ந்த பின்னர்தான் அவரை நண்பராக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் வள்ளுவர் உறுதியான நம்பிக்கை உடையவராகக் காணப்படுகிறார். ஆராயாமல் ஒருவரோடு நட்புக்கொள்வதால் வரும் கேடுகளைப் பற்றியும், எப்படி ஆராய வேண்டும் என்பதைப் பற்றியும் வள்ளுவர் நட்பாராய்தல் என்ற அதிகாரத்தில் விரிவாகக் கூறுகிறார்.

 

ஒருவரை நன்கு ஆராயாமல் நண்பராக்கிக்கொள்வது பல கேடுகளை விளைவிக்கும். உதாரணமாக, மக்களாட்சி நிலவும் நாடுகளில், தேர்தல் காலங்களில், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, ஆராயாமல் கூட்டணி அமைத்துக்கொண்டு, வெற்றிபெற்ற பிறகு, கட்சிகளுக்கிடையே அல்லது கட்சித் தலைவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் கூட்டணி கலைந்து கட்சிகள் ஆட்சியை இழப்பதை நாம் பல நாடுகளில் பல சமயங்களில் காண்கிறோம். தொழிற்துறையில் உள்ளவர்கள் ஆராயமல் நம்பத் தகாதவர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதால், பல சிக்கல்கள் ஏற்படுவது இயற்கை. அரசியல், தொழில் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் தனிமனிதர்களும் ஒருவரோடு நட்புக்கொள்வதற்குமுன் அவரைப் பற்றி நன்கு ஆராய வேண்டும். ஒருவரோடு நண்பரான பிறகு, அவருடைய நட்பிலிருந்து விலகுவது எளிதன்று. ஆராயாமல் நட்புச் செய்வதைப்போலக் கேடு தருவது வேறொன்றும் இல்லை (குறள் – 781).

 

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.                                     (குறள் – 791)

 

ஒருவனுடைய குணங்களையும் செயல்களையும் பலமுறை திரும்பத்திரும்ப ஆராய்ந்து அதன்பின் நட்புகொள்ளாதவனுக்கு, அந்த நட்பு அவன் சாகும்வரை துன்பதைத் தரும் (குறள் – 792).

 

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.                                            (குறள் – 792)

 

தற்காலத்தில், சில ஆண்களும் பெண்களும் ஒருவரோடு ஒருவர் சமூக வலைத்தளங்களில் தொடர்புகொண்டு, நன்றாக ஆராயாமல், உணர்ச்சிவசப்பட்டுக் காதலிக்கத் தொடங்கி, திருமணம் செய்துகொள்கிறார்கள். இது போன்ற செயல்களால் அதிகத் துன்பமடைபவர்கள் பெண்கள். திருமணம் செய்துகொண்ட சில ஆண்டுகளுக்குள் அன்பின்மை, கருத்து வேறுபாடு, குடும்பத்துக்குள் வன்முறை போன்றவற்றால் மணமுறிவு ஏற்பட்டுத் தங்கள் வாழ்க்கையை அவர்கள் வீணடித்துக்கொள்கிறார்கள். இவ்வாறு ஆராயமல், அவசரப்பட்டுக் காதலித்ததால் வரும் துன்பம் அவர்கள் சாகும்வரை நீடிக்கும்.

 

’ஆய்ந்தாய்ந்து’ நட்புக்கொள்ள வேண்டும் என்று கூறி, நட்புகொள்வதற்குமுன் நன்கு ஆராயவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய வள்ளுவர், எப்படி ஆராய வேண்டும் என்பதற்குச் சில அறிவுரைகளைக் கூறுகிறார். ஒருவன் தவறு செய்யும்பொழுது கண்டித்து, மனம் வருந்துமாறு அறிவுரை கூறி, உலக வழக்கு என்ன என்பதை அறிந்து அதன்படி அவனை நடப்பிக்கும் திறமை உடையவரை ஆராய்ந்து அவரோடு அவன் நட்புக்கொள்ள வேண்டும் (குறள் – 795). ஒருவனுக்கு கேடுகள் வரும்பொழுது, அவனுக்கு உறுதுணையாக இருப்பவர்கள்தான் அவனுடைய உண்மையான நண்பர்கள். அதனால் கேட்டிலும் ஒரு நன்மை உள்ளது. ஒருவனுடைய நண்பர்களுள் உண்மையான நன்பர்கள் எவர் என்பதைக் கண்டறிவதற்கு கேடு ஒரு அளவுகோல். (குறள் – 796) 

 

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.                               (குறள் – 795)

 

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.                               (குறள் – 796)

 

கேடு வந்தபொழுதுதான் உண்மையான நண்பர்களைக் கண்டுகொள்ள முடியும் என்ற கருத்து நாலடியாரிலும் காணப்படுகிறது.

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து

மேலாடு மீனின் பலராவர் - ஏலா

இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!

தொடர்புடையேம் என்பார் சிலர்.                    (நாலடியார் -113)

 

(பொருள்: குளிர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! செல்வம் உண்டான காலத்தில் மேலே வானத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட நெருங்கிய உறவினர் பலராவர். தகாத, கொடிய வறுமையை ஒருவர் அடைவராயின், அப்போது, 'அவர் எம் உறவினர்' என்று உரிமை பாராட்டுவோர் ஒரு சிலரே ஆவர்.)

பழைமை

பழைமை என்னும் சொல்லை, நெடுங்காலமாகப் பழகிவந்த பழைமையான நட்பு என்ற பொருளில் வள்ளுவர் பயன்படுத்துகிறார். பழைமையால் விளைவது உரிமை. நட்பின் பழக்கத்தினால், உரிமை பாராட்டுவதையே  'பழைமை' என்னும் சொல் குறிக்கிறது. நெடுங்காலமாகத் தொடர்ந்து நண்பர்களாக இருப்பவர்களுள் ஒருவர் உரிமையோடு செய்பவை பிழையானவையாகத் தோன்றினாலும் அவற்றை மற்றவர் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து. ”ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது பழமொழி. ’பழைமை’ என்றால் என்னவென்று கேட்டால், அது பழைமையான நண்பர் தாம் விரும்பியவாறு செய்தற்குரிய உரிமையைச் சிறிதும் சிதைக்காமல் ஏற்றுக்கொள்ளும் நட்பாகும் (குறள் – 801).

 

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.                                   (குறள் – 801)

 

துரியோதனன் கர்ணன் ஆகிய இருவரின் பழைமையான நட்புக்கு உதாரணமாக மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.  ஒரு நாள் துரியோதனனின் மனைவி பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார்கள். அங்கு, துரியோதனன் வருவதைக் கண்ட பானுமதி திடீரென்று எழுந்தாள். அவள் தோற்கும் நிலையில் இருந்ததால் ஆட்டத்தைவிட்டுப் போக விரும்புகிறாள் என்று நினைத்த கர்ணன் அவள் புடவையைப் பிடித்து இழுத்து அவளை உட்காரவைக்க முயற்சி செய்தான். அப்பொழுது, பானுமதியின் இடுப்பில் இருந்த மேகலையிலிலிருந்து முத்துக்கள் சிதறின. அங்கு வந்த துரியோதனன், தன் மனைவியோடு கர்ணன் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்ததையோ, கர்ணன் பானுமதியின் மேகலையைப் பிடித்து இழுத்ததையோ சிறிதும் பொருட்படுத்தாமல், ”எடுக்கவோ கோக்கவோ என்றான். அதாவது, துரியோதனன் ”முத்துக்களை எடுக்கவா அல்லது மாலையாகக் கோர்த்துத் தரட்டுமா?” என்று கேட்டான்.

மடந்தை பொன்திரு மேகலை மணி உகவே மாசுஅறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ? கோக்கவோ?" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,தருமமும்!

                                                                                                (வில்லிப்புத்தூரார், மகாபாரதம்)

தீ நட்பு

மனிதர்களுடைய வாழ்க்கையில் நட்பு ஒரு இன்றியமையாத உறவு. ஒருவனுடைய நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால், அவர்கள் அவனுக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்வார்கள். அவனுக்குத் துன்பம் நேர்ந்தால் அதைத் தமக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி அவனுடைய துன்பத்தில் பங்கேற்பார்கள். அவன் தவறான வழிகளில் சென்றால் அவனை இடித்துரைத்துத் திருத்த முயற்சி செய்வார்கள். நல்ல நண்பர்கள் இருந்தால் எதையும் எளிதில் சாதிக்க முடியும். நல்ல நண்பர்களால் பல நன்மைகள் உள்ளதைப்போல் தீய நண்பர்களால் பல தீமைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் ஒருவரை நம்முடைய நண்பராக்கிக்கொள்வதற்குமுன் அவரைப் பற்றி நன்கு ஆராய வேண்டும் என்ற கருத்தை நட்பாரய்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், சில சமயங்களில், எவ்வளவு ஆராய்ந்தாலும், ஒருவர் நல்லவரா அல்லது தீயவரா என்று உறுதியாகத் தீர்மானிக்க முடியாது. சிலகாலம் நண்பர்களாகப் பழகினால்தான் ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முடியும். ஒருவரோடு நண்பராகப் பழகியபின், அவர் தீயவர் என்று தெரிந்தால், அவருடைய நட்பைக் குறைத்துகொள்ள வேண்டும், முடிந்தால் அவருடைய நட்பைவிட்டு விலக வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.  தீ நட்பு என்ற அதிகாரத்தில், 1)பண்பில்லாதவர்கள், 2)பயன் மட்டுமே கருதுபவர்கள், 3)நம்ப முடியாதவர்கள், 4)பேதைகள், 5)மகிழ்ச்சியை மட்டுமே விரும்புவோர், 6)காரியத்தைக் கெடுப்பவர்கள், மற்றும், 7)தனிமையில் நண்பராக இருந்து பொதுவிடத்தில் பழிப்பவர்கள் ஆகிய ஏழு திறத்தாருடைய நட்பினால் வரும் தீமைகளைப் பற்றியும், அவர்களின் நட்பை விலக்க வேண்டும் என்றும் வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார்.

 

பண்பில்லாதவர்களின் நட்பு: நம்மைக் காணும்போது அன்பின் மிகுதியால் அப்படியே நம்மை விழுங்குவார்போல் காணப்பட்டாலும். பண்பற்றவர்களின் நட்பு மேன்மேலும் வளர்வதைவிடத் தேய்ந்து போதல் நல்லது (குறள் – 811).

 

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.                                             (குறள் – 811)

 

பயன் கருதுபவர்களின் நட்பு: தமக்கொரு பயனுள்ளபோது நட்புச்செய்து, பயனில்லாதபோது நீங்கிவிடுகின்ற, தமக்குப் பொருத்தமில்லாதவரின் நட்பைப் பெற்றால் என்ன? இழந்தால் என்ன? (குறள் – 812). நட்பினால் கிடைக்கும் பயனை அளந்துபார்த்து, நட்புக்கொள்ளும் நண்பர்களும், கொடுப்பவரை விரும்பாமால் அவர் கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் விலைமாதரும், பிறருக்கு ஏற்படும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களின் பொருளைத் திருடும் கள்வரும் சமமானவர்கள் (குறள் – 813). இது போன்ற பயன் கருதும் நட்பை, வள்ளுவரைப்போல் அரிஸ்டாட்டிலும் தீய நட்பாகவே கருதுகிறார். ”நட்பு என்பது ஒரு மிகப் பெரிய பொறுப்பு.; அது பயன் அடைவதற்கான வாய்ப்பு அன்று.” என்று கலீல் கிபரன் (Khalil Gibran, 1881 – 1931)) என்ற கவிஞர் கூறியது இங்கு நினைவுகூரத் தக்கது.

 

உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்.                                               (குறள் – 812)

 

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.                                             (குறள் – 813)

 

நம்ப முடியாதவர்களின் நட்பு: ஒருவர் நமக்கு உதவி செய்வார் என்று அவரை நாம் நம்பி இருக்கும்பொழுது அவர் உதவி செய்யாமல் நம்மைக் கைவிட்டுவிட்டால், அவரோடு நட்புக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.  அதுபோல், ஒருவர் சொல்வது ஒன்று செய்வது வேறாக இருந்தால் அவரோடும் நட்புக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது போன்றவர்கள் நம்பத் தகுந்தவர்கள் என்று கருத முடியாது என்பது வள்ளுவரின் கருத்து. போர்க்களத்தில், தன்மீது அமர்ந்திருக்கும் வீரனைக் கீiழே தள்ளிவிட்டுவிட்டு ஓடிப்போகும் பயிற்சி போதாத குதிரை போன்றவருடன் பழகி அவருடைய நண்பர் ஆவதைவிடத் தனிமையாக இருப்பதே சிறந்தது (குறள் – 814). செயல் வேறாகவும் சொல் வேறாகவும் இருப்பவர்களின் நட்பு கனவிலும் கூடக் கொடியது (குறள் – 819). இங்கு, “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.” என்று இராமலிங்க அடிகளார் கூறியது நினைவுகூரத் தக்கது.

 

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.                                                      (குறள் – 814)

 

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.                                 (குறள் – 819)

 

பேதைகளின் நட்பு: அறிவில்லாதவருடன் மிகநெருங்கிப் பழகி நண்பர்களாக இருப்பதைவிட, அறிவுடையவர்களின் பகைமை, கோடி மடங்கு நன்மை பயக்கும் (குறள் – 816).

 

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.                                        (குறள் – 816)

 

மகிழ்ச்சியை மட்டும் விரும்புவோரின் நட்பு: மகிச்சிக்காக மட்டுமே ஒருவர் நம்முடையாக நண்பராக இருக்க விரும்பினால், அத்தகைய நட்பும் தீய நட்புதான் என்பது வள்ளுவரின் கருத்து, உள்ளத்தில் அன்பில்லாமல், புறத்தே சிரித்து நடிப்பவர்களின் நட்பைவிட பகைவரால் பத்துக்கோடி மடங்கு நன்மை உண்டாகும்.

 

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.                                          (குறள் – 817)

 

காரியத்தைக் கெடுப்பவர்களின் நட்பு: நாம் செய்ய விரும்பும் நற்செயல்களுக்கு நல்ல துணையாக உள்ளவர்கள்தான் உண்மையான நண்பர்கள். சிலர் நம்மோடு நண்பராக இருந்தாலும், நாம் ஒரு நற்செயலைச் செய்ய நினைக்கும்பொழுது நம்மை ஊக்குவிக்காமால், நம்மை அச்செயலைச் செய்யவிடாமல் இருப்பவர்களின் நட்பையும் தவிர்க்க வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. நம்மால் செய்யக் கூடிய செயலைச் செய்யவிடாமல் நம்மைக் குழப்பி வருத்துபவர்களின் நட்பை, அவரிடம் வெளிப்படையாகச் சொல்லாமல் சிறிதுசிறிதாக விட்டுவிட வேண்டும் (குறள் – 818).

 

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.                                     (குறள் – 818)

 

தனிமையில் நட்பாக இருந்து பொதுவிடத்தில் பழிப்பவர்களின் நட்பு: தனியாக இருக்கும்பொழுது நம்மிடம் நண்பு பாராட்டி, பலர்கூடியுள்ள பொதுவிடத்தில் நம்மைப் பழிப்பவர்களின் நட்பைச் சிறிதளவுகூட நெருங்கவிடாமல் தவிர்க (குறள் – 820) என்கிறார் வள்ளுவர்.

 

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.                                              (குறள் – 820)

 

கூடா நட்பு

தீ நட்பு என்பது தீயவர்களின் நட்பு. எவ்வளவு ஆராய்ந்து நட்புக்கொண்டாலும், சில சமயங்களில், சில நண்பர்களுடைய உண்மையான குணத்தை அறிந்துகொள்ள முடியாது. பழகப்பழகத்தான், அவர்கள் நல்லவர்களா தீயவர்களா என்பது தெரியவரும். நண்பர்களாக இருப்பவர்கள் தீயவர்கள் என்று தெரிந்தவுடன், அவர்களுடைய நட்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். முடியுமானால் அவர்களுடைய நட்பிலிருந்து விலகவேண்டும். நட்பில் மற்றொரு வகையும் உள்ளது. உள்ளத்தில் நட்பில்லாமல் நண்பர்களைப்போல் சிலர் நடிப்பார்கள். இது போன்றவர்களில் சிலர் பகைவர்களாகக்கூட இருக்கலாம். இத்தகைய நட்பு, உள்ளத்தால் பொருந்தாத நட்பாகையால் அதைக் கூடா  நட்பு என்கிறார் வள்ளுவர்.  கூடா நட்பை உரிய நேரத்தில் நயமாக நீக்கிவிட வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.

 

மனம் பொருந்தாமல், சமயம் வாய்க்கும்பொழுது, தீமை செய்யாலாம் என்ற எண்ணத்தோடு நண்பர்போல் நடித்துக் கூடிப்பழகுபவரின் நட்பு கூடா நட்பு. அது இரும்பை சம்மட்டியால் அடிப்பதற்குத் துணையாக இருக்கும் பட்டடையைப் போன்றது (குறள் – 821). நண்பரைப்போல் நல்லவற்றையே நம்மிடம் பேசினாலும், நண்பர்களல்லாத பகைவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும் (குறள் – 826). அம்பை எய்து அதனால் தீமை செய்வதற்காகவே வில் வளைகிறது. அதுபோல் பகைவர்களின் பணிவான சொற்களும் தீமை பயப்பதற்காகவே சொல்லப்பட்டதாக உணர வேண்டும் (குறள் – 827). தொழுவதற்காகப் பகைவர்கள் தங்கள் கைகளை கூப்பினால், அவற்றுக்குள் கொலைக்கருவிகள் மறைந்திருக்கும்; அவர்கள் அழுது கண்ணீர் விட்டாலும், அந்தக் கண்னீரிலும் தீமை மறைந்திருக்கும் (குறள் – 828). நம்முடன் மனத்தால் பொருந்தாதவர்களை, அவர்கள் சொல்லும் சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு, தெளிவடையக் கூடாது (குறள் – 825). 

 

 

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.                                                       (குறள் – 821)

 

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.                                                       (குறள் – 826)

 

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
                                         (குறள் – 827)

 

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.                                            (குறள் – 828)

 

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று.                                 (குறள் – 825)

 

பகைவர்கள் நண்பர்களாக நெருங்கும் காலம் வந்தால், என்ன செய்வது என்பதற்கும் வள்ளுவர் அறிவுரை கூறுகிறார். வெளியே மிகுந்த நட்புடையவர் போல நடந்துகொண்டு, அகத்தே தம்மை இகழும் வஞ்சகப் பகைவர்களை, தாமும் வெளியே சிரித்துப்பேசி, அவர்களை மகிழச் செய்வதுபோல் செய்து அந்த நட்பை அழித்துவிட வேண்டும் (குறள் – 829). நம்முடைய பகைவர் நமக்கு நண்பராகப் பழகவேண்டிய சூழ்நிலை வருமானால், அப்பொழுத் நாமும் அவர்களிடம் முகத்தளவில் நட்புகொண்டு, உள்ளத்தில் நட்புக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்(குறள் – 830),

 

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.                                           (குறள் – 829)

 

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல்.                                                        (குறள் – 830)

 

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் நாடுகளுக்கும் நட்பு தேவை

வலிமையான படை, சிறந்த குடிமக்கள், உணவுப் பொருள்கள், அறிவிற் சிறந்த அமைச்சர்கள், நல்ல நண்பர்கள், வலிமையான அரண் ஆகிய ஆறும் உடையவன் அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன் என்று இறைமாட்சி என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 381).

 

            படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

          உடையான் அரசருள் ஏறு.                                     (குறள் – 381)

 

இங்கு நட்பு என்பது, தனிப்பட்ட முறையில் மன்னனுக்கு நண்பர்கள் இருக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்காமல் ஒரு நாட்டுக்கு நட்புள்ள நாடுகள் இன்றியமையாதவை என்பதையும் குறிக்கும். தற்காலத்தில், நாடுகள் தங்கள் நட்பு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்கின்றன. ஒரு நாட்டைப் பகைநாடு தாக்கினால், அந்த நாட்டோடு நட்புறவு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட நாடுகள் படையெடுத்து வந்த நாட்டை எதிர்ப்பதற்குத் துணையாக இருக்கும். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, உருசியாவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஐரோப்பாவில் உள்ள நாடுகள் அமெரிக்காவோடு இணைந்து North Atlantic Treaty organization (NATO) என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டன. அந்த ஒப்பந்த்தின் மையக் கருத்து, ”ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதல் ( Attack on one is an attack on all). இது நட்புடைய நாடுகளின் ஒப்பந்தம். மன்னனுக்கு நட்பு தேவை என்று முடியாட்சிக் காலத்தில் வள்ளுவர் கூறியது இக்காலத்தில் நாடுகளுக்கும் பொருந்தும்.

 

முடிவுரை

மனிதன் மற்றவர்களோடு கூடி வாழும் இயல்பும் அன்பும் உடையவன். ஒருவன் தன் உறவினர்களோடும் மற்றவர்களோடும் அன்பாகப் பழகுவதைப் பார்ப்பவர்களுக்கு அவனோடு பழகவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். அந்த ஆர்வத்தால் அவர்களுக்கும் அவனுக்கும் இடையே நட்பு உண்டாகும். நட்பை, அறம் சார்ந்த நட்பு, பயன் கருதும் நட்பு, மகிழ்ச்சிக்கான நட்பு என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்று கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் கூறுகிறார். அறம் சார்ந்த நட்புதான் நல்ல நட்பு என்றும், மற்ற இரண்டுவகையான நட்புக்களும் தீ நட்பு என்று வள்ளுவர் கூறுகிறார். நன்கு ஆராய்ந்த பின்னர்தான் ஒருவரை நண்பராக்கிக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து, எவ்வளவு ஆராய்ந்தாலும், சில சமயங்களில், ஒருவர் நல்லவரா அல்லது தீயவரா என்று கண்டுபிடிக்க முடியாது. சில காலம் பழகிய பின்னர்தான் ஒருவர் நல்லவரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நண்பராக இருப்பவர் தீயவர் என்று தெரிந்தவுடன், அவருடன் உள்ள நட்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால், அந்த நட்பிலிருந்து விலக வேண்டும். சில சூழ்நிலைகளில், பகைவர்கள் நண்பர்களைப்போல் நடிக்கலாம். அத்தகைய நட்பில், உள்ளத்தில் ஒற்றுமை இல்லாததால் அதைக் கூடா நட்பு என்கிறார் வள்ளுவர். கூடா நட்பில், நாமும் நண்பர்களைப்போல் நடித்து உள்ளத்தில் நட்புக்கொள்ளாமல் அவர்களோடு உள்ள நட்பை நீக்கிவிட வேண்டும். தனிமனிதர்களுக்கு எப்படி நட்பு தேவையோ, அதுபோல் நாடுகளுக்கும் நட்பு தேவை.

 

துணைநூல்கள்

Bacon, Francis. Of Friendship. Kessinger Publishing, LLC, Whitefish, MT, USA: 2010

Diaz, S.M. Thirukkural. Volumes 1 &2.  Ramanandha Adigalar Foundation, Chennai: 2000.

Grayling, A.C. Friendship. Yale University Press, New Haven, CT USA and London, UK. 2013.

Marudanayagam, P. Ancient Tamil Poetry and Poetics: New Perspectives. Central Institute of

Classical Tamil, Chennai 2010.

__________________. நட்பாராய்தல்: திருவள்ளுவரும் அரிஸ்டாட்டிலும். The Journal of The International

Society for Tamil Cultural Studies, Vol. 1, Number 1.

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural). Emerald publishers, Chennai.

சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்:

1989.

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், மதுரை:

1999.

தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,

சென்னை, 600 017

பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 2). காவ்யா பதிப்பகம், சென்னை

 



[2]. புறநானூறு, பாடல் 212

[3] . புறநானூறு, பாடல் 215

[4] . புறநானூறு, பாடல் 216

[5]. புறநானூறு, பகுதி II, பக்கம் 31