Statcounter

Monday, April 27, 2020

தோன்றின் புகழொடு தோன்றுக!


தோன்றின் புகழொடு தோன்றுக!

ஒருவரின் சிறப்பான சாதனைகள் பலரால் அறியப்பட்டால் அல்லது பேசப்பட்டால் அவர் புகழுடையவராகக் கருதப்படுகிறார். புகழில் பலவிதம் உண்டு. சிலருடைய புகழ் மின்னலைப் போன்றது. அத்தகைய புகழ் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிலகாலம் மட்டுமே தோன்றி, பின்னர் விரைவில் மறைந்துவிடும். சிலருடைய புகழ் கதிரவனைப்போல் நிலம், காலம் போன்றவற்றின் எல்லைகளைக் கடந்து விளங்கும். உதாரணமாக, மெய்யியல் அறிஞர்கள்(Philosophers), அறிவியல் வல்லுநர்கள், பெருமைக்குரிய கலைஞர்கள், சிறந்த  எழுத்தாளர்கள் போன்றவர்களில் உயர்ந்த சாதனை படைத்தவர்கள் பலராலும் பலநாடுகளில், நீண்ட காலமாக அறியப்பட்டும் பாராட்டப்பட்டும் வருவதால் அவர்களுடைய புகழ் என்றென்றும் உலகெங்கும் நிலைத்து நிற்கும் தன்மையது. பலருடைய புகழ் மின்னலைப்போல் விரைவில் மறையாமலும், கதிரவனைப்போல் என்றென்றும் நிலைத்து நிற்கும் தன்மை இல்லாமலும், இரண்டு வகையான புகழுக்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற முறையில் புகழோடு வாழவேண்டும் என்பது குறளில் காணப்படும் கருத்து.

புகழின் சிறப்பு
ஈகையினால் வரும் புகழைத் தவிர உயிர்க்குப் பயன் அளிக்கக் கூடியது வேறு எதுவுமில்லை (குறள் – 231). புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின்மேல் நிற்கின்ற புகழேயாகும் (குறள் – 232).

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.                                   (குறள் – 231)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.                              (குறள் – 232)

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில், உலகில் பல மாற்றங்கள் தோன்றியுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், பெரிய நகரங்கள் இல்லை. அக்காலத்தில், பெரும்பாலான மக்கள் சிற்றூர்களில் வாழ்ந்தார்கள்; ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்கள். இன்று, பலரும் பெரிய நகரங்களில் அடுக்ககங்களில் வாழ்கின்றனர். மக்களிடையே அதிகத் தொடர்பில்லை. பல ஆண்டுகளாக அடுத்த வீட்டிலிலேயே இருப்பவர்களைக்கூட மக்கள் தெரிந்துகொள்வதில்லை; அவர்களோடு பழகுவதில்லை. தொலைத்தொடர்பு (Telecommunication), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), தொலைக்காட்சி (Television), இணையம் (Internet), சமூக வலைத்தளங்கள் (Social Networks), போக்குவரத்து (Transportation) போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் சமுதாயத்தில் பல நிரந்தரமான மாற்றங்கள் தோன்றியுள்ளன. இது போன்ற மாற்றங்களால், மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நேரடித் தொடர்பைவிட தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்கள் வழியாக ஒருவர் மற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்கிறார்கள். ஒருவருடைய ஈகையால் அவரிடம் வந்து இரப்பவனுக்கு நன்மை உண்டு. ஈகையால், கொடுப்பவர் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் ஈகையால் ஒருவன் புகழடைவதற்கு அதிக வாய்ப்பில்லை. அவனுடைய ஈகை பலருக்கும் தெரிந்து, பலராலும் பாராட்டப்பட்டாலும், அதனால் வரும் புகழ் நிலையானதாக இருப்பதற்கும் வாய்ப்பில்லை. பெருஞ்செல்வந்தர்கள் ஒப்புரவு செய்கிறார்கள். அவர்கள் ஒப்புரவைப் பற்றி வெளிவரும் விளம்பரங்களால் அவர்கள் புகழடைகிறார்கள். இந்தப் புகழும் நிலையானதாக இருப்பதில்லை.

”ஈகையால் வரும் புகழைத் தவிர உயிர்க்குப் பயன் அளிக்கக் கூடியது வேறு எதுவுமில்லை”,  என்றும் ”புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின்மேல் நிற்கின்ற புகழேயாகும்.”, என்றும் வள்ளுவர் கூறுவது இக்காலத்துக்கு ஏற்ற கருத்தாகத் தோன்றாவிட்டாலும், ஈகையின் சிறப்பையும் அதனால் வரும் புகழையும் வலியுறுத்துவதற்காக அவர் இவ்வாறு கூறியதாகக் கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

நிலையற்ற இவ்வுலகில் அழியாமல் நிலைத்து விளங்குவது உயர்ந்த புகழைத் தவிர வேறொன்றுமில்லை (குறள் – 233).

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.                                 (குறள் – 233)

எல்லோருடைய புகழும் நிலைத்து நிற்குமா என்பது ஆய்வுக்குரியது. ஒருவன் தன் வாழ்நாட்களில் ஈகை(Charity), ஒப்புரவு (Philanthropy), கலை, கல்வி, வீரம், இலக்கியம், அரசியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்த விளங்கினால், அவன் சாதனைகளைப் பற்றி அறிந்தவர்கள் அவனைப் பாராட்டுவர்கள். அவன் புகழுடையவனாகக் கருதப்படுவான். அவன் இறந்த பிறகும் சில காலம் அவனைப் புகழ்ந்து பேசுவார்கள். அவனுடைய புகழ், சில ஆண்டுகளில் அல்லது சில தலைமுறைகளுக்குப் பிறகு மக்களுடைய மனத்தில் இருந்து மறையக்கூடும். ஆனால், மிகச் சிறந்த சாதனை புரிந்தவனாக இருந்தால், அவனுடைய ஈடு இணையற்ற உயர்ந்த புகழ் நீண்ட காலம் நாடு, மொழி, இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து, காலத்தையும் கடந்து நிலைத்திருக்கும். புத்தர், சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து, காந்தியடிகள் ஆகியோரின் புகழை வள்ளுவர் கூறும் உயர்ந்த புகழுக்கு எடுத்துக்காட்டாகக் கருதலாம்.

புகழுடையார் எய்தும் மேன்மை
இந்நிலவுலகின் எல்லைக்கண்ணே ஒருவன் நிலைத்துநிற்கும் புகழுக்குரிய செயல்களைச் செய்வானாகில், தேவருலகம் தன்னிடமுள்ள தேவரைப் போற்றாமல் அவனேயே போற்றும் (குறள் – 236). புகழ் பெருகும்பொழுது கேடுறுதலும் புகழ் நிலைக்கச் செய்து சாதலும் பேராற்றல் மிக்கவர்க்கன்றி மற்றவர்க்கு இயலாது. (குறள்-235).

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.                            (குறள் – 234)

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.                            (குறள் – 235)

தேவருலகம் தேவர்களைப் போற்றாமல் நிலைத்துநிற்கும் புகழுக்குரிய செயல்களைச் செய்பவர்களையே போற்றும் என்று வள்ளுவர் கூறுவது, நிலையான புகழுக்குரிய செயல்களைச் செய்பவர்களின் பெருமையை அவர் பாராட்டுவதைக் குறிக்கிறது.

சிலர் ஈகை, கொடை போன்றவற்றால் பிறர்க்கு உதவி செய்வதைத் தம் கடமையாகக் கருதி, அவற்றால் தமக்குக் கேடு வந்தாலும், சாவே வந்தாலும் அவற்றைத் தொடர்ந்து செய்யத் தயங்குவதில்லை. உதாரணமாக, கர்ணன் வந்தோர்க்கெல்லாம் வாரிவழங்கும் கொடைவள்ளலாகத் திகழ்ந்ததாக மகாபாரதத்தில் கூறப்படுகிறது. இந்திரன் ஒரு ஏழைப் பார்ப்பனனைப்போல் வந்து, கர்ணனின் உயிருக்குப் பாதுகாவாலக உள்ள கவசத்தையும் காதணியையும் தனக்குக் கொடுக்குமாறு கேட்டவுடன் கர்ணன் எவ்விதத் தயக்கமும் இன்றி, அவற்றை இந்திரனுக்குக் கொடுத்துத் தன்னுடைய அழிவுக்கு வழி தேடிக்கொண்டதாகவும் மகாபாரதம் கூறுகிறது. தனக்குப் புகழ் வேண்டுமென்று கர்ணன் கொடை கொடுக்கவில்லை. கர்ணனின் கொடை அவனுடைய புகழ் வளர்வதற்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது.

 ஒருவனுடைய புகழ் வளரும்பொழுது அவன் கேடடைவதும், இறுதியாக அவனுடைய புகழே அவனுடைய சாவுக்கும் காரணமாக இருப்பதற்குச் சங்க இலக்கியத்தில் ஒரு சான்று உள்ளது[1]. சங்க காலத்தில், பாரி என்று ஒரு குறுநில மன்னன் முன்னூறு ஊர்களைக்கொண்ட பறம்பு நாட்டை ஆட்சி புரிந்தான். அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். கொடையில் சிறந்தவனாக இருந்ததால், அவனுடைய புகழ் தமிழகம் முழுதும் பரவியிருந்தது. அதைக் கண்டு பொறாமை அடைந்த மூவேந்தர்களும் அவனோடு போர்புரிந்து அவனை அழிப்பதற்காக அவன் இருந்த பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல நாட்கள் முற்றுகை இட்டும் அவர்களால் பாரியை வெல்ல முடியவில்லை. அப்பொழுது, பாரியின் நண்பரும் அவைக்களப் புலவராகவும் இருந்த கபிலர், “ நீங்கள் எத்தனை நாட்கள் முற்றுகை இட்டாலும், பாரியை வெல்லமுடியாது. அவன் தன் நாட்டில் இருந்த முன்னூறு ஊர்களையும் வந்து கேட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டான். இப்பொழுது பறம்பு நாட்டில் உள்ளதெல்லாம், பாரியும் எம் போன்ற புலவர்களும்தான். நீங்கள் பரிசிலரைப்போல் பாடி வந்தால் பாரியையும், எம் போன்ற புலவர்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.” என்று கூறினார். அதற்கேற்ப, மூவேந்தர்களும் பாணர்களாக வந்ததாகவும், அவர்களைக் காணவந்த பாரியை அவர்கள் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. பாரி புகழுக்காகக் கொடையை மேற்கொள்ளவில்லை. அவனுடைய கொடையால் அவன் தன்நாட்டை இழந்தான். முடிவில் அவனுடைய இறப்புக்கும் கொடையே காரணமாக அமைந்தது. வள்ளுவர் கூறுவதைப்போல், ” நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்” என்பதற்கு பாரியின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.

கர்ணன் ஒரு கற்பனைக் கதாபாத்திரம். பாரியைப் பற்றிய செய்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. ஆனால், அண்மைக்காலத்தில், தாழ்த்தப்பட்ட தமிழர்களிடையே பகுத்தறிவையும் சுயமரியாதையையும் பெருக்குவதற்காகவும், மகளிரின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடியவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் புகழுக்காக எதையும் செய்யவில்லை. அவருடைய செயல்களால் அவர் புகழ் வளர்ந்தது. அதே சமயம், அவர் தன் செல்வத்தை இழந்தார்; பலமுறை சிறைக்குச் சென்றார். புகழ் வளரும்பொழுது கேடுறுவதற்குத் தந்தை பெரியாரின் வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டு.

புகழ் இல்லாதவர்களின் தாழ்வு
ஒருவன் பிறரால் புகழப்படுவதும் இகழப்படுவதும் அவனுடைய செயல்களால் நடைபெறுபவை. அதனால், தமக்குப் புகழ் உண்டாகுமாறு அதற்கேற்ற செயல்களைச் செய்யாதவர்கள், அதுபற்றித் தம்மைத் தாமே நொந்துகொள்ளாமல் பிறரை நோவது ஏன் (குறள் – 237)?


புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?                                 (குறள் – 237)

புகழ் என்பது ஒருவருடைய செயல்களைப் பொறுத்தது. ஒரு செயலைச் சிறப்பாகச் செய்வதால் ஒருவர் புகழ் பெறுகிறார். உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர், மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தால் அவருடைய மேலதிகாரிகள் அவரைப் பாராட்டுவர்கள். அவருக்குப் பதவி உயர்வும் கிடைக்கலாம். அவருடைய செயலால் அவருக்குப் புகழ் கிடைக்கிறது. அதே அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொருவர் சிறப்பாகப் பணியாற்றாவிட்டால் அவர் கண்டிக்கப்படுவார். அவர் பணியிலிருந்து நீக்கப்படலாம். தனக்குப் புகழ் கிடைக்கவில்லையே என்று சிறப்பாகப் பணிபுரியாதவர் சிறப்பாகப் பணிபுரிந்து புகழ் பெற்றவரையோ அல்லது அவர் பணியாற்றிய நிறுவனத்தில் உள்ள மற்றவர்களையோ நொந்துகொள்வதால் என்ன பயன்? புகழ் கிடைக்க்கும் முறையில் பணியாற்றாததற்காக அவர் தன்னைத்தான் நொந்துகொள்ள வேண்டும். இதைத்தான், வள்ளுவர் ”புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?” என்று கேட்கிறார்.  

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாவிட்டால், உலகத்து மக்கள் அனைவருக்கும் அது ஒரு பழியாகும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். புகழோடு வாழ்வதே மக்களின் கடமை என்பது வள்ளுவரின் கருத்து (குறள் – 238).

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.                                         (குறள் – 238)

எஞ்சி நிற்பது எச்சம். ஒருவன் இறந்த பிறகு எஞ்சி இருப்பது அவனுடைய செல்வம், மக்கள் மற்றும். அவனுடைய புகழ். ஓருவன் புகழோடு வாழாவிட்டால், அவன் இறந்த பிறகு அவனுடைய புகழ் எஞ்சி இருப்பதற்கு வாய்ப்பில்லை. 'இசையென்னும் எச்சம்' என்பதற்குப் 'புகழ் எனப்படும் எஞ்சி நிற்பது' என்று பொருள். ஒருவன் இறந்த பிறகு அவனுடைய புகழ் எஞ்சி நிற்காவிட்டால் அது அவனுக்குப் பழியாகும் என்கிறார் வள்ளுவர்.  ஆகவே, வாழும்பொழுது புகழோடு வாழ வேண்டும் என்பதில் வள்ளுவர் உறுதியான நம்பிக்கை உடையவர் என்பது பெறப்படுகிறது.

வசை (பழி) ஏற்படாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர். புகழ் பெறாமல் வாழ்பவர்கள் உண்மையில் உயிரோடு இருந்தாலும் அவர்கள் வாழாதவர்களாகவே கருதப்படுவர் (குறள் – 240).

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.                               (குறள் – 240)

”வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்பதிலிருந்து பழி இல்லாமல் வாழ்பவர்கள்தான் உண்மையிலேயே வாழ்பவர்கள் என்பது பெறப்படுகிறது. “இசையொழிய வாழ்வாரே வாழாதவர்” என்பதிலிருந்து புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் உண்மையிலேயே வாழாதவர்கள் என்பது தெரிகிறது. இந்த இரண்டு கருத்துக்களையும் இணைத்துப் பார்த்தால், பழியில்லாமல், புகழோடு வாழ்பவர்கள்தான் உண்மையிலேயே வாழ்பவர்கள் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. சிலர் பழி, புகழ் இரண்டும் இல்லாமல் வாழலாம். அத்தகைய வாழ்க்கையை வள்ளுவர் சிறப்பானதாகக் கருதவில்லை  என்பது குறிப்பிடத் தக்கது. இயேசு கிறிஸ்து, காந்தியடிகள் போன்றவர்கள்கூட சிலரால் பழிக்கப்பட்டார்கள். ஆகவே, பழியில்லாமல் வாழமுடியுமா என்பது ஆய்வுக்குரியது.

புகழ் இல்லாத உடலைச் சுமந்த நிலம் தன்னுடைய பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் கெடும் (குறள் – 239).
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.                             (குறள் – 239)

”மன்னன் செங்கோல் செலுத்தினால் மாதம் மும்மாரி மழை பொழியும்”, ”நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் மழை” போன்றவை தமிழ் நாட்டில் நெடுங்காலாமாக நிலவிவரும் நம்பிக்கைகள். பொதுவாக, ”மக்கள் நல்லவர்களாக இருந்தால், அந்த நாடு வளமானதாக இருக்கும். மக்கள் நல்லவர்களாக இல்லாத நாட்டில், நிலம் வளமானதாக இருக்காது.” என்ற கருத்தைச் சில சங்க இலக்கியப் பாடல்களிலும் காணலாம். உதாரணமாக, ஆடவர் நல்லவர்களாக இருந்தால் அந்த நாட்டில் நிலம் நல்ல விளைச்சலைத் தரும் என்ற கருத்தைக் கூறும் ஓளவையார் இயற்றிய பாடல்[2] ஒன்று புறநானூற்றில் உள்ளது. ஆடவர்கள் நிலத்தை உழுது, வேளாண்மை செய்வதால், ஒளவையார் தன்னுடைய பாடலில் ஆடவரை மட்டும் குறிப்பிடுகிறார். ஆண்கள் மட்டுமல்லாமல், பொதுவாக, மக்கள் கடினமாக உழைப்பவர்களாகவும் ஆற்றலும் அறிவும் உள்ளவர்களாகவும் இருந்தால் நிலம் நல்ல விளைச்சலைத் தரும் என்றும் நாடு செழிப்பாக இருக்கும் என்றும் இப்பாடலுக்குப் பொருள் கொள்ளலாம். இதுபோல், கலித்தொகையில் உள்ள ஒருபாடல்[3], ”அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் நிலத்தடியில் வள்ளிக்கொடியின் கிழங்கு தோன்றாது; மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது; கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது” என்று கூறுகிறது. மக்கள் கடின உழைப்பும், ஆற்றலும், விடாமுயற்சியும், தங்கள் பணியாற்றும் துறையில் சிறந்தவர்களாகவும் இல்லாவிட்டால் அவர்களுடைய நாடு வளமானதாக இருக்காது என்பது வள்ளுவருடைய கருத்தாகத் தோன்றுகிறது.

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது (குறள் – 236). (பேராசிரியர் மு. வரதராசனார்)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.                   (குறள் – 236)

இந்தக் குறளுக்கு விளக்கம் அளிப்பதில் உரையாசிரியர்களிடம் கருத்து வேற்றுமைகள் காணப்படுகின்றன. உதாரணமாக, “மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.” என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார். பழைய உரையாசிர்கள் சிலரும் இதே கருத்தைத் தம் உரைகளில் குறிப்பிடுகின்றனர். நம்முடைய பிறப்பு நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லை. பிறக்கும்பொழுது எவரும் புகழோடு பிறக்க இயலாது. ஆகவே, “பிறக்கும்பொழுது புகழுக்கு ஏதுவாகிய குணங்களோடு பிறக்க.” என்ற பரிமேலழகர் உரையும் அத்தகைய  கருத்துள்ள உரைகளும் பொருத்தமானவையாகத் தோன்றவில்லை. பல உரைகளையும்விட பேராசிரியர் மு. வரதராசனார் அவர்களின் உரை சிறப்பானதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு செயலைச் செய்வதற்கு ஒருவன் முன்வந்தால், அவன் அந்த செயலைச் செய்வதில் புகழ்பெற்றவனாக இருக்க வேண்டும் என்பது ஏற்புடைய கருத்து. எதிலும் எங்கும் தோன்றுங்கால் புகழுடன் தோன்ற வேண்டும் என்பது  இக்குறள் கூறும் கருத்து. இது போன்ற கருத்து, ஒளவையார் இயற்றிய புறநானூற்றுப் பாடல்[4] ஒன்றிலும் காணப்படுகிறது. அப்பாடலில், “போர் இல்லாதபொழுது, அதியமான் அமைதியானவன். வீட்டு இறப்பிலே செருகிய தீக்கடை கோல் போல தன் ஆற்றல் வெளியே தோன்றாது அமைதியாய் அடங்கி இருக்கும் இயல்பு அதியமானிடம் உண்டு. தன் ஆற்றல் வெளிப்படத் தோன்ற வேண்டுமிடத்து, அவன் அக்கோலால் கடையப்பட்ட சுடர்த்தீப் போல வெளிப்படத் தோன்றவும் செய்வான்.” என்று ஒளவையார் கூறுகிறார். அதாவது, போர் இல்லாதபொழுது அமைதியாக இருக்கும் அதியமான், போருக்குச் செல்லும்பொழுது அதற்குரிய ஆற்றலோடும் புகழோடும் தோன்றுவான் என்று ஒளவையார் கூறுகிறார். ஒளவையார் அதியமானைப்பற்றிக் கூறுவது வள்ளுவரின் குறளோடு ஒத்திருப்பது குறிப்பிடத் தகக்கது.

முடிவுரை
ஈகையால் வரும் புகழைவிட மக்களுக்குப் பயனுள்ளது வேறு எதுவுமில்லை. புகழ்ந்து சொல்கின்றவர்கள் புகழ் என்று சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்களுக்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின்மேல் நிற்கின்ற புகழேயாகும். நிலையில்லாத இவ்வுலகில் உய்ரந்த புகழைத் தவிர நிலைத்து நிற்பது வேறொன்றுமில்லை. தேவருலகம் தேவர்களைப் போற்றாமல், புகழடைந்தவர்களையே போற்றும். புகழ் பெருகப்பெருக தான் கேடுறுவதும் சாவதும் பேராற்றல் மிக்கவர்க்கே இயலும். புகழோடு வாழாதவர்கள் பிறரை நொந்துகொள்ளாமல் தன்னையே நொந்துகொள்ள வேண்டும். ஒருவன் இறந்த பிறகு, அவனுடைய புகழ் அவனை எஞ்சி நிற்க வேண்டும். அத்தகைய புகழ் பெறாதவர்களுக்கு அது ஒரு பழியாகும். பழியின்றிப் புகழோடு வாழ்பவர்களே உண்மையிலே வாழ்பவர்கள். புகழ் இல்லாதவர்களைத் தாங்கி நிற்கும் நிலம் தன் வளத்தை இழக்கும். ஒரு செயலைச் செய்ய முன்வந்தால் அதற்குரிய புகழோடு வர வேண்டும். அத்தகைய புகழ் இல்லாவிட்டால், அச்செயலைச் செய்ய முன்வராமல் இருப்பது நல்லது.

துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 1). காவ்யா பதிப்பகம், சென்னை
________________. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 2). காவ்யா பதிப்பகம், சென்னை
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502



[1] . கடந்துஅடு தானை மூவிரும் கூடி
 உடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே
 முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
 முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
 யாமும் பாரியும் உளமே;                                              5
 குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.    (கபிலர், புறநானூறு – 110)

அருஞ்சொற்பொருள் : 1. கடந்து அடுதல் = வஞ்சியாது எதிர் நின்று போரிடுதல்; தானை = படை. 2. உடன்றல் = போரிடுதல். 3. தண் = குளிர்ந்த.

[2]. நாடா கொன்றோ; காடா கொன்றோ;
     அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
     எவ்வழி நல்லவர் ஆடவர்,
     அவ்வழி நல்லை ; வாழிய நிலனே! (ஒளவையார், புறநானூறு – 187)

[3] . . . . . வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;     
(கபிலர், கலித்தொகை – 39, 12-14)
[4]. . . . . இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போல
தோன்றாது இருக்கவும் வல்லன், மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங் காலே. (ஒளவையார், புறநானூறு 315)

(இல்இறை – வீட்டு இறப்பு; செரீஇய – செருகிய; ஞெலிகோல் – தீக்கடை கோல்; கான்றல் – வெளிப்படுத்துதல்; கனை எரி – கப்பி எரியும் தீ)



Sunday, April 19, 2020

அழுக்காறு இலாத இயல்பு


அழுக்காறு இலாத இயல்பு

இன்றைய சமுதாயத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகளை அடைந்திருக்கிறோம். அதே நேரத்தில், சில தீமைகளையும் சந்திக்கிறோம். உதாரணமாக, முகநூல் (Facebook), படவரி (Instagram), கீச்சகம் (Tweeter) போன்ற சமூக வலைத்தளங்களில் (சமூக வலைத்தளம் - Social Media) பலரும் தங்களுடைய புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிடுகிறார்கள். மற்றும், அவர்கள் விடுமுறைக்குச் சென்றபொழுதும் நண்பர்களோடு கூடிக் களித்தபொழுதும் எடுத்த புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவு செய்கிறார்கள். இவற்றைக் காண்பவர்களில் பலர், தாமும் அவர்களைப்போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையே என்று பொறாமை அடைகிறார்கள். தொடர்ந்து சமூக வலைத்தளங்களைப் பார்ப்பவர்களில் சிலர் பொறாமையால் மனவழுத்தம் அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்[1].
பிறருடைய வளர்ச்சி, முன்னேற்றம், செல்வம், செல்வாக்கு, புகழ், நல்வாழ்வு போன்றவற்றைக் கண்டு பொறுக்க முடியாமல், தனக்கு அவை இல்லையே என்று வருந்துவோர் பலர். அவ்வாறு அவர்கள் வருந்துவது பொறாமை என்று அழைக்கப்படுகிறது. பொறாமையால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. பிறருடைய நல்வாழ்வைக் கண்டு, தானும் அது போன்ற வாழ்க்கைக்கு வழி தேடவேண்டும் என்று தீவிரமாக எண்ணி, ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் உழைத்து முன்னேறுவது பொறாமையால் வரக்கூடிய நன்மை. பிறருடைய நல்வாழ்வைக் கண்டு மனம் வருந்தி, மனம் தளர்ந்து, முயற்சிகளைக் கைவிட்டு, வாழ்க்கையில் தோல்வி அடைந்து மனவழுத்தம் போன்ற நோய்களால் துன்பப்படுவது பொறாமை உடையவர்கள் அடையக்கூடிய தீமை. அவர்கள் தீமை அடைவது மட்டுமல்லாமல், பிறரும் நல்வாழ்வை இழந்து துன்பப்பட வேண்டும் என்று எண்ணுவதும், சில சமயங்களில் அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதும் ஒருவருடைய பொறாமையால் பிறர்க்கு வரக்கூடிய தீமைகளாகும்.  பொறாமையால் துன்பப்படுபவர்களின் எண்ணிக்கை, பொறாமையால் நன்மை அடைபவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று கருதப்படுகிறது. சிலர் பொறாமையால் நன்மை அடைந்தாலும், பொறாமை ஒரு தீயொழுக்கமாகவே கருதப்படுகிறது. பல மதங்களும் பொறாமையை தியொழுக்கமாகவே கருதுகின்றன.

ஆதாமுக்கும்(Adam) ஏவாளுக்கும்(Eve) பிறந்த மூத்த மகனாகிய கேய்ன்(Cain) என்பவன் தன்னுடைய தம்பியாகிய எபெல் (Abel) என்பவன்மீது பொறாமைகொண்டு அவனைக் கொன்றதற்காகக் கடவுளால் தண்டிக்கப்பட்டான் என்று விவிலியம் கூறுகிறது. கிறித்துவ மதத்தின் பெரும்பிரிவாகிய கத்தோலிக்க மதம் பொறாமையை ஏழு கொடிய பாவங்களில் ஒன்றாகக் கருதுகிறது. இந்து மதத்தின் மிகப்பெரிய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கௌரவர்களுக்குப் பாண்டவர்களின்மீது இருந்த பொறாமையால் எழுந்த போரைப்பற்றி விரிவாகப் பேசுகிறது. புத்த மதம் ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்று கூறுகிறது. பொறாமையும் ஆசையின் அடிப்படையில் தோன்றுவதால், புத்த மதமும் பொறாமையை ஒரு தீயொழுக்கமாகவே கருதுவதாகத் தோன்றுகிறது. முகமது நபி அவர்கள், ”பொறாமையை விட்டுவிடுங்கள். அது நெருப்பு விறகைத் தின்பதைப்போல் நன்மைகளை எல்லாம் அழித்துவிடும்.” என்று மக்களை எச்சரிப்பாதாக திருகுர்ரான் கூறுகிறது.

பிறருடைய நல்வாழ்வைக் காணும்பொழுது, “அவை தனக்கு வேண்டும்” என்று ஒருவன் எண்ணுவதால் அவனுக்குத் துன்பம் ஏற்படுகிறது என்றும் அத்தகைய துன்பம் அவனுக்குப் பொறாமை என்னும் மனவலியை உண்டுபண்ணுகிறது என்றும் கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் (Aristotle (384 B.C. – 322 B.C.)) கூறுகிறார். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (Bertrand Russell (1872 A.D – 1970 A.D.)) என்ற இங்கிலாந்தைச் சார்ந்த பேரறிஞர், “ஒருவருடைய மகிழ்ச்சியின்மைக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய பொறாமை என்னும் இயல்புதான்.” என்று கூறுகிறார்.

மதங்களையும், மற்ற அறிஞர்களையும்போல், வள்ளுவரும், பொறாமையை ஒரு தீயொழுக்கமாகவும் அறத்திற்கு முற்றிலும் புறம்பானதாகவும் கருதுகிறார். “மனத்துக்கண் மாசிலானதல் அனைத்து அறன் (குறள் – 34)“ என்று அறத்திற்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், பொறாமை ஒரு மனமாசு என்று கூறுகிறார். மாசுக்கு மற்றொரு பெயர் அழுக்கு. ஆகவே, பொறாமையை ஒரு அழுக்கு என்றும், பொறாமையோடு இருப்பதை அழக்குறுதல் என்றும் கூறலாம். ”’அழுக்குறு’ என்பது மருவி, ’அழுக்கறு’ என்று ஆகியது என்றும், அழுக்கறு என்பது நீண்டு அழுக்காறு ஆயிற்று.”, என்றும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார். தமிழ் இலக்கியத்தில், அழுக்காறு என்ற சொல் பொறாமையையும் அழுக்காறாமை என்ற சொல் பொறாமையில்லாமல் இருப்பதையும் குறிக்கும் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. வள்ளுவரும் பொறாமை என்ற சொல்லுக்குப் பதிலாக, அழுக்காறு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். மனத்தில் இருக்கக்கூடிய மாசுகளில் அழுக்காறு, அவா, வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கும் முற்றிலும் விலக்கப்பட வேண்டியவை என்று கூறும்பொழுது, அழுக்காறு (பொறாமை) என்னும் மாசை வள்ளுவர் முதலில் குறிப்பிடுகிறார்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.                      (குறள் – 35)

அழுக்காறு உடையவனின் செயல்கள்
ஆக்கம் என்ற சொல், வளர்ச்சி, முன்னேற்றம், இலாபம், பொன், பொருள், செல்வம், மேம்பாடு, நல்வாழ்வு, வளம், மற்றும் பேறு போன்ற பலவற்றைக் குறிக்கும் ஒருசொல். அறநெறிகளைப் பின்பற்றி வாழ்வதால் வரும் ஆக்கத்தை வேண்டாதவன் என்று சொல்லப்படுபவன் பிறருடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமால் பொறாமை அடைவான் (குறள் -163).

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.                   (குறள் –163)


தனிமனிதர்கள் மட்டுமல்லாமல், ஒரு குழு, கட்சி, இனம் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் தங்கள் குழு, கட்சி, இனம் ஆகியவற்றிற்குப் போட்டியாக இருப்பவர்கள்மீது பொறாமைகொண்டு அவர்களுக்குத் தீமைகள் வரவேண்டும் என்று விரும்புவதும், அவர்களுக்குத் தீமைகளைச் செய்வதும் உலக இயல்பாக நாம் காண்கிறோம். உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் இருந்த யூதர்களின் வளமான வாழ்க்கையைக் கண்டு, யூதர் அல்லாதவர்கள் பொறாமை அடைந்தனர். அவர்களின் பொறாமையைத் தனக்குச் சாதகமாகக்கொண்டு அடால்ஃப் ஹிட்ளர் (Adolf Hitler) இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தான் என்பது வரலாறு.

பொறாமையால் வரும் தீமைகள்
அறம் அல்லாத தீயநெறிகளைப் பின்பற்றுவதால் துன்பம் தோன்றும் என்பதை அறிந்தவர்கள், அழுக்காறு கொண்டு அறம் அல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள் (குறள் – 164). பகைவர்கள் கேடு செய்யத் தவறினும், பொறாமை உடையவர்களுக்குப் பொறாமை ஒன்றே போதுமானது; அவர்களுக்கு வேறு பகைவர்கள் வேண்டியதில்லை (குறள் – 165). மற்றவர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவன் தானும் கேடடைவதோடு மட்டுமல்லாமல், அவனுடைய சுற்றத்தாரும் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் கெடுவர் (குறள் – 166). மனக்கோட்டத்தோடு பொறாமை கொள்பவனைத் திருமகள் தன் தமக்கையாகிய மூதேவியிடம் காட்டிவிட்டுத் தான் நீங்கிவிடுவாள் (குறள் – 167). அழுக்காறு என்னும் கொடியவன் (பாவி), தன்னை உடைவனுடைய செல்வத்தை அழித்து அவனைத் தீயவழிகளில் செலுத்திவிடுவான் (குறள் – 168).

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.                        (குறள் – 164)

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.                         (குறள் – 165)

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.               (குறள் – 166)

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.                   (குறள் – 167)

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.                              (குறள் – 168)

ஒருவன் பிறர்க்குப் பொருள்களைக் கொடுத்து உதவி செய்வதைக் கண்டு மற்றொருவன் பொறாமை அடைந்தால், பொறாமை அடைபவனும் அவனுடைய சுற்றத்தாரும் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் கெடுவர் என்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. பொறாமையால் விளையும் தீமைகளை மிகைப்படுத்திக் கூறினால், மக்கள் பொறாமை அடையாமல் இருப்பார்கள் என்ற நோக்கத்தோடு வள்ளுவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அடுத்த குறளில், அழுக்காறு உடையவனைத் திருமகள் மூதேவியிடம் செலுத்திவிடுவாள் என்பது அழுக்காறு உடையவன் வறுமை அடைவான் என்பதைக் குறிக்கிறது. இந்தக் குறளிலும், முந்தைய குறளைப்போல், அழுக்காற்றினால் விளையும் தீமைகளை மிகைப்படுத்திக்கூறி, அழக்காறு ஒரு தீயொழுக்கம் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். அடுத்த குறளில், அழுக்காறு என்னும் கொடியவன் (பாவி) தன்னை உடையவனின் செல்வத்தை அழித்து, அவனைத் தீயவழிகளில் செலுத்திவிடும் என்பதும், அழக்காறு ஒரு தீயொழுக்கம் என்பதை வலியுறுத்துவதற்காகவே கூறப்பட்டதாகப் பொருள்கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.

அழுக்காறு உடைவனின் கேடும் அழுக்காறு இல்லாதவனின் ஆக்கமும்
பொறாமையோடு இருப்பவன் வாழ்க்கையில் வளர்ச்சி அடைந்ததில்லை. பொறாமை இல்லாதவன் தன் வள்ரச்சியில் குறைந்ததும் இல்லை (குறள் – 170). இங்கு வளர்ச்சி என்பது செல்வம், செல்வாக்கு, பெருமை, முன்னேற்றம் போன்றவற்றில் எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால், சில சமயங்களில் பொறாமை உடையவர்கள் பல நன்மைகளை அடைவதையும், பொறாமை இல்லாதவர்கள் பல கேடுகளை அடைவதையும் நாம் காண்கிறோம். இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்னவென்று ஆராயவேண்டும் என்கிறார் வள்ளுவர் (குறள் – 169).

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.               (குறள் – 170)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.                       (குறள் – 169)

”அழுக்காறு உடையவன் வறுமை அடைவான்,”  ”அழுக்காறு உடையவன் வாழ்க்கையில் முன்னேறமாட்டான்”, ”அழுக்காறு இல்லாதவன் செல்வந்தனாக இருப்பான்.”, ”அழுக்காறு இல்லாதவன் வாழ்க்கையில் முன்னேறுவான்” போன்ற கருத்துக்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை. இவை அறிவியல் கூறும் கருத்துக்களைப் போல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைகளும் அல்ல. இது போன்ற கருத்துக்கள் வெறும் நம்பிக்கைகள்தான். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உள்ளதுபோல், எல்லா நம்பிக்கைகளும் எல்லா சூழ்நிலைகளிலும் சரியானவை என்று கூறமுடியாது. அழுக்காறு உடையவன் தன்னுடைய அயராத உழைப்பு, முயற்சி, அறிவு, ஆற்றல் போன்றவற்றால் வாழ்க்கையில் முன்னேறலாம். அழுக்காறு இல்லாதவன் அயராத உழைப்பு, முயற்சி, அறிவு, ஆற்றல் போன்றவை இல்லாததால் வாழ்க்கையில் முன்னேறாமல் இருக்கலாம். வள்ளுவர் இதை அறியாதவர் இல்லை. அதனால்தான், அழுக்காறு உடையவனின் வளர்ச்சியும் அழுக்காறு இல்லாதவனின் வளர்ச்சியின்மையும் ஆராயத் தக்கவை என்றார்.

அழுக்காறு இலாத இயல்பு
எவரிடத்தும் பொறாமையில்லாமல் ஒருவன் இருப்பானாயின், அவன் பெறும் சிறந்த சிறப்புக்களில் அதைப் போன்றது வேறு எதுவும் இல்லை (குறள் – 162). ஒருவன் அழுக்காறு இல்லாத தன்மையை தன்னுடைய இயல்பாகக் கொள்ள வேண்டும் (குறள் – 161).

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.  (குறள் – 162)

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.           (குறள் – 161)

அழுக்காறு இல்லாமல் இருப்பதால் பல நன்மைகள் இருப்பதால், அதை ஒருவன் தன்னுடைய இயல்பாகக் கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.

முடிவுரை
அழுக்காறு என்ற சொல் பொறாமையையும், அழுக்காறாமை என்ற சொல் பொறாமையின்மையையும் குறிக்கின்றன. மனத்தின் மாசுக்களில் அழுக்காறும் ஒன்று என்றும், அழுக்காறு அறத்திற்கு முற்றிலும் புறம்பானது என்றும் வள்ளுவர் கூறுகிறார், ”அழுக்காறு உடையவர்கள் பிறருடைய நல்வாழ்க்கையைக் கண்டு மகிழமாட்டார்கள். அழுக்காறு உடையவர்களுக்குப் பகைவர்களே தேவையில்லை. பகைவர்களால் வரும் கேடுகள் அனைத்தையும் பொறாமையாலேயே அவர்கள் அடைவார்கள்.  அழுக்காறு உடைவர்களும் அவர்களுடைய சுற்றத்தாரும் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் துன்பப்படுவார்கள். அழுக்காறு உடையவன் வறுமையில் வாடுவான்; அழுக்காறு அவனைத் தீயவழிகளில் செலுத்திவிடும்.”, என்ற கருத்துக்களை அழுக்காறாமை என்ற அதிகாரத்தில் காண்கிறோம்.  பொதுவாக, அழுக்காறு உடையவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதில்லை என்றும் அழுக்காறு இல்லாதவர்கள் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதில்லை என்றும் கருதப்பட்டாலும், சில சமயங்களில் அழுக்காறு உடையவர்கள் வளமாக வாழ்வதையும் அழுக்காறு இல்லாதவர்கள் அத்தகைய வாழ்க்கை இல்லாதவர்களாக இருப்பதையும் கண்டு வியந்த வள்ளுவர், அவை ஆய்வுக்குரியவை என்கிறார்.

துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502

Saturday, April 11, 2020

அடக்கம் அமரருள் உய்க்கும்


அடக்கம் அமரருள் உய்க்கும்

இவ்வுலகில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ளார்கள். இருபத்தி நான்கு கோடி மக்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமைகளாக (குடிகாரர்களாக) உள்ளார்கள்[1]. ஏறத்தாழ மூன்றரை கோடி மக்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தித் தங்கள் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் கேடு விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள்[2]. பலரும் கைப்பேசி இல்லாமல் ஒரு சில மணித்துளிகள்கூட இருப்பதில்லை. இளைஞர்கள் கைப்பேசியில் அல்லது கணினியில் வன்முறைகள் நிறைந்த விளையாட்டுக்களில் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். ஏறத்தாழ 200 கோடி மக்கள் அதிக எடை(overweight) உள்ளவர்களாகவும், அதில் 70 கோடி மக்கள் மிக அதிகமான எடை (obese) உள்ளவர்களாகவும் காணப்படுகிறார்கள்[3]. எடை அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அளவுக்குமீறி உண்பதும் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை மட்டுமல்லாமல், பல்வேறு தீயொழுக்கங்களை விட்டு விலக முடியாமல், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நேரத்தையும், செல்வத்தையும் செலவுசெய்து தமக்குத் தாமே கேடு விளைவித்துக்கொள்கிறார்கள். இது போன்ற செயல்களுக்குக் காரணம் அவர்களால் தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதுதான். நமது மனத்தில் உள்ள எண்ணங்கள்தான் நமது சொற்களாகவும் செயல்களாகவும் வெளிப்படுகின்றன. கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐம்பொறிகளின் வழியாக இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தோன்றுவதால்தான் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருட்களை உட்கொள்ளுதல், தேவைக்கும் அதிகமாக உண்ணுதல், காமவின்பத்தை அதிகமாக நுகர்தல்  போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுகிறார்கள்; மனத்தில் கோபம் தோன்றுவதால்தான் கடுங்சொற்களைக் கூறுகிறார்கள். மற்றும், மனத்தின் தூண்டுதலால்தான் மக்கள் பயனற்ற சொற்களைக் கூறுகிறார்கள்; புறங்கூறுகிறாரகள்; பொய் பேசுகிறார்கள். தீய செயல்களைச் செய்வதற்கும் மனம்தான் காரணம். இது போன்ற புலனடக்கமின்மை, தீய சொற்கள் பேசுதல், தீய செயல்களைச் செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டுமென்றால் மனத்தை அடக்க வேண்டும். மனத்தை மனத்தால் மட்டுமே அடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில், புலனடக்கம், நாவடக்கம், மெய்யடக்கம், மனவடக்கம் ஆகியவற்றைப் பற்றியும், அத்தகைய அடக்கத்தினால் வரும் நன்மைகளைப் பற்றியும் வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார்.

புலனடக்கம்
ஒரு இடரை எதிர்கொள்ள நேர்ந்தால், ஆமை தன்னுடைய நான்கு கால்களையும் தலையையும் உள்ளே இழுத்துக்கொள்வதைப் போல், ஒருவன்  ஒருபிறவியில் தன்னுடைய ஐம்பொறிகளையும் அடக்கிக்கொள்வானாயின், அது அவனுக்கு பின்வரும் ஏழுபிறவிகளிலும் பாதுகாவலாக இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 126).

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு டைத்து.                       (குறள் – 126)

வள்ளுவர் பல குறட்பாக்களில் ”மறுமை”, ”எழுமை” போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருப்பதால், உயிர் மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது. சிலருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்கள், “எழுமை” என்பதற்கு நீண்டகாலம் அல்லது ஏழு தலைமுறைகள் என்று பொருள்கொள்கிறார்கள். மறுமை, எழுமை போன்றவற்றில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஐம்பொறிகளை அடக்கிக்கொள்வதால் அவற்றால் வரும் தீமைகளைத் தவிர்க்கலாம் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஒருவன் தன்னுடைய கண், காது, மூக்கு ஆகியவற்றைத் தவறான முறையில் பயன்படுத்துவதால் தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொள்ள முடியும். ஆனால், அவற்றால் பிறர்க்குத் தீமைகளைச் செய்ய முடியாது. நாவாலும் உடலாலும் மட்டுமே பிறர்க்குத் தீமைகளைச் செய்ய முடியும். கடுஞ்சொற்களைக் கூறுதல், புறங்கூறுதல், பயனில சொல்லுதல், பொய் பேசுதல் ஆகிய செயல்களால் ஒருவன் பிறர் மனத்தைப் புண்படுத்த முடியும்; துன்புறுத்த முடியும். அதனால், ஒருவன் தான் பேசும் சொற்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொற்கள் நாவின் அசைவினால் வருவதால், சொற்களால் வரும் தீமைகளை நாவால் வரும் தீமைகள் என்று கருதுவது மரபு. சொற்களால் வரும் குற்றங்களை இனியவை கூறல், பயனில கூறாமை, புறங்கூறாமை, வாய்மை ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நாவடக்கம்
”பிறர் கூறும் இன்சொற்களால் தனக்கு இன்பம் பிறத்தலை அறிந்தவன் ஏன் பிறரிடத்து கடுஞ்சொற்களைப் பேசுகிறான்? (குறள் – 99[4])” என்று கேட்கிறார் வள்ளுவர். அனைவரும் இன்சொற்களையே பேச வேண்டும் என்பதும், மன்னனாக இருந்தால்கூட கடுஞ்சொல்லனாக இல்லாமல் இருப்பதுவே சிறந்தது என்பதும் வள்ளுவரின் கருத்து (குறள் – 386[5]). ஒருவனது உடலில் தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். ஆனால், பிறர் அவனை நோக்கிக் கூறும் கடுஞ்சொற்கள் அவனுடைய மனத்தில் ஒரு வடுபோல், ஆறாமல், எப்பொழுதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும் (குறள் – 129). ஒருவனுடைய பேச்சில் ஒரு சொல் தீயசொல்லாக இருந்தாலுங்கூட, அது அவனுடைய பேச்சு முழுவதையும்  நன்மை இல்லாததாக்கிவிடும் (குறள் – 128). தீயசொற்கள் பெரும் தீமைகளை உண்டாக்குவதால், ஐம்பொறிகளில் மற்றவற்றை, காக்காவிட்டாலும், நாவையாவது காக்கவேண்டும். நாவைக் காக்க விட்டால் சொற்குற்றத்தால் துன்புறுவர் (குறள் - 127) என்கிறார் வள்ளுவர்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.                                  (குறள் – 129)

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.                                 (குறள் – 128)

யாகாவார் யினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.                (குறள் – 127)

நாவுக்கு எதையும் தானாகப் பேசும் ஆற்றல் இல்லை. மனத்தின் தூண்டுதலால்தான் நாவும் மற்ற பொறிகளும் இயங்குகின்றன. ஆகவே, மனவடக்கம் இருந்தால்தான்  நாவடக்கம் இருக்க முடியும்.

மெய்யடக்கம்
நாவடக்கத்தைப் போல் மெய்யடக்கமும் தேவை. ஒருவருக்கு மெய்யடக்கம் இல்லாவிட்டால் அவர் தன்னுடைய  உடலால் பிறர்க்கு தீமைகளைச் செய்யமுடியும். தீவினைகளைச் செய்வதால் தீமையே விளையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர் வள்ளுவர். தீவினைகளால் வரும் துன்பங்களைத் தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார். மனவடக்கம் இருந்தால்தான் மெய்யடக்கமும் இருக்கும். ஆகவே, நாவடக்கத்திற்கும் மெய்யடக்கத்திற்கும் மனவடக்கம் இன்றியமையாது என்பது தெளிவு.

மனவடக்கம்
மனவடக்கத்தைக் கடைப்பிடித்து, மனத்தில் சினம் தோன்றாமல் ஒழுகுபவனைக் காண்பதற்கேற்ற சமயத்தை எதிர்பார்த்து, அவன் வழியில் அறம் நிற்கும் என்கிறார் வள்ளுவர்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.                (குறள் – 130)

அறம் என்பது மனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களின் தொகுதி. அறத்திற்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், “மனத்தில் மாசில்லாமல் இருப்பதே அறம்.” என்கிறார். அவ்வாறாயின், சினத்தை அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணத் தக்க சமயம் பார்த்து அவன் வழியில் அறம் நுழைந்து எதிர் நோக்கும் என்பது எங்ஙனம் பொருந்தும் என்ற கேள்வி எழுகிறது. இந்தக் குறளில் வள்ளுவர் அறத்தை ஒரு தனித்து இயங்கும் ஆற்றலாக (அறக்கடவுளாக) உருவகப்படுத்துகிறார். இந்தக் குறளில் மட்டுமல்லாமல் வேறு பல குறட்பாக்களிலும், வள்ளுவர் அறத்தைத் தனித்து இயங்கும் ஆற்றலாக (அறக்கடவுளாக) உருவகப்படுத்துகிறார். எலும்பு இல்லாத உடலோடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதைப் போல, அன்பு இல்லாத உயிரை அறம் என்னும் ஆற்றல் (அறக்கடவுள்) வருத்தும் (குறள் – 77[6]) என்று அன்புடைமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார். மற்றும், பிறர்க்குக் கேடு விளைவிக்கும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது என்றும் அவ்வாறு எண்ணினால், தீமை செய்ய நினைத்தவனுக்கு அறமென்னும் ஆற்றல் (அறக்கடவுள்) தீமைசெய்ய நினைக்கும் (குறள் – 204[7]) என்றும் தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் கூறுகிறார். உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களும் தீமை செய்பவர்களும் தீமைகளைச் சந்திப்பது உறுதி என்பதை வலியுறுத்துவதற்காக வள்ளுவர் அறத்தைத் தனித்து இயங்கும் ஆற்றலாக (அறக்கடவுளாக) உருவகிக்கிறார் என்று கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. 

அடக்கமுடைமையால் வரும் நன்மைகள்
அடக்கமுடைமை ஒருவனை தேவருலகிற்குக் கொண்டு செலுத்தும். அடக்கமின்மை வெளிவருதற்கரிய இருள் சூழ்ந்த உலகத்திற்குச் செலுத்திவிடும் (குறள் – 121). ”அடக்கமுடைமையை ஒரு செல்வமாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு அதைவிடச் சிறந்த செல்வம் வேறெதுவும் இல்லை (குறள் – 122).”, என்கிறார் வள்ளுவர். ஒருவன் அறியவேண்டியதை அறிந்து, முறையோடு அடக்கத்தோடு நடப்பானாயின் அவனுடைய அடக்கம் பிறரால் உணரப்பட்டு மேன்மை உண்டாகும் (குறள் – 123). தனது நிலையிலிருந்து மாறாமல், அடக்கத்தோடு இருப்பவனின் உயர்வு மலையைவிடப் பெரிது (குறள் - 124).

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.                           (குறள் – 121)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு ல்லை உயிர்க்கு.                (குறள் – 122)

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.                           (குறள் – 123)

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.                         (குறள் – 124)

”அடக்கம் தேவருலகிற்குக் கொண்டு செலுத்தும்”, “அடக்கம் ஒரு சிறந்த செல்வம்”, ”அடக்கம்  பிறரால் உணரப்பட்டு மேன்மை உண்டாகும்”, “அடக்கமுடையவனின் உயர்வு மலையைவிடப் பெரிது” என்று அடக்கத்தின் பெருமையை மிகைப்படுத்திக் கூறி, அதன் இன்றியமையாமையையும், அதனால் வரும் நன்மைகளையும் எடுத்துரைத்து அடக்கத்தோடு இருப்பதற்கு வள்ளுவர் மக்களை ஊக்குவிக்கிறார்.

அடக்கம் செல்வர்க்குச் செல்வம்
அடக்கத்தினால் வரும் பணிவு என்னும் பண்பால் அனைவருக்கும் பல நன்மைகள் உண்டு என்று வள்ளுவர் கூறுகிறார். குறிப்பாக, செல்வம் உடையவர்களுக்கு மனவடக்கத்தோடு, பணிவும் இருக்குமானால், அதுவே ஒரு செல்வத்தைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.                (குறள் – 125)

எல்லோராலும் மதிக்கப்படும் இயல்பும், நினைத்ததைச் செய்து முடிக்கும் திறமையும், ஆடம்பரமான வாழ்க்கையும் உடைய செல்வந்தர்களுக்கு பணிவு என்பது இயற்கையாக அமைவதில்லை. அவர்களுக்கு பணிவு என்னும் பண்பு இருந்தால் அது அவர்களுக்கு மற்றும் ஒரு செல்வத்தைப் போன்றது என்பது வள்ளுவரின் கருத்து.

வள்ளுவர் கூறுவதைப் போல், பணிவு என்பது, செல்வந்தர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஏற்ற உயர்ந்த பண்பு. குறிப்பாக, ஆட்சியில் இருப்பவர்களுக்கும் பணிவு என்னும் பண்பு மிகவும் இன்றியமையாத ஒன்று. அமெரிக்காவில், பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடத்தும் பணியில் நான் ஈடுபட்டிருந்தபொழுது, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டிற்கு வருமாறு அவரை அழைப்பதற்காக நான் டில்லிக்குச் சென்று, அவரைச் சந்தித்தேன்.  அவர் வீற்றிருந்த அறைக்குள் நான் சென்றபொழுது, அவர் எழுந்து நின்று எனக்கு வணக்கம் தெரிவித்தார். மாநாட்டைப் பற்றிய விவரங்களைப் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். மாநாட்டிற்கு அவர் வருவதைப் பற்றி இரண்டு வாரங்களில் எனக்குத் தெரிவிப்பதாகக் கூறினார். நான் அவரிடமிருந்து விடைபெற்றபொழுது, அவர் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். மாநாட்டிற்கு அவரால் வர இயலவில்லை. ஆனால், மாநாட்டிற்காகக் காணொளியில் வாழ்த்துரையைப் பதிவு செய்து இணையத்தின் வழியாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார். அவருடைய  பணிவான பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் பணிவுக்கும் பண்புக்கும் இலக்கணமாக வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முடிவுரை
புலனடக்கமும், நாவடக்கமும், மெய்யடக்கமும், மனவடக்கமும் இல்லாதால் விளையும் தீமைகளையும், அவை இருப்பதால் வரும் நன்மைகளையும் கூறுவதோடு மட்டுமல்லாமல் மனவடக்கத்தின் இன்றியமையாமையையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். வள்ளுவரைப் போல் சில மேலைநாட்டு அறிஞர்களும் மனவடக்கத்தைப் போற்றுகிறார்கள். உதாரணமாக, அரிஸ்டாட்டில் (385 கி.மு. – 323 கி.மு.) என்ற கிரேக்கத் தத்துவஞானி, “என்னுடைய கருத்தில், எவனொருவன் தன்னுடைய விருப்பங்களின்மீது வெற்றி காண்கிறானோ அவன் தன்னுடைய பகைவர்களை வெல்பவனைவிடத் துணிச்சலானவன்.” என்று கூறி, மனவடக்கத்தின் சிறப்பைப் புகழ்கிறார். ரோமாபுரியின்  மன்னனாக விளங்கிய தத்துதுவஞானி, மார்க்கஸ் அரேலியஸ் (121 கி.பி. – 180 கி.பி) என்பவன், ”உன்னுடைய மனத்தை அடக்கி ஆளும் ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பதை நீ அறிந்தால், நீ உன்னுடைய வலிமையை உணர்வாய்” என்று கூறியதும் குறிப்பிடத் தக்கது.

துணை நூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா
வளாகம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,
சென்னை, 600 017
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால் (உரையும் உரைவும்), தமிழ்ச்சோலை, 5 மூன்றாம்
தெற்குத் தெரு, மதுரை 625021


[4] . இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?            (குறள் – 99)
[5]. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.           (குறள் – 386)

[6]. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.                (குறள் – 77)
[7]. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.     (குறள் – 204)