Statcounter

Wednesday, October 28, 2020

களவொழுக்கம்

 

களவொழுக்கம்

 

முன்னுரை

சங்க காலத்திலும் அதற்கு முன்பும், திருமணமாகாத ஆணும் பெண்ணும் தற்செயலாக ஓரிடத்தில் சந்தித்து, தங்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதல்கொள்வது களவொழுக்கம் என்று அழைக்கப்பட்டது. பெற்றோரின் சம்மதத்தோடு அவர்கள் திருமணம் செய்துகொண்டு, கணவன் மனைவியாகக் குடும்ப வாழ்க்கை நடத்துவது கற்பொழுக்கம் என்று அழைக்கப்பட்டது. களவொழுக்கத்தில் தொடங்கிய காதலர்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் சம்மதிக்காவிட்டால், அவர்கள் தங்கள் ஊரைவிட்டு வெளியேறி, தாமாகவே பலர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்வதும் வழக்கிலிருந்தது. பொதுவாக, களவொழுக்கம் கற்பொழுக்கத்தில் முடிய வேண்டும் என்பது தமிழரின் வாழ்க்கை முறையாக இருந்தது. களவொழுக்கத்தில் ஈடுபடாமல், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டு கற்பொழுக்கத்தில் வாழ்வதும் வழக்கிலிருந்தது. காதல் வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும் ஆணும் பெண்ணும் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால்அவை அகப்பொருள் எனப்படும்அகப்பொருளைப் பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும்காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர்வீரம்வெற்றிபுகழ்கொடைநிலையாமை முதலிய பொருட்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும்.

 

அகத்திணைப் பாடல்களையும் புறத்திணைப் பாடல்களையும் எப்படி எழுத வேண்டும் என்பதைப் பற்றி பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம், பொருளதிகாரம் என்ற பிரிவில் விரிவாகக் கூறுகிறது. அகத்திணைப் பாடல்களில் காதலர்களின் (அல்லது கணவன் மனைவி) வாழ்க்கையில் நிகழும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல் மற்றும் ஊடல் என்னும் ஐந்து வகையான நிகழ்வுகளில் ஏதாவது ஒன்று  மையக் கருத்தாக  இருக்க வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

புணர்தல் என்பதற்கு கூடுதல் அல்லது சேர்தல் என்று பொருள். இது இயற்கைப் புணர்ச்சி, உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என்று மூன்று வகைப்படும். இயற்கைப் புணர்ச்சி என்பது ஒரு ஆணும் பெண்ணும் ஊழ்வினைப் பயனால் சந்தித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்பார்வையினால் தம் விருப்பத்தைப் பரிமாறிக் கொள்வது. பின்னர் ஒருவரோடு ஒருவர் பழக ஆரம்பித்து உள்ளம் ஒருமிப்பது உள்ளப் புணர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. உள்ளப் புணர்ச்சிக்குப் பிறகு, காதலன் காதலியின் உடலைத் தொடுதல், கூந்தலைத் தடவுதல், தோளைத் தழுவுதல் போன்ற செயல்களைச் செய்து காதலியிடம் தன் அன்பை வெளிப்படுத்துவதற்குப் பெயர் மெய்யுறு புணர்ச்சி.  திருமணமாகாத ஆணும் பெண்ணும் மெய்யுறு புணர்ச்சியில் ஈடுபட்டாலும், அவர்களிடையே உடலுறு புணர்ச்சி (உடலால் ஒன்றுகூடி மகிழ்தல்) இருந்ததாக சங்க இலக்கியத்தின் அகத்திணைப் பாடல்களில் எந்தக் குறிப்பும் இல்லை என்பது பல தமிழறிஞர்களின் உறுதியான கருத்து. மூதறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் சங்க இலக்கியத்தின் அகத்திணைப் பாடல்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, ஆழ்ந்த ஆராய்ச்சி செய்துதமிழ்க் காதல்என்ற ஒரு நூலை இயற்றியுள்ளார். அந்த நூலில்[1] சங்க காலத்தில் காதலர்களிடையே, உடலுறவு இல்லை என்று கூறும் அறிஞர்களின் கருத்தை அவர் மறுக்கிறார். சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களை நடுநிலையில் இருந்து ஆராய்ந்தால், சங்க காலத்தில், திருமணமாகாத காதலர்களிடையே உடலுறவு இருந்திருக்கலாம் என்று பொருள்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பது அவர் கருத்து.

பிரிதல்  என்பது, களவொழுக்கத்தில் காதலன் தன் காதலியைவிட்டுத் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் பிரிவதையும், கற்பொழுக்கத்தில் கணவன், பொருளுக்காகவும், போருக்காகவும், கல்விக்காகவும், அரசன் ஏவிய பணிகளுக்காகவும், பரத்தையோடு தொடர்பு கொள்வதற்காகவும் தன் மனைவியை விட்டுப் பிரிவதையும்  குறிக்கிறது. பிரிதல் என்பது தலைவன் தலைவியைவிட்டுச் சில மாதங்கள் பிரிந்திருப்பதைக் குறிக்கிறதே ஒழிய நிரந்தரமான பிரிவைப் பற்றியது அன்று. எல்லாச் சூழ்நிலைகளிலும் பிரிந்தவர் மீண்டும் கூடுவது இலக்கிய மரபு.  .

இருத்தல் என்பது காதலன் தன் காதலியைவிட்டுப் பிரிந்திருக்கும் பொழுதும், கணவன் மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் பொழுதும், காதலி அல்லது மனைவி வருத்தத்தோடு, அந்தப் பிரிவின்போது, பொறுமையுடன் தன் காதலன் (கணவன்) வரவுக்காகப் காத்திருத்தல்.

இரங்கல் என்பது தன் காதலன் (கணவன்) குறிப்பிட்ட காலத்தில் வரத் தவறியதால், மனம் வருந்தி, உடல் மெலிந்து, அழுது தன் வருத்தத்தை வெளிபடுத்துவதைக் குறிக்கிறது.

ஊடல் என்பது கணவன்மீது மனைவி கோபமாக இருப்பதைக் குறிக்கிறது. சங்க இலக்கியத்தில் பெரும்பாலான பாடல்களில் மனைவியின் ஊடலுக்குக் காரணம் கணவனின் பரத்தையர் தொடர்பு. திருக்குறளில், நாம் காணும் கணவனுக்குப் பரத்தையர் தொடர்பு இல்லை. இங்கு, மனைவி விளையாட்டுக்காகத் தன் கணவன்மீது கோபித்துக்கொள்கிறாள்.

திருக்குறளில், காமத்துப்பாலில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல் மற்றும் ஊடல் ஆகிய ஐந்து நிகழ்வுகளும் பல அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கின்றன. களவொழுக்கத்தில் நிகழும் புணர்தல் பற்றிய கருத்துக்களை திருக்குறள் அதிகாரங்கள் 109, 110, 111, 112, 113 ஆகியவற்றிலும், களவொழுக்கத்தில் நிகழும் பிரிவைப் பற்றிய கருத்துக்களை அதிகாரங்கள் 114 மற்றும் 115 ஆகியவற்றிலும் காணலாம். இந்த அதிகாரங்களில் உள்ள குறட்பாக்களைத் தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கற்பொழுக்கத்தில் நடைபெறும் பிரிதல், இருத்தல், இரங்கல் மற்றும் ஊடல் ஆகிய நிகழ்வுகள் 116 முதல் 133 வரை உள்ள அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை கற்பொழுக்கம் என்ற அடுத்த கட்டுரையில் காணலாம்.

இக்கட்டுரையில், ஒரு சிறுகதைபோல் ஒரு காதலன் காதலி ஆகியோரின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை, களவியலில் உள்ள 70 குறட்பாக்களின் அடிப்படையில், என்னுடைய கற்பனையையும் கலந்து எழுதியுள்ளேன். அடுத்த கட்டுரையில், ஒரு கணவன் மனைவி ஆகியோரின் இல்லற வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை 116 முதல் 133 வரை உள்ள அதிகாரங்களில் உள்ள சில குறட்பாக்களின் அடிப்படையில் தொகுத்து ஒரு சிறுகதைபோல் எழுதியுள்ளேன்.

காதலர்களின் சந்திப்பு

ஓரு இளைஞன் வேட்டையாடச் செல்கிறான். சென்றவிடத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறான். அவளைக் கண்டவுடன் அவள்மீது காதல்கொள்கிறான். அவளை அடைய வேண்டுமென்று  எண்ணுகிறான். அவளுடைய அழகு அவனை வருத்துகிறது. அவளைக் கவனமாகப் பார்க்கிறான். அவளை நன்றாகப் பார்த்தவுடன் அவள் ரு தெய்வப்பெண்ணோ என்று அவனுக்கு ஒரு ஐயம் எழுகிறது. அவள் நடையைப் பார்த்தால் ஒரு மயில் அசைவதைப்போல் அவனுக்குத் தோன்றுகிறது. அவள் காதில் அணிந்திருக்கும் பெரிய கனத்த காதணிகளைப் பார்க்கிறான். இப்பொழுது, அவள் ஒரு தெய்வப்பெண்ணா, அல்லது மயிலா அல்லது பெரிய காதணிகளை அணிந்த மானுடப் பெண்தானா என்று தன் மனத்தில் ஐயம்கொண்டு கலக்கம் அடைகிறான்[2]. அவளும் அவனைப் பார்க்கிறாள். அவள் பார்வை, ஒரு தெய்வப்பெண் பெரும்படையோடு வந்து, அவனைத் தாக்குவதுபோல் அவனுக்குத் தோன்றுகிறது[3]. அவளுடைய பார்வையால் அச்சமடைந்த அந்த ஆடவன், “இதுவரை கூற்று என்று சொல்லப்படுகின்ற எமனை நான் அறிந்ததில்லை; ஆனால், இன்று, எமன் என்பவன் பெண்தன்மையுடன் கூடிப் பெரும்போர் செய்யும் கண்களை உடையவன் என்று அறிந்தேன்.”, என்று எண்ணுகிறான்[4].

 

அவன் பார்த்த அந்தப் பெண் மானுடப்பெண்தான் என்று ஓரளவுக்கு மனத்தில் தெளிவடைகிறான். ஆனால் அந்தப் பெண்ணின் கண்கள் தம்மைக் காண்பவர்களைக் கொல்லும் தோற்றத்தோடு இருப்பது அவளுடைய பெண்தன்மைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறதே என்று வியப்படைகிறான்[5]. அவளுடைய கண்களைப் பற்றிய நினைவு வந்தால், அவனுக்கு மீண்டும் ஒரு ஐயம் எழுகிறது.  இந்தப் மெல்லியலாளின் கண்கள் என்னைப் பார்த்தால், அவை ஒரு பெண்ணின் கண்கள்தான் என்று தோன்றினாலும், அந்தப் பார்வை என்னை வருத்துவதால், அவை ஒருக்கால் கூற்றுவனின் கண்களோ அல்லது, அந்தப் பார்வையில் உள்ள மருட்சியைப் பார்த்தால், அவை ஒரு மானின் கண்களோ என்று நினைக்கிறேன். அவள் பார்வையில் இந்த மூன்று தன்மைகள் எனக்குத் தோன்றுகின்றனவே!, என்று தனக்குத்தானே கூறிக்கொள்கிறான்[6]. அவன் அவளுடைய வளைந்த புருவங்களைப் பார்க்கிறான். அவை கூர்மையான அம்பை எய்வதற்காக வளைக்கப்பட்ட வில்லைப்போல், அவன்மீது அவளுடைய கூர்மையான பார்வையைச் செலுத்துவதற்காக வளைந்திருப்பதுபோல் அவனுக்குத் தோன்றுகிறது. அந்தப் புருவங்கள் வளையாமல் இருக்குமானால், அவள் கண்களால் தனக்கு நடுங்கத்தக்க துன்பங்கள் வாரா.” என்று எண்ணுகிறான்[7].

இதுவரை அவளுடைய கண்களில் மட்டுமே கவனம் செலுத்திய அந்த இளைஞன், அந்த இளம்பெண்ணின் மார்பகங்களை மறைத்திருக்கும் ஆடையைப் பார்க்கிறான். அது அவனுக்கு ஒரு மதயானைக்கு அணியப்பட்டிருக்கும் முகத்திரையைப்போல் தோன்றுகிறது[8]. அவளுடைய உறுப்பு நலன்கள் அவனை வருத்துவதால், அவன், “என்னுடைய வலிமையைப் பிறர் வாயிலாகக் கேட்டறிந்ததால் என்னுடன் போர்க்களத்திற்கு வந்து போர்செய்வதற்கு என்னுடய பகைவர்கள் அஞ்சுகிறார்கள். என்னுடைய அத்தகைய பெருவலிமை இப்பொழுது இப்பெண்ணின் ஒளிபொருந்திய சிறு நெற்றியின் அழகிற்குமுன் அழிந்துவிட்டதே[9]!,” என்று எண்ணித் திகைக்கிறான். அவள் அணிந்திருக்கும் அணிகலன்களைப் பார்க்கிறான். அவன் பார்வையால், அவள் நாணுகிறாள். பெண்மானைப் போன்ற இந்தப் பெண்ணுக்குச் செயற்கையாகச் செய்யப்பட்ட அணிகலன்கள் தேவையா என்று சிந்திக்கிறான்[10]. அந்தப் பெண்ணைப் பார்த்துத் தான் இவ்வளவு மகிழ்ச்சியடைவதை நினைத்துப் பார்க்கிறன். “உண்பவர்களுக்குத்தான் மது மகிழ்ச்சியைத் தரும் தன்மையுடையதே தவிர, காமத்தைப்போல், கண்டவுடன் மகிழ்ச்சி தராது[11].”, என்று காமத்தின் தன்மையை நினைத்து வியக்கிறான்.

குறிப்பறிதல்

முதல் நாள் அந்தப் பெண்ணைச் சந்தித்த இடத்திற்குச் சென்றால் அவளை மீண்டும் சந்திக்கலாம் என்று எதிர்பார்த்து அதே த்திற்குச் அந்த இளைஞன் செல்கிறான். அவன் எதிர்பார்த்தபடியே, அவளும் அங்கே வருகிறாள். அவளோடு அவள் தோழியும் வருகிறாள்.  அவன் அவளுடைய உள்ளத்தில் உள்ள குறிப்பை அறிந்துகொள்ள ஆவலுடையவனாக இருக்கிறான். இருவரும் தங்கள் பார்வையைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ”இவளுடைய மைதீட்டிய கண்களில் உள்ள பார்வைகள் இருவகையானவை. அவற்றுள் ஒன்று எனக்குத் துன்பம் தருகின்றது; மற்றொன்று, அந்தத் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துபோல் உள்ளது[12]. நான் காணாதபொழுதில் மறைவாகப் பார்க்கும் இவளுடைய கடைக்கண் பார்வை, இவளோடு அடையக்கூடிய  காம இன்பத்தில் பாதிக்கும் அதிகமானது[13]. நான் பார்க்காதபொழுது, இவள் என்னைப் பார்க்கிறாள்;  நாணத்தால் தலைகுனிகிறாள். அச்செயல் எங்கள் இருவருக்கும் இடையே அன்பு வளர்வதாற்காக அவள் வளர்க்கும் நீராகும்[14]. நான் வளைப் பார்க்கும்போது, இவள் நிலத்தைப் பார்க்கிறாள்; அதைக் கண்டு நான் வளைப் பாராதிருந்தால், இவள் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிகிறாள்[15]. நேருக்கு நேர் பார்க்காமல், ஒரு கண்ணைச் சுருக்கிக் கடைக்கண்ணால் என்னைப் பார்ப்பதைப்போலப் பார்த்துத் தனக்குள் மகிழ்கிறாள்[16].”, என்று எண்ணி அந்த இளைஞன் மகிழ்கிறான். தான் அவளைக் காதலிப்பதைப்போல் அவளும் தன்னைக் காதலிக்கிறாள் என்பதை அவளுடைய பார்வையிலிருந்து தெரிந்துகொள்கிறான். இதுவரை ஒருதலைக் காதலாக இருந்தது இப்பொழுது இருவருடைய மனம் ஒருமித்த காதலாக மாறியது.

 

அந்தப் பெண்ணுக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே காதல் மலர்வதை அந்தப் பெண்ணுடைய தோழி உணர்ந்தாள். அவர்களுடைய காதல் உண்மையானதா, அந்த இளைஞன் நம்பத் தகுந்தவனா, அந்தப்பெண் அவசரப்பட்டுக் காதல் வலையில் விழுந்தாளா என்பதையெல்லாம் தோழி அறிந்துகொள்ள விரும்பினாள். அதனால், அந்தப் பெண்ணிடம், “அவசரப்படாதே. அவன்மீது கோபித்துகொள்வதைப்போல் சற்று நடி. அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்.”, என்று கூறுகிறாள். அதைக் கேட்ட அந்தப் பெண், அந்த இளைஞனிடம் சற்றுக் கோபமாகப் பேசுவதைப்பொல் நடிக்கிறாள். அதைக் கண்ட இளைஞன், “உள்ளத்தில் உள்ள காதலை மறைத்துக்கொண்டு, புறத்தில் உடன்பாடில்லாதவர்போல அன்பில்லாத சொற்களைக் கூறினாலும், அவள் உள்ளத்தில் கோபமின்றி, அன்புகொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்[17].  சினமில்லாமல் சினங்கொண்டதுபோல் பேசும் பேச்சும், பகைவர்போல் பார்க்கும் பார்வையும், உறவில்லாதவர்போல் காட்டிக்கொண்டு, உள்ளே மனமொன்றிய காதலர்களின் உட்குறிப்புள்ள செயல்கள்தான்[18]. நான் அவளைப் பார்க்கும்பொழுது, என்மீது அன்புடன் மெல்லச் சிரிக்கிறாள்; அப்போது, அவள் உடலில் தோன்றும் அசைவுகளால், அவள் தோற்றத்தில், ஒரு தனித்த அழகு தோன்றுகிறது[19].” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு, அவள் அழகை நினைத்து இன்புறுகிறான். விளையாட்டுக்காகக் கோபப்படுவதுபோல் சற்று நேரம் அந்தப் பெண் நடித்தாலும், அவள் கோபம் மறைந்து, அந்த இளைஞனை முன்பின் தெரியாத ஒருவனைப் பார்ப்பதைப்போல், தோழிக்குத் தெரியாமல் பார்க்கிறாள். அவனும் அவளை மீண்டும் பார்க்கிறான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதைக் கண்ட தோழி, “முன்பின் அறியாதவர் போலப் பொதுப்பார்வையாகப் பார்த்துக்கொள்ளுதல் காதலரிடம் உண்டு[20]. காதலர் இருவருள் ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் ஒன்றுபடின், வாயினால் பேசும் பேச்சுக்களால் பயனில்லை[21].”, என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு, அவர்கள் உண்மையான காதலர்கள்தான் என்று முடிவு செய்கிறாள்.    

கூடி மகிழ்தல்

காதலர்கள் இருவரும் எவருக்கும் தெரியாமல் தனிமையில் சந்திக்கிறார்கள். அவளோடு உறவுகொள்ளும் பொழுதெல்லாம் அவன் கண்டும், கேட்டும், உண்டும், முகர்ந்தும், தொட்டும் அடைகின்ற ஐம்புல இன்பங்களும் வளிடத்தில் தான் பெறுவதாக உணர்கிறான்[22]. ”நோய்க்கு மருந்து நோயைத் தவிர வேறொரு பொருளாகத்தான் இருக்கும்; ஆனால், அழகிய அணிகலன்களை அணிந்த என் காதலியால் வந்த நோய்க்கு வளே மருந்தாவாள்[23]. அவளுடைய மெல்லிய தோள்களில் தூங்குவதைவிட, திருமாலின் உலகில் கிடைக்கும் இன்பம் இனிதாகுமோ? ஆகாது[24]. விலகினால் சுடும்; நெருங்கினால் குளிர்ச்சியானதாக இருக்கும்; இத்தகைய தீயை வள் எங்கிருந்து பெற்றாள்[25]?. அழகிய இதழ்கள் உள்ள பூக்களை அணிந்த கூந்தலையுடைய வள் தோள்கள், விரும்பிய போதெல்லாம் விரும்பிய பொருள்கள் கிடைத்து இன்பம் தருவதுபோல் இன்பம் அளிக்கின்றன[26]. அவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டுவதால், அவளுடைய தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டன போலும்[27]. அழகிய மாநித்தையுடைய அவளைத் தழுவுவது, என் வீட்டில் இருந்து என்னுடைய உணவைப் பலரோடும் பகிர்ந்து உண்பதுபோல் உள்ளது[28]. காதலர் இருவர் காற்று புக முடியாதபடி இடைவெளியின்றி இறுகத் தழுவிக்கொள்வது அவர்கள் இருவருக்கும் இன்பம் தருவதாகும்[29].  ஊடலும், ஊடல் போதுமென்று தெளிதலும், பின்னர் கூடி மகிழ்தலும் காதலுற்றவர்கள் அடையும் பயன்[30]. இச்சிவந்த அணிகலன்களையுடையவளோடு கூடுந்தோறும், நான் பெறும் காமவின்பம் கற்று அறிய அறிய முன்னிருந்த அறியாமையைக் கண்டதுபோல் உள்ளது[31].” என்று அவளோடு உறவுகொள்வதால் அவன் பெறும் இன்பத்தை எண்ணியெண்ணிப் பெருமகிழ்ச்சியடைகிறான்.

 

அந்த இளைஞனும் அவன் காதலியும் வெகுநேரமாகத் தனியே கூடிக் குலாவினார்கள். இரவு நேரம் வந்தது. அவன் காதலியை அவள் வீட்டார் தேடுவதற்குமுன் அவள் வீடு போய்ச்சேர வேண்டும். ஆகவே, அவளிடமிருந்து விடைபெற்று, அவனும் தன் வீட்டிற்குச் செல்கிறான். இரவு வேளை; நிலவு வெளிச்சம்; விண்மீன்கள் மின்னுகின்றன. அவன் செல்கின்ற பாதையோ சற்றுக் கரடுமுரடான மலைப்பகுதியைச் சார்ந்தது. அங்கே, எங்குப் பார்த்தாலும் அனிச்சம், குவளை, போன்ற நறுமணம் வீசும் நல்ல மலர்கள் நிறைந்திருந்தன. தன் காதலியின் மேனியின் மென்மை, மலரையொத்த கண்கள், அவள் சிற்றிடை, அழகிய முகம், அவளிடத்தில் உள்ள இயற்கையான மணம் இவற்றையெல்லாம் அவனால் மறக்கவே முடியவில்லை. ஆகவே, அவன் பலவிதமாக அவள் நலன்களை எல்லாம் நினைத்து நினைத்துக் கற்பனை செய்து மகிழ்கிறான்.

 

காதலன் காதலியைப் புகழ்தல்

அவன் அனிச்சப்பூக்களைப் பார்க்கிறான். அவற்றைப் பார்த்து, “அனிச்சமே! நீ வாழ்க! நீ மெல்லிய தன்மை உடைய பூ; ஆயினும், நான் மிகவும் விரும்பும் என் காதலி உன்னைவிட மென்மையானவள்[32].“ என்று இறுமாப்புடன் கூறுகிறான். அன்று மாலை, அவன் காதலி அனிச்சப்பூக்களைக் காம்புகளைக் களையாமல் தன் தலையில் அணிந்திருந்தது அவன் நினைவிற்கு வருகிறது. அந்தக் காம்புகளின் சுமையை அவள் சிற்றிடை  தாங்கிக்கொள்ள முடியாமல் முறிந்துவிடுமோ என்று எண்ணி வருந்துகிறான்[33]. அவள் மேனியின் மென்மை மீண்டும் அவன் நினைவிற்கு வருகிறது. தான் செல்கின்ற பாதையைப் போல் அவள் செல்கின்ற பாதையும் கரடுமுரடாக இருக்குமோ என்று எண்ணிப் பார்க்கிறான். “என் காதலி போன்ற மென்மையான பெண்களின் மெல்லிய பாதங்களுக்கு, அனிச்சப்பூக்களும் அன்னப்பறவையின் இறகுகளும்கூட நெருஞ்சி முட்கள் போல் துன்பம் அளிக்குமே” என்று எண்ணி, அவள் எப்படி வீடு போய்ச்சேருவாள் என்று வருத்தப்படுகிறான்[34].

மலர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் தன் மனம் மயங்குவது ஏன் என்று அவன் சிந்திக்கிறான். அவன் தன் நெஞ்சத்திடம், “என் நெஞ்சமே!  மலர்களைக் கண்டால், அவை என் காதலியின் கண்களுக்கு ஒப்பானவை என்று எண்ணி நீ மயங்குகிறாய். ஆனால், என் காதலியின் கண்களுக்கும் மலர்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு; மலர்கள் பலராலும் பார்க்கப்படுபவை; என் காதலியின் கண்களைக் காண்பவன் நான் மட்டும்தான்.” என்று கூறுகிறான்[35]. அந்த வேறுபாடு மட்டுமல்லாமல், அவள் கண்கள், உண்மையிலேயே மலர்களைவிட அழகானவை. ஆகவேதான், “குவளை மலர்கள் என் காதலியின் ண்களைக் கண்டால், தாம் அவள் கண்களுக்கு ஒப்பானவை அல்ல என்று அறிந்து நாணித் தலைகுனிகின்றன.”, என்று நினைக்கிறான்[36].

 அவள் கண்கள் மட்டும்தான் அழகானவையா? அவள் உடல் உறுப்புகள் அனைத்துமே அழகுக்கு இலக்கணமாகத் திகழ்வதை நினைவு கூர்ந்த காதலன், “மூங்கிலைப் போன்ற தோளினை உடைய என் காதலியின் உடல் மாந்தளிர் நிறம், பற்கள் முத்துப் போன்றவை, உடலில் இயற்கையான நறுமணம் மற்றும் அவள் மைதீட்டிய கண்களோ வேலைப் போன்றவை” என்று தனக்குள் கூறி மகிழ்ச்சி அடைகிறான்[37].

 இவ்வாறு காதலியின் நலன்களை எண்ணியெண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்த இளைஞன், ஓரிடத்தில் சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்துப் படுக்கிறான்.  வானத்தில் விண்மீன்கள் மின்னுவதைப் பார்த்தவுடன், வீட்டிற்குச் சென்றுகொண்டிருக்கும் தன் காதலியை அந்த விண்மீன்கள் பார்த்து, அவளுடைய முகத்திற்கும் வானத்தில் ஒளிறும் திங்களுக்கும் வேறுபாடு தெரியாமல் அவை  தமது நிலையிலிருந்து தடுமாறுகின்றனவோ என்று வியக்கிறான்[38]. அந்த விண்மீன்களுக்கு என்ன தெரியும்? முன்பு குறைந்தும் பின்னர் நிறைந்தும் விளங்குகின்ற திங்களைப்போல் தன் காதலியின் முகத்தில் களங்கம் இல்லை என்பது அந்த விண்மீன்களுக்குத் தெரியாத காரணத்தால்தான் அவை தடுமாறுகின்றன என்ற கருத்து அவனுக்குத் தோன்றுகிறது[39]திங்களைவிடத் தன் காதலி அழகில் சிறந்தவள் என்பதை அந்தத் திங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, வானத்தைப் பார்த்து, “வெண்ணிலவே! நீ வாழ்க! என் காதலியின் முகம்போல் ஒளி வீசும் வல்லமை பெறுவாயானால், நீயும் என்னால் விரும்பப் படுவாய்” என்று கூறுகிறான்[40]முடிவாக, வானத்தில் உள்ள வெண்ணிலவை நோக்கி, “ நிலவே! மலர் போன்ற கண்களையுடைய என் காதலியின் முகத்தை ஒத்திருக்க நீ விரும்பினால், பலரும் காணுமாறு தோன்றாதே! என் காதலியைப் போல் நான் மட்டும் காணுமாறு தோன்றுவாயாக!” என்று எச்சரிக்கிறான்[41].

 காதலனின் பார்வையில் காதலின் சிறப்பு

தலைவன் தன் காதலியோடு அடைந்த இன்பத்தை எண்ணிப் பார்க்கிறான். அவளோடு அவன் கூடியிருந்தபொழுது நிகழ்ந்தவை அனைத்தும் அவன் மனத்திரையில் காண்கிறான். குறிப்பாக, அவளை முத்தமிட்ட காட்சியும் அதனால் அவன் பெற்ற இன்பமும் அவனால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டதை உணர்கிறான். “அந்த மென்மொழியாளின் வெண்மையான பற்களில் ஊறிய நீர் பாலொடு தேன் கலந்தாற்போல் இருந்தது.” என்று எண்ணியெண்ணி இன்புறுகிறான்[42]. தன் காதலியின் உருவத்தை தன் கண்களில் நிரந்தரமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால், அவ்வாறு செய்வதற்குத் தன் கண்ணின் கருமணியின் நடுவே உள்ள மற்ற உருவங்கள் தடையாக இருப்பதாக எண்ணி, “என் கண்ணின் கருமணியில் தங்கியிருக்கும் பாவையே! நீ அங்கிருந்து போய்விடு. ஏனெனில், நான் விரும்பும் அழகிய நெற்றியையுடையவளை நான் என் கண்களில் வைத்துக்கொள்வதற்கு நீ இருக்கும் இடம் தேவை[43].”, என்று கூறுகிறான். அவளைத் தன் கண்களில் வைத்துக்கொண்டால், அவளை அடிக்கடி நினைவு கொள்ளலாம் என்று எண்ணுகிறான். ஆனால், “அவளை மறந்தால்தானே நினைக்க முடியும்; நான் ஒரு விநாடிகூட அவளை மறப்பதில்லையே; பின் எப்படி அவளை நினைக்க முடியும்.”, என்று தனக்குத்தானே கூறிக்கொள்கிறான்[44]. அவன் காதல் சாதரணமானது அன்று. அது மிகவும் உண்மையான காதல். அவள்மீது அவனுக்குள்ள காதல், வெறும் காம உணர்ச்சி அன்று. அது அன்பின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த காதல். ஆய்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த அவன் காதலி அவனோடு இருக்கும்பொழுது அவன் வாழ்வது போலவும் அவள் அவனை விட்டு நீங்கும்போது உடலிலிருந்து உயிர் நீங்குவது போலவும் அவனுக்குத் தோன்றுகிறது[45]. அவள் இல்லாமல் அவனால் வாழ முடியாது என்ற அளவுக்கு அவர்களிடையே காதல் வலிவடைந்துவிட்டது. தன் காதலிக்கும் தனக்கும் இடையே உள்ள காதல் உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பைப் போன்றது என்று அவன் முடிவு செய்கிறான்[46]

 

 காதலியின் பார்வையில் காதலின் சிறப்பு

தலைவியும் தலைவனைப்போலவே காதல் மிகுந்தவளாய், அவர்களுக்கிடையே உள்ள காதலின் சிறப்பை எண்ணியெண்ணிப் பெருமைப்படுகிறாள். காதலன் அவள் கண்களிலிருந்து வெளியே போகாமல் இருப்பதாகவும், அவள் கண்களை இமைத்தால்கூட அவன் துன்பம் அடையாமல் நுட்பமாகத் தன் கண்களிலேயே இருப்பதாகவும் கற்பனை செய்கிறாள்[47]. காதலன் அவள் கண்களில் இருப்பதனால், அவள் கண்ணை மூடிக் கண்ணுக்கு மை எழுதினால் அவன் மறைந்துவிடுவானோ என்ற அச்சத்தினால், கண்ணுக்கு மையெழுதுவதை விட்டுவிட்டாள்[48]. அது மட்டுமல்ல. தன் காதலன் தன் நெஞ்சத்தில் இருப்பதால், தான் வெப்பமான உணவை உண்ணுவதற்கு அஞ்சுகிறாள்[49]. கண்களை இமைத்தால் அங்கிருக்கும் காதலன் மறைந்துவிடுவான் என்று அஞ்சி, அவள் கண்களை இமைக்காமல் இருப்பதைப் பார்த்த அவ்வூர் மக்கள், அவள் காதலன் அவள் மீது அன்பில்லாத காரணத்தினால் அவள் தூங்கமல் கண்விழித்தே இருக்கிறாள் என்று கதை கட்டுகிறார்கள்[50]. அவ்வூர் மக்களுக்கு அவள் காதலைப் பற்றி என்ன தெரியும்? அவள் காதலன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக அவள் உள்ளத்தில் இருப்பதை அறியாத அவ்வூர் மக்கள், அவன் அவள்மீது அன்பில்லாமல் அவளைப் பிரிந்து வாழ்கிறான் என்று பிதற்றுகிறார்கள்[51].

 சந்திக்க முடியாததால் தோன்றிய வருத்தம்

அந்த இளைஞன் தன் காதலியைக் கண்டு அவளோடு கூடி இன்பம் அனுபவித்த பிறகு, அவள் நினைவாகவே இருப்பதையும் அவளைத் திருமணம் செய்துகொள்வதற்குத் தெளிவான வழி தெரியாமல் குழப்பத்தில் இருப்பதையும் எண்ணி வருந்துகிறான். காமத்தை அனுபவித்துப் பின்னர் அது கிடைக்கப் பெறாமல் வருந்துபவர்களுக்கு மடலேறுவதைத்தவிர[52] வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வருகிறான்[53]. தான் விரும்பிய காதலியை அடைய முடியாதால் தன் உடலும் உயிரும் நாணத்தை நீக்கிவிட்டு, மடலேறத் துணிந்ததை எண்ணிப் பார்க்கிறான்[54]. இந்தக் காதலில் ஈடுபடுவதற்குமுன், தான் பழிக்கு அஞ்சும் பண்புடையவனாகவும், ஆண்மை மிக்கவனாகவும் இருந்ததும், தற்பொழுது அவற்றை இழந்து மடலேறும் நிலைக்கு வந்துவிட்டதையும் எண்ணித் தன்மீது தானே இரக்கப்படுகிறான்[55]. ”வாழ்க்கை என்னும் ஆற்றைக் கடப்பதற்கு நாணமும் நல்லாண்மையும் மிகவும் அவசியம் என்று எண்ணி இருந்தேனே! அவற்றை எல்லாம் இந்தக் காமம் என்னும் பெருவெள்ளம் அடித்துக்கொண்டு போகிறதே! நான் என்ன செய்வேன்?”, என்று மனக்கலக்கம் அடைகிறான்[56].  இந்த மாலைவேளையில் மடலேறுவதை எண்ணித் தான் துன்பம் அடைவதற்குக் காரணம் மலர்மாலையைத் தன் சிறிய கைகளில் வளையல்போல் அணிந்திருந்த தன் அழகிய காதலிதான் என்று நினைக்கிறான்[57]. மாலைவேளை கடந்து நள்ளிரவு வந்துவிட்டது. தன் காதலியை அடைய முடியாத காரணத்தினால் தூங்க முடியாமல் மடலேறுவதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறான்[58].

 தான் அல்லும் பகலும் தன் காதலியின் நினைவாக இருப்பதையும், காமத்தால் துன்பப்படுவதையும், நாணத்தைத் துறந்து மடலேறத் துணிந்ததையும் எண்ணிப் பார்த்தவனுக்குத், தன் காதலியும் தன்னைப்போல் காமத்தால் வருந்திக்கொண்டுதானே இருப்பாள் என்ற எண்ணம் தோன்றுகிறது. தான் விரும்பிய காதலியை அடைவதற்கு ஆண்கள் மடலேறுவது வழக்கம். ஆனால், கடல்போல் எல்லையில்லாத காமத்தால் வருந்தினாலும், அதை நீக்குவதற்கு மடலேறாமல் பொறுமையோடு இருக்கும் பெண்களின் பெருமையை எண்ணித் தன் மனத்துக்குள் தன் காதலியைப் பாராட்டுகிறான்[59].

இவ்வாறு அந்த இளைஞன் ஆற்றாது அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அவன் காதலியும் அவனை நினைத்து வாடுகிறள். தன் காதல் இப்படிப் பலரும் அறியும் நிலைக்கு வந்துவிட்டதே என்று அவள் வருந்துகிறாள்; தன் காதல்மீது கோபமுறுகிறாள். “நான் மனத்தை அடக்கிக்கொள்ள முடியாதவள், இரக்கத்திற்கு உரியவள் என்றுகூடக் கருணை காட்டாமல் என் காதல் பலரறிய அம்பலமாகிவிட்டதே!”, என்று எண்ணுகிறாள்[60]. ”இந்தக் காமவுணர்வு மிகவும் பொல்லாதது. என் காதல், தன்னை இவ்வூரார் எவரும் அறிந்திலர் என்று கருதி, அவர்களுக்குத் தன்னை அறிவித்துக்கொள்ளவேண்டுமென்று, நாற்சந்தி கூடும் தெருவிற்கு வந்து மயங்கிச் சுழல்கிறது.”, என்று நினைத்து வேதனைப்படுகிறாள்[61]. மறைவாக இருந்த காதல் ஊரறிந்த செய்தியாகிவிட்டது.  “இவ்வூர் மக்கள் அறிவில்லாதவர்கள்; நான் படும் துன்பத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் அந்தத் துன்பத்தை அனுபவித்திருக்க மட்டார்கள். ஆகவேதான் என் கண்ணெதிரேயே என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.”, என்று ஆத்திரத்தில் தனக்குத்தானே கூறிக்கொள்கிறாள்[62].

ஊராரின் பழிச்சொற்கள்

ஊர்மக்கள் பலரும் பலவிதமாக இக்காதலர்களைப் பழித்துப் பேசுகிறார்கள்.  இவ்வாறு ஊரார் பேசும் பேச்சிற்கு அலர் என்று பெயர். அலர்தல் என்றால் விரிதல் அல்லது மலர்தல் என்று பொருள்.

 

காதல் வயப்பட்டவர்கள் தங்கள் காதலைப் பற்றி மற்றவர்களிடத்தில் அதிகமாகப் பேச முடியாது. நெருங்கிய நண்பர்களிடத்தில் ஒரு சில செய்திகளை மட்டுமே நாகரிகமாகக் கூறுவதுதான் நமது பண்பாடு. ஆனால், ஊர்மக்கள் பேசும் அலர் காதலர்களுக்குக் கசப்பும் இனிப்பும் கலந்த ஒன்றாகும். மற்றவர்கள் தம்மைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார்களே என்ற வருத்தத்தால் கசப்பாகவும், அந்த அலரினால் காதல் பலருக்கும் தெரியவருவதால், தங்கள் கள்ளக் காதல் திருமணத்தில் முடியும் என்ற நம்பிக்கையால் இனிமையானதாகவும் இருக்கும்.

 

எங்கள் காதலைப் பற்றி இவ்வூர் மக்கள் அலரெழுப்பிய காரணத்தால் என் உயிர் நிலைபெறும். நான் செய்த நல்வினையின் பயனால் அதை பலரும் அறிந்திலர்[63].  மலர்போன்ற கண்களையுடைய என் காதலி எனக்குக் கிடைத்தற்கு அருமையானவள் என்பதை இவ்வூரார் அறியாமலே அலரை எழுப்பி எனக்கு உதவினர்[64]. எங்கள் காதலை இவ்வூரார் அறிந்ததனால் உண்டான அலர் எனக்கு ஏற்றதோ? ஏற்றதுதான். ஏனெனில், நான் பெற நினைத்த அவளுடைய உறவைப் பெறாமலே பெற்றதை ஒத்த தன்மையை ந்த அலர் தருகிறது[65]. ஊரார் கூறும் அலரினால் என் காதல் வளர்கிறது; அது இல்லையென்றால், என் காதல் சுருங்கிவிடும்[66]. கள்ளுண்பவர்கள் கள்ளுண்டு களிக்கும்போதெல்லாம் கள்ளை மேலும் விரும்புவதுபோல், அலர் பரவுந்தோறும், காதலுணர்வு உடையவர்க்கு அக்காதல் மிகவும் இனியதாகிறது[67].”, என்று அலரைப் பற்றியும் தன் காதலைப் பற்றியும் அந்தக் காதலன் சிந்திக்கிறான்.

 

நான் காதலரைக் கண்டது ஒரு நாளே; அதனாலாகிய அலர் திங்களைப் பாம்பு விழுங்கியதைப்போல் அனைவருக்கும் தெரிந்துவிட்டது[68]. என்னுடைய காமநோயாகிய பயிர் இவ்வூர் மக்கள் கூறும் அலரை எருவாகவும், அது கேட்டு, என் அன்னை கூறும் சொற்களை நீராகவும் கொண்டு வளர்கின்றது[69]. ஊரார் கூறுகின்ற அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று அவர்கள் கருதினால் அது நெருப்பை நெய்யால் அணைத்துவிடலாம் என்று எண்ணுவதைப் போன்றது[70]. அன்று, “நான் உன்னை விட்டுப் பிரியேன். அஞ்சுவதை விடு.”, என்று என் காதலர் சொன்னார். ஆனால், இன்றோ பலரும் காணும்படி, அவர் என்னைவிட்டு நீங்கியபின், நான் இவ்வூரார் கூறும் அலர்க்காக நாணுதல் தகுமோ[71]? நான் விரும்புகின்ற அலரை இவ்வூரார் கூறுகின்றனர். ஆகவே, என் காதலர், நான் வேண்டுவதற்கு இணங்குவார்[72].” என்று தன் தோழியிடம் காதலி கூறுகிறாள். அதாவது, தன் காதலன் தன்னை விரைவில் மணந்துகொள்வான் என்ற தன் நம்பிக்கையைத் தன் தோழியிடம் அந்தக் காதலி கூறுகிறாள். திருமணம் விரைவில் நடைபெறும் என்பதில் காதலனும் உறுதியாக இருக்கிறான்.

 

முடிவுரை

வேட்டையாடச் சென்ற இளைஞன் ஒருவன் ஒரு இளம்பெண்ணைப் பார்க்கிறான். அவள் அழகைக் கண்டு அவன் மயங்குகிறான். அவனும் அவளும் தங்கள் பாரவையைப் பரிமாறிக்கொண்டு தங்கள் காதலைக் குறிப்பால் அறிந்துகொள்கிறார்கள். இருவரும் தனித்துக் கூடி இன்பம் அனுபவிக்கிறார்கள். கூடி மகிழ்ந்த காதலன், அந்தப் பெண்ணின் அழகைப் பாராட்டுகிறான். இருவரும் தங்கள் காதலின் சிறப்பை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள். பின்னர் அந்தப் பெண்ணின் காதல் அவளுடைய தாய்க்குத் தெரிய வந்தது. அதனால், அவள் வீட்டைவிட்டு வெளியே போய் தன் காதலனைச் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சந்திக்க முடியாததால் அந்தக் காதலனும் காதலியும் தங்கள் நாணத்தைவிட்டு மிகுந்த வருத்தம் அடைகிறார்கள். அவர்களுடைய காதலைப் பற்றிய செய்தி ஊராருக்குத் தெரியவந்தது. ஊரார் அந்தக் காதலர்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். அந்த இழிவான சொற்களால் காதலர்கள் வருத்தம் அடைந்தாலும், பிறருடைய பழிச்சொற்களால் அவர்களுக்குத் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

 

துணைநூல்கள்

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural). Emerald Publishing, Chennai

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், மதுரை: 1999

தமிழண்ணல். தொல்காப்பியம் – பொருளதிகாரம் பகுதி 1, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, சென்னை 600 108

தேவநேயப் பாவாணர், ஞா..  திருக்குறள்தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,சென்னை,

மாணிக்கம், வ. சுப. தமிழ்க் காதல். மெய்யப்பன் பதிப்பகம். 55, புதுத்தெரு, சிதம்பரம், தமிழ் நாடு 608001

பிரபாகரன், முனைவர் இர. குறுந்தொகை. காவ்யா பதிப்பகம், சென்னை 600 024

 



[1] . சுப. மாணிக்கம், தமிழ்க் காதல், பக்கம் - 43

[2] அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.                                                    (குறள் – 1081)

[3] நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.                                                   (குறள் – 1082)

[4] பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.                                                   (குறள் – 1083)

[5]கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்.                                                                (குறள் – 1084)

[6]கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து.                                                       (குறள் – 1085)

[7]கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

 செய்யல மன்இவள் கண்.                                                                   (குறள் – 1086)

[8]கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.                                                                 (குறள் – 1087)

[9]ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

 நண்ணாரும் உட்குமென் பீடு.                                                          (குறள் – 1088)

[10]பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

  அணியெவனோ ஏதில தந்து.                                                           (குறள் – 1089)

[11]உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

  கண்டார் மகிழ்செய்தல் இன்று.                                                     (குறள் – 1090)

[12]இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

 நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.                                            (குறள் – 1091)

[13]கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.                                                                 (குறள் – 1092)

[14] நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.                                                                       (குறள் – 1093)

[15] யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.                                                                (குறள் – 1094)

[16] குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்                                                            (குறள் – 1095)

[17]உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

  ஒல்லை உணரப் படும்.                                                                      (குறள் – 1096)

[18]செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

   உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.                                               (குறள் – 1097)

[19] அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்

   பசையினள் பைய நகும்.                                                                  (குறள் – 1098)

[20]ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

   காதலர் கண்ணே உள.                                                                        (குறள் – 1099)

[21]கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

  என்ன பயனும் இல.                                                                            (குறள் – 1100)

[22]கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

  ஒண்தொடி கண்ணே உள.                                                                 (குறள் – 1101)

[23]பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

   தன்நோய்க்குத் தானே மருந்து.                                                       (குறள் – 1102)

[24]தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

  தாமரைக் கண்ணான் உலகு.                                                             (குறள் – 1103)

[25]நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

  தீயாண்டுப் பெற்றாள் இவள்?                                                        (குறள் – 1104)

[26]வேட் ட பொழுதின் அவையவை போலுமே

  தோட் டார் கதுப்பினாள் தோள்.                                                     (குறள் – 1105)

[27]உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

  அமிழ்தின் இயன்றன தோள்.                                                           (குறள் – 1106)

[28]தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

  அம்மா அரிவை முயக்கு.                                                                  (குறள் – 1107)

[29]வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

  போழப் படாஅ முயக்கு.                                                                   (குறள் – 1108)

[30]ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

  கூடியார் பெற்ற பயன்.                                                                       (குறள் – 1109)

[31]அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

  செறிதோறும் சேயிழை மாட்டு.                                                     (குறள் – 1110)

[32]நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

  மென்னீரள் யாம்வீழ் பவள்.                                                            (குறள் – 1111)

[33]அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு

  நல்ல படாஅ பறை.                                                                             (குறள் – 1115)

[34]அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

  அடிக்கு நெருஞ்சிப் பழம்.                                                                (குறள் – 1120)

[35] மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

    பலர்காணும் பூவொக்கும் என்று.                                               (குறள் – 1112)

[36] காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

   மாணிழை கண்ணொவ்வேம் என்று.                                          (குறள் – 1114)

[37]முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

   வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.                                             (குறள் – 1113)

[38]மதியும் மடந்தை முகனும் அறியா

   பதியின் கலங்கிய மீன்.                                                                     (குறள் – 1116)

[39] அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

   மறுவுண்டோ மாதர் முகத்து.                                                          (குறள் – 1117)

[40] மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

   காதலை வாழி மதி.                                                                             (குறள் – 1118)

[41] மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

   பலர்காணத் தோன்றல் மதி.                                                            (குறள் – 1119)

[42]பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

   வாலெயிறு ஊறிய நீர்.                                                                                               (குறள் – 1121)

[43]கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

  திருநுதற்கு இல்லை இடம்.                                                             (குறள் – 1123)

[44]உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

  ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.                                                         (குறள் – 1125)

[45]வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

  அதற்கன்னள் நீங்கும் இடத்து.                                                        (குறள் – 1124)

[46]உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

   மடந்தையொடு எம்மிடை நட்பு.                                                 (குறள் – 1122)

[47]கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா

  நுண்ணியர்எம் காத லவர்.                                                                 (குறள் – 1126)

[48]கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

  எழுதேம் கரப்பாக்கு அறிந்து.                                                          (குறள் – 1127)

[49]நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

 அஞ்சுதும் வேபாக் கறிந்து.                                                                (குறள் – 1128)

[50]இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

   ஏதிலர் என்னும் இவ் வூர்.                                                                (குறள் – 1129)

[51]உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

   ஏதிலர் என்னும் இவ் வூர்.                                                                (குறள் – 1130)

[52] மடலேறுதல்: காதலன் தன் உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு, தலையில் எருக்கம் பூவாலான மாலையை அணிந்துகொண்டு, காதலியின் உருவம் வரைந்த படத்தில் அவள் பெயரை எழுதிக்கொண்டு, அப்படத்தைக் கையிலேந்தி, பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரை போன்ற உருவத்தின்மீது ஏறி அமர்ந்துகொண்டு, அவனை ஊர்ச்சிறுவர்கள் ஊர்வலமாகத் தெருத்தெருவாக இழுத்துச் செல்லும் நிகழ்வு மடலேறுதல் என்று அழைக்கப்பட்டது. மறைமுகமாக இருந்த காதலர்களின் காதல், காதலன் மடலேறுவதால் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியவரும். அதனால், அவன் காதலி அவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்போஅல்லது அவள் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கும் வாய்ப்போ கிடைக்கும். மடலேறுதல் என்பது ஒரு நாணத் தகுந்த இழிந்த செயலாகக் கருதப்பட்டது.

 

[53]காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

  மடலல்லது இல்லை வலி.                                                               (குறள் – 1131)

[54]நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

    நாணினை நீக்கி நிறுத்து.                                                                  (குறள் – 1132)

[55]நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

  காமுற்றார் ஏறும் மடல்.                                                                     (குறள் – 1133)

[56]காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

   நல்லாண்மை என்னும் புணை.                                                     (குறள் – 1134)

[57]தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

   மாலை உழக்கும் துயர்.                                                                      (குறள் – 1135)

[58]மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

  படல்ஒல்லா பேதைக்கென் கண்.                                                  (குறள் – 1136)

[59]கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

  பெண்ணின் பெருந்தக்க தில்.                                                          (குறள் – 1137)

[60]நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

  மறையிறந்து மன்று படும்.                                                               (குறள் – 1138)

[61] அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.                                                                 (குறள் – 1139)

[62] யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.                                                                  (குறள் – 1140)

[63] அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.                                                                 (குறள் – 1141)

[64] மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.                                                                  (குறள் – 1142

[65] உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.                                                           (குறள் – 1143

[66] கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.                                                       (குறள் – 1144)

[67] களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.                                                         (குறள் – 1145)

[68] கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.                                                     (குறள் – 1146)

[69] ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்.                                                                          (குறள் – 1147)

[70] நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.                                                                     (குறள் – 1148)

[71] அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை.                                                (குறள் – 1149)

[72] தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை எடுக்கும்இவ் வூர்.                                     (குறள் – 1150)

 

2 comments:

  1. Please add more essay's on thirukural.

    ReplyDelete
  2. Dear Anbu,
    Thank you for your interest in my blogs. At present, I am involved in a few other projects. As time permits, I will add more essays. I would like to let you know that the essays in this Blog have been delivered as lectures. These lectures are available on YouTube. If you search under முனைவர் பிரபாகரன், you will be able to find them. Also, the essays in this blog are going to be released as a book in October 2021.

    ReplyDelete